ரூ.45 ஆயிரம் லஞ்சம்.. திருப்பூர் கூட்டுறவு செயலர் உள்பட மூவர் கைது.. லஞ்ச ஒழிப்பு போலீஸ் பொறியில் சிக்கிய பரபர சம்பவம்!
Tiruppur Society Secretary Arrested : திருப்பூர் மாவட்டத்தில் ரூ.45 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக அண்ணா கூட்டுறவு வீடு கட்டுமான சங்கத்தின் பெண் செயலர் உள்ளிட்ட 3 பேரை மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
திருப்பூர் மாவட்டம், சாமுண்டிபுரத்தை சேர்ந்தவர் லோகநாதன் ( 49 வயது). இவர், தனது வீட்டு பத்திரத்தை அடகு வைத்து திருப்பூர் அவிநாசி சாலையில் பங்களா பேருந்து நிறுத்தம் அருகே உள்ள அண்ணா கூட்டுறவு வீடு கட்டுமான சங்கத்தில் கடன் பெறுவதற்காக விண்ணப்பித்திருந்தார். அவரது ஆவணங்களை பரிசோதித்த சங்கத்தின் செயலாளர் ஜோதிமணி உள்ளிட்ட அதிகாரிகள் (52 வயது) ரூ. 22 லட்சம் கடன் வழங்க அனுமதி அளித்தனர். ஆனால், இந்த கடனை வழங்கியதற்காக ரூ. 55 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என்று சங்கத்தின் செயலாளர் ஜோதிமணி, லோகநாதனிடம் கேட்டுள்ளார். அப்போது, அவ்வளவு தொகை என்னால் தர முடியாது என்று லோகநாதன் தெரிவித்துள்ளார். மேலும், சங்க செயலாளர் ஜோதி மணிக்கு ஆதரவாக இடைத்தரகர் திருநாவுக்கரசு, அலுவலக தற்காலிக உதவியாளர் தட்சன், ஆகியோர் லோகநாதன் லஞ்சம் தருமாறு வற்புறுத்தி உள்ளனர்.
லஞ்ச ஒழிப்பு காவல் நிலையத்தில் புகார்
இதன் காரணமாக ரூ. 10 ஆயிரத்தை மட்டும் லோகநாதன் லஞ்சமாக கொடுத்துள்ளார். இதை பெற்றுக்கொண்ட ஜோதிமணி, மீதமுள்ள ரூ. 45 ஆயிரத்தை உடனடியாக தருமாறு மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதனால், லோகநாதன் கடும் அதிர்ச்சி அடைந்து மன உளைச்சலுக்கு ஆளானதாக தெரிகிறது. தொடர்ந்து, லஞ்சம் கொடுக்க விரும்பாத அவர், இந்த விவகாரம் தொடர்பாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளிக்க முடிவு செய்தார். அதன் அடிப்படையில், திருப்பூர் லஞ்ச ஒழிப்பு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
மேலும் படிக்க: அரசு வேலை வாங்கித்தருவதாக ரூ.26.5 லட்சம் மோசடி.. வசமாக சிக்கிய அரசு அச்சக ஊழியர்.. சென்னையில் பரபரப்பு!




லஞ்ச ஒழிப்பு போலீசார் வைத்த பொறி
அந்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து ரசாயனம் தடவிய ரூ. 45 ஆயிரம் நோக்கத்தை கூட்டுறவு சங்க செயலாளரிடம் கொடுக்குமாறு லோகநாதனிடம் போலீசார் அறிவுறுத்தினர். அதன்படி, கூட்டுறவு கடன் சங்க அலுவலகம் அருகே உள்ள டீக்கடையில் வைத்து திருநாவுக்கரசு மற்றும் தட்சன் ஆகியோரிடம் லோகநாதன் பணத்தை கொடுத்தார். அந்த பணத்தை, அவர்கள் வாங்கிய போது, அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் அவர்களை சுற்றி வளைத்து அதிரடியாக கைது செய்தனர்.
கூட்டுறவு செயலர் உள்பட 3 பேர் கைது
தொடர்ந்து, ஜோதிமணி உள்ளிட்ட 3 பேரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். பின்னர், அவர்கள் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நேரடியாக கைது செய்தனர். மேலும், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருப்பூர் சிறையில் அடைத்தனர். இந்த விவகாரம் கூட்டுறவு கடன் சங்க அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் படிக்க: 2 நாளாக பூட்டியிருந்த வீடு.. வெளியேறிய கடும் துர்நாற்றம்.. திருவேற்காட்டில் நகைக்காக அரங்கேறிய கொடூர கொலை!