எம்எல்ஏக்களுக்கு கார்.. எங்களுக்கு பைக் வேண்டும்.. ஊராட்சி மன்ற தலைவர்கள் பிடிவாதம்!
Panchayat President Asks Bikes : எம்எல்ஏக்களுக்கு கார் வழங்க இருப்பதை போல, தங்களுக்கும் இரு சக்கர வாகனங்கள் வழங்க வேண்டும் என்று ஊராட்சி மன்ற தலைவர்கள் போர்க் கொடி தூக்கி உள்ளனர். இது தொடர்பாக அவர்கள் அளித்த மனு குறித்து பார்க்கலாம்.
தமிழகத்தில் அனைத்து எம்எல்ஏக்களுக்கும் அரசு சார்பில் இலவச கார் வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிவித்தார். இதற்கான கார்கள் தேர்வு செய்யும் பணியும் தொடங்கி நடைபெற்றது. இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் தங்களுக்கு இருசக்கர வாகனம் வழங்க வேண்டும் என்று ஊராட்சி மன்ற தலைவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். இந்த விவகாரம் தற்போது பேசும் பொருளாகியுள்ளது. ஊராட்சி மன்ற தலைவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: கிராமப்புறங்களில் தினம்தோறும் களப்பணி ஆற்றி வரும் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு வாகன வசதி என்பது மிகவும் அவசியமான ஒன்றாக இருந்து வருகிறது. மேலும், கிராமப்புற மக்களுக்கான அடிப்படை தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றவும், ஊராட்சிகளுக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் தினந்தோறும் சென்று வரவும் சிரமமாக உள்ளது.
பைக்குடன் சேர்ந்து பராமரிப்பு தொகை வேண்டும்
எனவே, ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு அரசு சார்பில் இருசக்கர வாகனம் வழங்க வேண்டும். அத்துடன், வாகன பராமரிப்பு செலவு மற்றும் எரிபொருள் செலவுக்கான மாதாந்திர தொகையை அரசு ஒதுக்கீடு செய்து வழங்க வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவித்துள்ளனர். தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரின் போது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்எல்ஏ ஜோதிமணி எழுந்து, தொகுதி பணிகளை மேற்கொள்வதற்காக எம்எல்ஏக்களுக்கு கார் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அதன் அடிப்படையில், முதல் முறை எம்எல்ஏக்களுக்கு கார் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது.
மேலும் படிக்க: “தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்” 1 பைசாவுக்கு டெண்டர் எடுத்த பிரபல தங்க நகை நிறுவனம்.. போட்டியாளர்கள் அதிர்ச்சி!
எம்எல்ஏக்களுக்கு கார் அறிவித்த முதல்வர் விஜய்
ஆனால், தமிழகத்தில் உள்ள அனைத்து எம்எல்ஏக்களுக்கும் கார் வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்தார். இதில், தமிழகத்தில் எம்எல்ஏக்கள் தங்களின் தொகுதி பணிகளை திறம்பட செய்வதற்காக அரசு சார்பில் கார், அதற்கான பராமரிப்பு தொகை ரூ.75 ஆயிரம், உதவியாளர் வைத்துக் கொள்வதற்கு அனுமதி. அதற்கான படி ரூ.25 ஆயிரம் ஆகியவை வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. முதல்வரின் இந்த அறிவிப்புக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
கார் அறிவிப்புக்கு எதிர்ப்பும்- ஆதரவும்
இதற்காக ஒதுக்கீடு செய்யப்படும் ரூ.140 கோடியை விவசாயிகள் கடனை முழுமையாக தள்ளுபடி செய்திருக்கலாம் என்பன உள்ளிட்ட கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. இதில், திமுகவை சேர்ந்த 59 எம்எல்ஏக்கள் கார்களை பெற மாட்டார்கள் என்று பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். இதனிடையே, காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் ஊராட்சி தலைவர்களுக்கும் கார் வழங்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தான், ஊராட்சித் தலைவர்கள் தங்களுக்கு பைக் வேண்டும் என்று போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
மேலும் படிக்க: 2 நாளாக பூட்டியிருந்த வீடு.. வெளியேறிய கடும் துர்நாற்றம்.. திருவேற்காட்டில் நகைக்காக அரங்கேறிய கொடூர கொலை!

