மனைவி இல்லாத வாழ்க்கையா? மதுரவாயலில் சோகத்தில் முடிந்த குடும்பத் தகராறு!
Chennai Crime : சென்னையில் குடும்ப தகராறில் காதல் மனைவி பிரிந்து சென்ற மன வேதனையில் ஆட்டோ ஓட்டுநர் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக மதுரவாயல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை மாவட்டம், மதுரவாயல் அருகே உள்ள ஆலப்பாக்கம் அஷ்டலட்சுமி நகர் பகுதியை சேர்ந்தவர் ஞானசேகரன். இவரது மகன் மணிகண்டன் ( 24 வயது). ஆட்டோ ஓட்டுனரான இவர், இதே பகுதியை சேர்ந்த ஸ்ரீமதி என்பவரை காதலித்து வந்தார். இவர்கள் இருவரும், கடந்த 5 மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில், சம்பவத்தன்று இரவு தம்பதி இருவரும் வீட்டில் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது, திடீரென அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில், ஆத்திரம் அடைந்த ஸ்ரீமதி தனது கணவர் மணிகண்டனிடம் கோபித்துவிட்டு தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார். காதல் மனைவி பிரிந்து சென்றதால் மணிகண்டன் கடும் மன உளைச்சலுக்கு ஆளானதாக கூறப்படுகிறது. மேலும், தன்னுடன் வருமாறு மனைவியை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு அழைத்துள்ளார். ஆனால், அதனை ஸ்ரீமதி ஏற்கவில்லை என்று தெரிகிறது.
நண்பரை தொடர்பு கொண்டு தற்கொலை செய்வதாக..
அத்துடன், அவரது தாய் வீட்டுக்கு சென்று ஸ்ரீமதியை தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு மணிகண்டன் கூறியதாக தெரிகிறது. ஆனாலும், மணிகண்டன் மீது உள்ள கோபத்தால் ஸ்ரீமதி அவருடன் செல்லவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், மேலும் மன வேதனை அடைந்த ஆட்டோ ஓட்டுனரான மணிகண்டன் தனது நண்பர்களிடம் இது குறித்து புலம்பி வந்ததாக தெரிகிறது. மேலும், ஒரு நண்பருக்கு போன் செய்து எல்லோரும் என்னை விட்டு சென்று விட்டனர். எனவே, நான் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன் என்று கூறிவிட்டு தொடர்பை துண்டித்துள்ளார்.
மேலும் படிக்க: பீகார் இளைஞர்களை கடத்தி பணம் பறிக்க முயற்சி.. ஆட்டோர் ஓட்டுநர்கள் 4 பேர் கைது.. பூக்கடை போலீசார் அதிரடி!




மின்விசிறியில் தூக்கு போட்ட ஆட்டோ ஓட்டுநர்
இதனால், அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர் உடனடியாக மணிகண்டன் வீட்டின் அருகே வசித்து வரும் நபர்களுக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் உடனடியாக மணிகண்டன் வீட்டுக்கு சென்று பார்த்தபோது கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. கதவை தட்டிப் பார்த்தும் கதவு திறக்கப்படவில்லை. இதனால், அவர்கள் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்த போது, மணிகண்டன் மின்விசிறியில் தூக்கு போட்ட நிலையில் இருந்தார். உடனே, அவரை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
மதுரவாயல் போலீசார் விசாரணை
அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். தொடர்ந்து, அவரது சடலம் பிரேத பரிசோதனை செய்வதற்காக கொண்டு செல்லப்பட்டது. இந்தச் சம்பவம் குறித்து மணிகண்டனின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் படிக்க: எம்எல்ஏக்கள் பிடிக்கும் வேலைகளை முதல்வர் விஜய் சளைக்காமல் செய்து வருகிறார்.. ஆர்.பி. உதயகுமார் கடும் தாக்கு!
தற்கொலை எண்ணத்தை தவிர்க்க
(தற்கொலை எதற்கும் தீர்வல்ல.. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு வர கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசலாம். மாநில உதவிமையம் : 104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் – 044 -24640050)