ராஜினாமா செய்ய மாட்டேன்! – மதிமுக எம்எல்ஏ அறிவிப்பால் பரபரப்பு – என்ன நடந்தது?
திமுக கூட்டணியில் இருந்து விலகுவது என மதிமுக பொதுக்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் மதிமுக எம்எல்ஏகள் 2 பேருமே பங்கேற்காதது சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் மதிமுக எம்எல்ஏ ராசேந்திரன் ராஜினாமா செய்ய மறுப்பு தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சென்னை, ஜூன் 27 : திமுக கூட்டணியில் இருந்து விலகுவது என மதிமுக பொதுக்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் மதிமுக எம்எல்ஏகள் 2 பேருமே பங்கேற்காதது சலசலப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த வைகோ, 2 மதிமுக எம்எல்ஏகளை ராஜினாமா செய்ய சொன்னதாகவும், 2 பேரையும் வெற்றி பெற செய்வது தனது பொறுப்பு என முதல்வர் விஜய் உத்தரவாதம் அளித்துள்ளதாகவும் தெரிவித்தார். மதிமுக எம்எல்ஏகள் 2 பேரும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வென்ற நிலையில் 2 பேரையும் ராஜினாமா செய்ய வைக்க முடிவெடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
ராஜினாமா செய்ய மதிமுக எம்எல்ஏ மறுப்பு
இந்த நிலையில் மதிமுக எம்எல்ஏ இராசேந்திரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கட்சி, சாதி, மதம் கடந்து வெற்றி பெறச் செய்த கடையநல்லூர் தொகுதி மக்கள் உணர்வுகளை மதித்து, பதவி விலக முடியாது என வைகோவிடம் தெரிவித்துவிட்டேன். அவசரம் வேண்டாம். 6 மாதங்கள் பொறுத்திருப்போம் என நான் கூறியதை அவர் ஏற்கவில்லை என தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க : பாக்யராஜ் மறைவு.. முதல்வர் விஜய் முதல் திருமாவளவன் வரை தலைவர்கள் உருக்கமாக இரங்கல்!




இதுகுறித்து அவர் தனது அறிக்கையில், அன்புத் தலைவர் வைகோ உங்களை உண்மையாக நேசிக்கிறேன். கட்சி, சாதி, மதம் கடந்து நம்மை வெற்றிபெறச்செய்த கடையநல்லூர் தொகுதி மக்கள் நாள்தோறும் என்னிடம் வெளிப்படுத்தி வருகின்ற உணர்வினை மதித்தும், தலைவர் வைகோ மீதோ, சட்டமன்ற உறுப்பினரான என் மீதோ களங்கம் படர்வதைத் தவிர்க்கும் பொருட்டும் பதவி விலகல் என்ற முடிவை மேற்கொள்ள வேண்டாம் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தங்கள் அறிவுரைப்படி சட்டமன்றத்தில் மறுமலர்ச்சி தி.மு.க. கட்சி உணர்வோடு நான் இயங்கி வருவதையும், பேசியதையும் பாராட்டிச் சொன்னீர்கள். எனது சட்டமன்றச் செயல்பாடுகள் தகுதி நீக்கத்திற்கு வழிவகுத்தால் மகிழ்ச்சியுடன் பதவியைத் துறந்து மக்களிடம் முறையிடுவோம். இப்போது அவசரம் வேண்டாம். குறைந்தபட்சம் ஆறு மாதம் பொறுத்திருப்போம்.
தவிர, கூட்டணி குறித்து தாங்களும்,கட்சியும் எடுக்கும் முடிவை மதிக்கிறேன். மேற்கண்ட தகவல்களையும், இன்னும் சில பல செய்திகளையும் ஜூன் 26, 2026 நேற்று பிற்பகல் 2 மணிக்கு தாயகத்தில் தலைவர் வைகோ அவர்களிடம் கண்ணீருடன் முறையிட்டேன் என்றார்.
இதையும் படிக்க : முதல்வர் விஜய் ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிவிட்டார்.. அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கும் அந்த இருவர் யார்? வில்சன் எம்பி ஆவேசம்!
அதன் பின்னர் இரவு தலைவர் வைகோவிடம் இருந்து கிடைக்கப்பெற்ற உத்தரவை, பொதுக்குழுவில் என்னால் செயல்படுத்த இயலாது என்பதால் பொதுக்குழுவில் நான் கலந்து கொள்ளவில்லை என்பதை கழகப் பொருளாளர் மூலம் தலைவர் கவனத்திற்கு சொல்லி உள்ளேன். 42 ஆண்டுகளாக தலைவர் வைகோ அவர்கள் மீது நான் வைத்திருக்கும் அன்பும், விசுவாசமும் உண்மையானது. என்றார்.
அதேபோல் “வாக்களித்த மக்கள் பெருமைப்படுகின்ற வகையிலும், வாக்களிக்காத மக்கள் இவருக்கு வாக்களிக்கத் தவறிவிட்டோமே என்று நினைக்கின்ற வகையிலும் எனது செயல்பாடுகள் இருக்கும் என்று தொகுதி மக்களிடம் நானும், தலைவர் வைகோ அவர்களும் பேசி ஏற்படுத்தி வைத்திருக்கும் நம்பிக்கையும் உண்மையானது. எஞ்சியுள்ள நம் வாழ்வில் எவ்வித களங்கமும் சுமக்க வேண்டாம் என்பது என் தாழ்மையான கருத்து.. தலைவரே எனது மேற்கண்ட கருத்துகள் உங்கள் நலனையும் உள்ளடக்கியது என அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.