பூனையை கண்டுபிடித்தால் ரூ.50 ஆயிரம் சன்மானம்.. ஈரோடு உரிமையாளரின் அட்ராசிட்டி பாசம்.. சோஷியல் மீடியாவில் வைரல் விளம்பரம்!
Erode Reward Offered For Finding Cat : ஈரோடு மாவட்டத்தில் காணாமல் போன செல்லப் பிராணியான செர்பியன் இன பூனையை கண்டுபிடித்து தருபவர்களுக்கு ரூ. 50 ஆயிரம் சன்மானம் வழங்கப்படும் என்று அதன் உரிமையாளர் சமூகவலைதளங்களில் அறிவிப்பு வெளியிட்டுள்ளார் .
ஈரோடு மாவட்டம், கொல்லம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஜான் லாசர். இவரது மகள் ஆருத்ரா. இவர், கர்நாடக மாநிலத்தில் பெங்களூருவில் உள்ள கல்லூரியில் பட்டப் படிப்பு படித்து வருகிறார். இந்த நிலையில், செல்ல பிராணிகள் மீது ஆர்வமுள்ள ஆருத்ரா செர்பியன் இனத்தை சேர்ந்த ஒரு பூனையை ஆசை ஆசையாக வளர்த்து வந்தார். அந்த பூனை குட்டியாக இருக்கும் போது, ஆருத்ரா வாங்கி வந்து வீட்டில் வைத்து வளர்த்து வந்த நிலையில், அதற்கு ரோச் என்று செல்லமாக பெயரிட்டு அழைத்து வந்தார். இந்த நிலையில், ஆருத்ரா கல்லூரி விடுமுறையில் பெங்களூருவில் இருந்து தனது சொந்த ஊரான ஈரோட்டுக்கு வந்திருந்தார். அப்போது, தனது பூனை ரோச்சையும் உடன் கொண்டு வந்திருந்தார். இந்த நிலையில், வீட்டில் அங்கும் இங்கும் விளையாடிக் கொண்டிருந்த ஆருத்ராவின் செல்லப்பிராணி ரோச் திடீரென காணாமல் போனது.
பூனையை கண்டுபிடிப்பவர்களுக்கு ரூ. 50 ஆயிரம் சன்மானம்
இதை அறிந்த ஆருத்ரா மிகுந்த அதிர்ச்சி அடைந்து காணாமல் போன தனது பூனையை தேடினார். அவருடன் சேர்ந்து அவரது பெற்றோர் மற்றும் உறவினர்களும் சுற்றுப்பகுதிகளில் பூனையை தேடினர். ஆனால், அந்த பூனையை கண்டுபிடிக்க முடியவில்லை. பூனை காணாமல் சென்று வெகு நாட்கள் ஆகிய நிலையில், அதனை கண்டுபிடிக்க முடியாததால் ஆருத்ரா மிகவும் மனமுடைந்து போனார். இந்த நிலையில், காணாமல் போன பூனையை கண்டுபிடித்து தருபவர்களுக்கு ரூ. 50 ஆயிரம் சன்மானம் வழங்கப்படும் என்று பரபரப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
மேலும் படிக்க: மீனாட்சி அம்மன் கோயில் நில முறைகேடு.. அடுத்தடுத்து கைதாகும் அதிகாரிகள்.. முன்னாள் சார் பதிவாளருக்கு காப்பு!




பூனை தொடர்பாக சமூகவலைதளங்களில் அறிவிப்பு
இது தொடர்பாக, ஆருத்ராவின் தந்தை ஜான் லாசர் என்பவர் தனது பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டுவிட்டர், வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், எங்கள் வீட்டில் வளர்த்து வந்த செர்பியன் இனம் பூனை திடீரென காணாமல் போனது. இதனால், பூனையை மிகவும் செல்லமாக வளர்த்து வந்த எனது மகள் மனம் உடைந்து ஏங்கிக் கொண்டிருக்கிறார். எனவே, தயவு செய்து பூனையை கண்டுபிடித்து தருவதற்கு உதவுங்கள். அவ்வாறு, பூனையை கண்டுபிடித்து தருபவர்களுக்கு ரூ. 50 ஆயிரம் சன்மானம் வழங்கப்படும் என்று ஜான் லாசர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
சோஷியர் மீடியாவில் விசித்திரமான அறிவிப்பு
இந்த பதிவானது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரப்பப்பட்டு வருகிறது. பொதுவாக, வீடுகளில் வளர்க்கப்படும் செல்ல பிராணிகளான நாய்கள், பூனைகள் உள்ளிட்டவை காணாமல் போனால், அதனை கண்டுபிடித்து தருமாறு அதன் உரிமையாளர்கள் அறிவிப்பு வெளியிடுவது வழக்கமாகும். அந்த வகையில், தற்போது செர்பியன் இனம் பூனையை கண்டுபிடித்து தருபவர்களுக்கு ரூ.50 ஆயிரம் சன்மானம் அறிவித்திருப்பது விசித்திரமாக பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க: “தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்” 1 பைசாவுக்கு டெண்டர் எடுத்த பிரபல தங்க நகை நிறுவனம்.. போட்டியாளர்கள் அதிர்ச்சி!