கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிரான சுற்றறிக்கை: கல்வி இணை இயக்குனர்- வட்டாட்சியருக்கு நோட்டீஸ்!
Notices issued to Joint Director of Education : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக அனுப்பப்பட்ட சுற்றறிக்கை தொடர்பாக கல்வி இணை இயக்குனர் மற்றும் வட்டாட்சியர் ஆகியோருக்கு விளக்கம் கேட்டு அந்த ந்த துறைகள் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது .
தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என்பது தொடர்பாகவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகளை கணக்கெடுக்க கோரியும் கல்லூரி கல்வி இணை இயக்குனர் சிந்தியா செல்வி மற்றும் திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை வட்டாட்சியர் அய்யாச்சாமி ஆகியோர் சுற்றறிக்கை அனுப்பி இருந்தனர். இதனை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநிலம் முழுவதும் இன்று சனிக்கிழமை ( ஆகஸ்ட் 22- ஆம் தேதி) போராட்டம் நடைபெற்றது. இந்த நிலையில், கல்லூரிகள் கல்வி இணை இயக்குனர் சிந்தியா செல்விக்கு கல்லூரிகள் கல்வி ஆணையர் பொன்னையன் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதில், ஒரு வாரத்துக்குள் சுற்றறிக்கை அனுப்பியது தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
15 நாள்களுக்குள் விளக்கம் அளிக்கவ வேண்டும்
இதேபோல, குஜிலியம்பாறை வட்டாட்சியர் அய்யாசாமிக்கு வருவாய் துறை சார்பில் சுற்றறிக்கை அனுப்பியது தொடர்பாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதில், வரும் 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆதரவாக கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபடக்கூடாது என்று பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருந்தது இந்த சுற்றறிக்கையை கல்லூரிகள் இணை இயக்குனர் சிந்தியா செல்வி அனுப்பியிருந்தார்.
கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு எதிரான சுற்றறிக்கை விவரம்
இதே போல, திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறையில் வட்டாட்சியராக பணிபுரிந்து வந்த அய்யாசாமி என்பவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகளை கணக்கெடுக்குமாறு சுற்றறிக்கை வெளியிட்டு இருந்தார். இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இந்த சுற்றறிக்கைகள் தலைமைச் செயலாளர் சாய் குமாருக்கு தெரியாமல் பிறப்பிக்கப்பட்டிருக்காது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டிருந்தது.
குஜிலியம்பாறை வட்டாட்சியர் அதிரடி பணியிட மாற்றம்
இவ்வாறாக கண்டனங்கள் எழுந்த நிலையில் மேற்கண்ட 2 சுற்றறிக்கைகளும் உடனடியாக திரும்பப் பெறப்பட்டன. இதில், குஜிலியம்பாறை வட்டாட்சியர் அய்யாச்சாமி அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டார் இதற்கான உத்தரவை திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி பிறப்பித்திருந்தார். இந்த நிலையில் தான், இந்த விவகாரம் தொடர்பாக கல்லூரிகள் கல்வி இணை இயக்குனர் மற்றும் வட்டாட்சியருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.