தூத்துக்குடி காவல் மரண விவகாரம்.. 2-வது நாளாக உறவினர்கள் போராட்டம்.. பிரேதப் பரிசோதனையில் வெளிவருமா உண்மை?
Thoothukudi custodial death Arunachalam: தூத்துக்குடி காவல் மரண விவகாரத்தில் அருணாச்சலம் உறவினர்கள் 2-வது நாளாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், நீதிபதி மற்றும் மருத்துவக் குழு மேற்பார்வையில் பிரேதப் பரிசோதனை நடைபெற்று வருகிறது. பிரேதப் பரிசோதனை முடிவுகள் வெளியாகும் வரை உடலை வாங்க மாட்டோம் என்பதில் உறவினர்கள் உறுதியாக உள்ளனர்.
தூத்துக்குடி, ஜூலை 24: தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட அருணாச்சலம் என்ற நபர் சந்தேகத்திற்குரிய முறையில் உயிரிழந்த சம்பவத்தைக் கண்டித்து, அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் 2வது நாளாகத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தூத்துக்குடி அமுதா நகர் பகுதியைச் சேர்ந்த அருணாச்சலம் என்பவரை, கடந்த ஜூலை 17 அன்று சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்றதாகக் கூறி, 120 மதுபாட்டில்களுடன் மூன்றாம் மைல் பகுதியில் வைத்துத் தென்பாகம் காவல்துறையினர் பிடித்துச் சென்று சிறையில் அடைத்தனர்.
மேலும் படிக்க: தூத்துக்குடி லாக்அப் டெத் சம்பவம்? சிசிடிவி ஆதாரத்துடன் காவல் துறை அதிரடி விளக்கம்.. முழு விவரம் என்ன!
மயங்கி விழுந்ததாக விளக்கம்:
அன்று மாலை 5:30 மணி அளவில் அவருக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டபோது அவர் நலமுடன் இருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், இரவு 8 மணி அளவில் அவர் காவல் நிலையத்திற்குள் மயங்கி விழுந்ததாகக் கூறி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர் உயிரிழந்துவிட்டதாகக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. காவல்துறையினர் தாக்கியதால் தான் அருணாச்சலம் உயிரிழந்தார் என அவரது உறவினர்கள் குற்றம்சாட்டி வரும் நிலையில், காவல்துறை தரப்பில் அருணாச்சலம் சிறைக்குள் மயங்கி விழுவது போன்ற சிசிடிவி (CCTV) வீடியோ காட்சி ஒன்று வெளியிடப்பட்டது.
ஆனால் அந்த வீடியோவில் அருணாச்சலம் இடது பக்கமாகச் சரிந்து விழுகிறார். எனினும், அவருக்கு தலையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருப்பதோ வலது பக்கம்! இந்த முரண்பாடு பல்வேறு பலத்த சந்தேகங்களை எழுப்பியுள்ளதாகக் குடும்பத்தினரும் சமூக ஆர்வலர்களும் குற்றம்சாட்டுகின்றனர்.
மேற்பார்வையில் பிரேதப் பரிசோதனை:
இந்த விவகாரத்தில் உண்மைத் தன்மையைக் கண்டறிய ஒரு நீதிபதி, 3 சிறப்பு மருத்துவர்கள் அடங்கிய குழு மற்றும் 2 வீடியோ பதிவுகளுடன் பிரேதப் பரிசோதனை செய்ய அறிவுறுத்தப்பட்டிருந்தது. நேற்று மாலை 6 மணிக்கு மேல் பிரேதப் பரிசோதனை செய்யக் கூடாது என்பதால் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இன்று காலை சூரிய வெளிச்சம் வந்தவுடன் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அருணாச்சலத்தின் உடல் பிரேதப் பரிசோதனை மையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுப் பரிசோதனை நடைபெற்று வருகிறது.
மேலும் படிக்க: மீண்டும் ஒரு லாக்அப் மரணம்? தூத்துக்குடியில் போலீசார் விசாரணையில் இளைஞர் உயிரிழப்பு.. நீதி கேட்டு உறவினர்கள் போராட்டம்!
சிபிஐ விசாரணைக்குக் கோரிக்கை:
அருணாச்சலத்தின் காவல் மரணம் குறித்துச் சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அரசியல் தலைவர்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். பிரேதப் பரிசோதனை முடிவுகள் வெளியாகும் வரை உடலை வாங்க மாட்டோம் என்பதில் உறவினர்கள் உறுதியாக நின்று 2-வது நாளாகப் போராடி வருவதால் தூத்துக்குடியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.