இந்த 5 மாவட்டங்களில் இன்று கனமழை வெளுக்கப்போகுது.. வானிலை ரிப்போர்ட் இதோ!!
Weather update: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரையில், பகல் நேரங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும், மாலை அல்லது இரவு நேரங்களில் மட்டும் ஒரு சில இடங்களில் மிதமான அல்லது கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை, ஜனவரி 11: தமிழகத்தில் சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்வதற்கான வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் (புயல் சின்னம்), மேற்கு–வடமேற்கு திசையில் நகர்ந்து, சனிக்கிழமை காலை காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக, வடகிழக்கு இலங்கை கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வலுவிழந்து. இது மேலும் மேற்கு–வடமேற்கு திசையில் நகர்ந்து, வடக்கு இலங்கை கடலோரப் பகுதிகளில், திரிகோணமலை மற்றும் யாழ்ப்பாணத்திற்கு (இலங்கை) இடையே முல்லைத் தீவுக்கு அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கரையைக் கடந்தது. இதுதொடர்ந்து மேற்கு திசையில் நகர்ந்து படிப்படியாக வலுவிழக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க: சென்னையில் இனி மரங்களை வெட்டினால் அவ்ளோதான்…மாநகராட்சி போட்ட புது ரூல்ஸ்!
5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு:
இதன் காரணமாக தமிழகத்தில் இன்று (ஜனவரி 11) சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதோடு, மாநிலத்தில் இதர மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு:
தொடர்ந்து, ஜனவரி 12, 2026 முதல் ஜனவரி 16, 2026 வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பதிவாக வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் பொங்கல் பண்டிகை தினத்தன்று மழை இருக்கலாம் எனத் தெரிகிறது.
சென்னை மழை நிலவரம்:
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரையில், பகல் நேரங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும், மாலை அல்லது இரவு நேரங்களில் ஒரு சில இடங்களில் மிதமான அல்லது கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அதிகபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: கரூரில் விஜய் பிரசார வாகனத்துடன் 2- ஆவது நாளாக அதிகாரிகள் விசாரணை…பேருந்து ஓட்டுநரிடம் கிடுக்கிப்பிடி கேள்வி!
மீனவர்களுக்கு எச்சரிக்கை:
தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் மற்றும் வங்கக்கடலில் ஜன.11, 12ஆம் தேதிகளில் மணிக்கு 55 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும். இதனால் மீனவர்கள் இந்தப் பகுதிகளுக்கு மீன்படிக்கச் செல்ல வேண்டாம் என அதில் கூறப்பட்டுள்ளது.