கல்யாண கனவு கலைந்தது.. புதுக்கோட்டையில் நிச்சயதார்த்தம் நடக்கவிருந்த நிலையில் பெண் எடுத்த விபரீத முடிவு!
Pudukkottai Crime : புதுக்கோட்டை மாவட்டத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற இருந்த நிலையில், இளம் பெண் திடீரென வீட்டில் தூக்கு போட்டு தற் கொலை செய்து கொண்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக ஆலங்குடி போலீ சார் விசாரணை நடத்தி வருகின்றனர் .
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ள மாங்கோட்டை கீழப்பட்டியை சேர்ந்தவர் சின்னதுரை. இவரது மகள் ஷோபனா ( 25 வயது). இவர்கள், ஆலங்குடி முல்லை நகரில் குடும்பத்தோடு வசித்து வருகின்றனர். இந்த நிலையில், ஷோபனாவை திருமணம் செய்து வைப்பதற்காக அவரது பெற்றோர் மாப்பிள்ளை பார்த்து வந்தனர். அதன்படி, மாப்பிள்ளை பேசி முடிக்கப்பட்டு கடந்த ஆகஸ்ட் 19- ஆம் தேதி (புதன்கிழமை) நிச்சயதார்த்தம் நடைபெற இருந்தது. இந்த நிலையில், கடந்த 18- ஆம் தேதி இரவு நிச்சயதார்த்தத்துக்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்காக சின்னதுரை மற்றும் அவரது மனைவி ஆகியோர் ஆலங்குடிக்கு சென்று இருந்தார். அப்போது, வீட்டில் தனியாக இருந்த ஷோபனா திடீரென வீட்டின் படுக்கை அறையில் கயிறால் தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றார்.
மருத்துவர்கள் பரிசோதித்ததில் உயிரிழந்த பெண்
சிறிது நேரத்தில் அவரது உறவினர் வீட்டுக்கு வந்த நிலையில் ஷோபனாவின் நிலையை பார்த்து அதிர்ச்சி அடைந்து அவரை தூக்கில் இருந்து மீட்டு ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்த நிலையில், சிகிச்சை பலன் இன்றி ஷோபனா பரிதாபமாக உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து, அவரது சடலம் பிரேத பரிசோதனை செய்வதற்காக கொண்டு செல்லப்பட்டது.
மேலும் படிக்க: அரசு வேலை வாங்கித்தருவதாக ரூ.26.5 லட்சம் மோசடி.. வசமாக சிக்கிய அரசு அச்சக ஊழியர்.. சென்னையில் பரபரப்பு!




ஆலங்குடி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை
இந்த சம்பவம் தொடர்பாக, ஷோபனாவின் தந்தை சின்னதுரை ஆலங்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில், குடும்ப பிரச்சினை காரணமாக சோபனா தற்கொலை செய்து கொண்டாரா அல்லது திருமணத்தில் விருப்பம் இல்லாமல் இத்தகைய முடிவை எடுத்தாரா என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
குடும்பத்தினர் மத்தியில் பெரும் சோகம்
திருமண நிச்சயதார்த்தம் நடைபெற இருந்த நிலையில், அதற்கு முந்தைய நாள் இளம்பெண் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவர்களது குடும்பத்தினர் மட்டுமின்றி அந்த பகுதி முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தற்கொலை எண்ணத்தில் இருந்து விடுபட
(தற்கொலை எதற்கும் தீர்வல்ல.. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு வர கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசலாம். மாநில உதவி மையம் : 104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் – 044 -24640050)
மேலும் படிக்க: 2 நாளாக பூட்டியிருந்த வீடு.. வெளியேறிய கடும் துர்நாற்றம்.. திருவேற்காட்டில் நகைக்காக அரங்கேறிய கொடூர கொலை!