சென்னையில் பெண் காக்கிக்கு ஆண் காக்கி பாலியல் தொல்லை.. கமிஷனரிடம் பரபரப்பு புகார்.. விசாரணையில் இறங்கிய விசாகா கமிட்டி!
Female Police Complaint Against Inspector : சென்னையில் பாலியல் தொல்லை அளித்து வருவதாக சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் மீது மாநகர காவல் ஆணையர் அமல்ராஜிடம் பெண் காவலர் ஒருவர் பரபரப்பு புகார் அளித்து உள்ளார். விசாகா கமிட்டி விசாரணை நடத்துகிறது.
சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் காவலர்கள் குறை தீர்ப்பு முகாம் அண்மையில் நடைபெற்றது. இந்த முகாமில், ஏராளமான போலீசார் பங்கேற்று தங்களது கோரிக்கைகள் தொடர்பான புகார் மனுக்களை காவல் ஆணையர் அமல்ராஜிடம் அளித்தனர். இந்த மனுக்களை பெற்ற காவல் ஆணையர் உரிய நடவடிக்கை எடுக்க கோரி தனக்கு கீழ் உள்ள காவல் அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்தார். இந்த நிலையில் சென்னை, ஆயிரம் விளக்கு கொச்சின் ஹவுஸ் காவலர் குடியிருப்பில் வசித்து வரும் 37 வயது மதிக்கத்தக்க பெண் காவலர் ஒருவர், இணைய வழி குற்றத்தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் மீது பரபரப்பு புகார் மனு ஒன்றை காவல் ஆணையர் அமல்ராஜிடம் அளித்தார். அந்த புகார் மனுவில் அந்த பெண் காவலர் கூறி இருப்பதாவது: நான், காவல் துறையில் சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வருகிறேன். அவ்வாறு உடன் பணிபுரிந்த காவலர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தி வருகிறேன்.
இன்ஸ்பெக்டருடன் திருமணத்தை மீறிய உறவு
நான் டி- நகர் காவல் சரகத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பணியாற்றியபோது, காவல் ஆய்வாளர் ஒருவருடன் நான் திருமணத்தை மீறிய உறவில் நெருக்கமாக இருந்து வந்தேன். ஆனால், ஒரு கட்டத்தில் என்னை நம்பி தாலி கட்டிய காதல் கணவருக்கு துரோகம் செய்து வருவதாக உணர்ந்து மனம் திருந்தினேன். அதன் பின்னர், அந்த இன்ஸ்பெக்டருடனான திருமணத்தை மீறிய ரகசிய உறவை கைவிட்டு விட்டேன். இதனால், அவருடன் பேசுவதையும், பழகுவதையும் முழுவதுமாக நிறுத்திக் கொண்டேன்.
மேலும் படிக்க: தூத்துக்குடியில் அதிர்ச்சி.. நகைக்கடை உரிமையாளரிடம் சிக்கிய ரூ.10.30 கோடி ஹவாலா பணம்? பின்னணியில் பேரதிர்ச்சி!




காவல் ஆய்வாளர் தொடர் பாலியல் தொல்லை
ஆனால், அந்த காவல் ஆய்வாளர் என்னை தொடர்பு கொண்டு மீண்டும் பேசுமாறும், பழகுமாறும் கூறி கட்டாயப்படுத்தி வருகிறார். இதற்கு, நான் உடன்பட மாட்டேன் என்று திட்டவட்டமாக தெரிவித்து விட்டேன். ஆனால், என்னை விடாமல், முன்பு நாங்கள் நெருக்கமாக இருந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களை செல்போனில் வைத்துள்ளார். அந்த புகைப்படங்களை என்னிடம் காட்டி மிரட்டி, தொடர்ந்து பாலியல் தொல்லை அளித்து வருகிறார். எனவே, அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விசாரணையில் இறங்கிய விசாகா கமிட்டி
தொடர்ச்சியாக எனக்கு அவர் அளித்து வரும் பாலியல் தொல்லை பிடியில் இருந்து என்னை காப்பாற்ற வேண்டும் என்று அந்த புகார் மனுவில் பெண் காவலர் தெரிவித்துள்ளார். இந்த மனுவை பெற்ற காவல் ஆணையர் அமல்ராஜ், தகுந்த நடவடிக்கை எடுப்பதாக கூறி சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையர் தலைமையில் செயல்பட்டு வரும் விசாகா கமிட்டி விசாரணைக்கு பரிந்துரை செய்தார். அதன்படி, விசாகா கமிட்டி அதிரடி விசாரணையில் இறங்கி உள்ளது.
மேலும் படிக்க: அதிவேகமாக வந்த லாரி மோதல்.. சாலையில் இழுத்து செல்லப்பட்ட கார்.. அடுத்தடுத்து பலியான 2 இளைஞர்கள்.. கிருஷ்ணகிரியில் சோகம்!