தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை – வானிலை ஆய்வு மையம் தகவல்
Heavy Rain Alert : சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தமிழ்நாட்டில் ஜூன் 16, 2026 இன்று தஞ்சாவூர், திருச்சி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
சென்னை, ஜூன் 16 : தமிழ்நாட்டில் ஜூன் 16, 2026 இன்று தஞ்சாவூர், திருச்சி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெற்கு கடலோர ஆந்திரப் பிரதேசத்துக்கு அப்பால் உள்ள மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளிலிருந்து தென் தமிழகம் வரை தென்மேற்கு வங்கக்கடல் வழியாக சுமார் 3.1 கி.மீ. முதல் 4.5 கி.மீ. உயரத்தில் ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது.
தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை
இதன் காரணமாக தமிழகத்தில் ஜூன் 16, 2026 இன்று, நாமக்கல், சேலம், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர். திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை பகுதிகளில் ஒரு சில இடங்களிலும், ஜூன் 17, 2026 ஆம் தேதி நாளை ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒருசில இடங்களிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என அறிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை ஜூன் 16 ஆம் தேதி இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.




இதையும் படிக்க : தமிழகத்தில் டிஐஜி- எஸ்.பி.க்கள் பணியிட மாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!
வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
REGIONAL DAILY WEATHER REPORT pic.twitter.com/li0tZnwoQh
— IMD-Tamilnadu Weather (@ChennaiRmc) June 15, 2026
ஜூன் 18 முதல் 20, 2026 தேதி வரை 3 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் ஜூன் 17, 2026 நாளை முதல் ஜூன் 18, 2026 வரை சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்திலும், இடையிடையே 60 கிமீ வேகத்திலும் வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் 1, 2026 முதல் ஜூன் 15, 2026 வரை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 39.4 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இதே காலகட்டத்தில் எதிர்பார்க்கப்பட்ட சராசரி மழையளவு 29.0 மி.மீ.என்ற நிலையில் இருந்தது. இதனால், இந்த ஆண்டிற்கான தென்மேற்கு பருவமழை இயல்பை விட 36 சதவிகிதம் அதிகமாக பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க : சுட்டெரிக்கும் வெயில் எச்சரிக்கை: வெப்பநிலை மேலும் உயரும்!
கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் தற்போது கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில் பள்ளிகளுக்கு விடுமுறை விடுவது தொடர்பாக எந்தவித அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.