லஞ்ச புகார்.. சார்-பதிவாளர் அலுவலகத்தில் புகுந்த ஊழல் தடுப்பு போலீசார்.. அடுத்து நடந்த சம்பவம்!
Kalugumalai Sub Registrar Office: தூத்துக்குடி மாவட்டத்தில் கழுகுமலை சார் பதிவாளர் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், கணக்கில் வராத ரூ.4.48 லட்சத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், சார் பதிவாளரை கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை மேல பஜார் பகுதியில் சார்- பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் கழுகுமலை மட்டுமின்றி சுற்று வட்டார 36 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பல்வேறு பதிவு பணிக்களுக்காக தினந்தோறும் வந்து செல்கின்றனர். அதன்படி, ஒவ்வொரு நாளும் குறைந்தது 10- க்கும் மேற்பட்ட ஆவணங்கள் மற்றும் முகூர்த்த நாட்களில் 30- க்கும் மேற்பட்ட ஆவணங்களும் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இந்த பணிகளுக்காக வருகை தரும் பொதுமக்களிடம் அதிகாரிகள் லஞ்சம் பெறுவதாக தூத்துக்குடி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் சென்றதாக கூறப்படுகிறது. அதன்படி, தூத்துக்குடி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் பீட்டர் பால் தலைமையில், ஆய்வாளர் அனிதா, உதவி ஆய்வாளர் தளவாய் ஜம்புநாதன், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் பாண்டி, சுந்தரவேல் உள்ளிட்ட போலீசார் சார் பதிவாளர் அலுவலகத்தில் அதிரடியாக நுழைந்தனர்.
அறைகளின் கதவுகளை மூடி போலீசார் சோதனை
அப்போது, அலுவலகத்தில் உள்ள கதவுகள் அனைத்தையும் மூடி, ஒவ்வொரு அறைகளில் வைக்கப்பட்டிருந்த ஆவணங்கள் உள்ளிட்டவற்றை சல்லடை சல்லடையாக சோதனை செய்தனர். இதே போல, அலுவலகத்தின் உள்பகுதி மற்றும் வெளிப்பகுதிகளில் நிறுத்தப்பட்டிருந்த அதிகாரிகளின் வாகனங்களில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். சுமார் 2 மணி நேரமாக நடைபெற்ற அதிரடி சோதனையில் சார்-பதிவாளர் அலுவலகத்துக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த அதிகாரியின் வாகனத்தில் கட்டு கட்டாக பணம் இருந்தது தெரியவந்தது. இதில், ரூ.4 லட்சத்து 48 ஆயிரத்து 500 ரொக்கம் இருந்தது.
மேலும் படிக்க: திருச்சியில் மாணவர்களிடயே மோதல்.. 13 வயது சிறுவன் பலி – பரபரப்பு சம்பவம்




சார்- பதிவாளர் மற்றும் ஊழியர்களிடம் போலீசார் விசாரணை
இதை தொடர்ந்து, அந்த பணத்தை பறிமுதல் செய்த போலீசார் சார்-பதிவாளர் செல்லப்பாண்டியன் மற்றும் அலுவலக ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். இதில், அந்த பணம் கணக்கில் வராத பணம் என்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, சார்- பதிவாளர் செல்ல பாண்டியனை ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். இதைத் தொடர்ந்து, அவர் மீது ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
கழுகுமலை பகுதியில் பெரும் பரபரப்பு
அவரிடம், தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், சார்- பதிவாளர் அலுவலகத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்து வருவதாகவும் போலீசார் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டு இருந்தது. சார் பதிவாளர் அலுவலகத்தில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்பு போலீசாரின் இந்த அதிரடி சோதனை மற்றும் கணக்கில் வராத கட்டு கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் கழுகுமலை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க: ‘உங்களை டிஜிட்டல் கைது செய்கிறோம்’ – ஒரு அழைப்பில் ரூ.10 லட்சம் பறித்த சைபர் கும்பல்