“போர் அடிப்பதற்காக அரசியலுக்கு வந்தவர்கள் நாம் அல்ல.. கம்பேக் கொடுப்பதில் திமுக ஸ்பெஷலிஸ்ட்!”.. மு.க.ஸ்டாலின் முழக்கம்!!
MK Stalin Speech at DMK; திமுக செயற்குழுவில் பேசிய மு.க.ஸ்டாலின், "கட்சியில் நிர்வாக மாற்றங்கள் சிலருக்குக் கசப்பாக இருக்கலாம், ஆனால் கசப்புதான் உடலுக்கு நன்மை செய்யும்" என்று குறிப்பிட்டார். மேலும் இளையோரை மூத்தோர் வழிநடத்த வேண்டும் எனக் கூறிய அவர், சட்டமன்றத்தைப் சினிமா செட் போல நினைத்துப் பஞ்ச் டயலாக் பேசும் அரசுக்கு விரைவில் கம்பேக் கொடுப்போம் என முழங்கினார்.
சென்னை, ஆகஸ்ட் 22: திராவிட முன்னேற்றக் கழகத்தின் 75 ஆண்டுகால வரலாற்றுப் பயணத்தில், கட்சிக் கட்டமைப்பை அடிமட்ட அளவில் இருந்து மறுசீரமைக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க மாநிலச் செயற்குழு கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. தேர்தலில் தற்காலிகத் பின்னடைவைச் சந்தித்திருந்தாலும், திமுகவை அடுத்த நூற்றாண்டிற்கும் உயிர்ப்போடு வைத்திருக்க வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது என்பதை வலியுறுத்தி, கட்சியின் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் உரை ஆற்றினார். திமுகவின் அஸ்திவாரமே அதன் பலமான அமைப்பு முறைதான் என்றும், உங்களின் முழு ஒப்புதலோடு கட்சியில் மிகப்பெரிய மாறுதல்களைக் கொண்டுவர இருக்கிறோம் என்றும் அவர் உறுதியளித்தார்.
இதையும் படிக்க: எம்எல்ஏக்களுக்கு கார்கள் தேர்வு செய்யும் பணி… தலைமைச் செயலகத்தில் அணிவகுத்த 5 மாடல் கார்கள்!
கம்பேக் கொடுப்பதில் திமுக ஸ்பெஷலிஸ்ட்:
செயற்குழு உரையில் தனது சுயபரிசோதனையை வெளிப்படுத்திய திமுக தலைவர், “விளக்கின் அடியில் இருக்கும் இருளைப் போல, நமது தவறுகளைக் காண நாம் தவறவிட்டுவிட்டோம்; எந்த ஒரு தனிமனிதரின் தவறாக இருந்தாலும் இறுதியில் பாதிக்கப்படுவது ஒட்டுமொத்தக் கட்சியே” என்று சுட்டிக்காட்டினார். தேர்தல் களத்தில் நாம் பார்க்காத வெற்றியும் இல்லை, சந்திக்காத தோல்வியும் இல்லை எனக் குறிப்பிட்ட அவர், கம்பேக் கொடுப்பதில் திமுக எப்போதும் ஸ்பெஷலிஸ்ட் என்பதை நினைவு கூர்ந்தார். மேலும், நிர்வாக அமைப்பில் செய்யப்படும் இந்த மாற்றங்கள் சிலருக்குத் தற்காலிகமாகக் கசப்பாக இருக்கலாம், ஆனால் கசப்புதான் உடலுக்கு நன்மை செய்யும் என்று கூறி, கட்சியின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு எடுக்கப்படும் முடிவுகளுக்கு மூத்த நிர்வாகிகள் ஒத்துழைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
போர் அடிப்பதற்காக அரசியலுக்கு வந்தவர்கள் நாம் அல்ல:
இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் பேசிய அவர், “படைக்கு இளையோர் வரும்போது அவர்களை மூத்தோர் இன்முகத்தோடு வரவேற்று வழிநடத்த வேண்டும்; தனக்கு இணையாக யாரும் கட்சியில் வளரக்கூடாது என்று நினைத்தால், அங்கே அவர் மட்டும்தான் இருப்பாரே தவிர கட்சியால் வளர முடியாது” என்று எச்சரித்தார். “போரடிக்கிறது என்று அரசியலுக்கு வந்தவர்கள் நாம் அல்ல, போராட வந்தவர்கள்” என்று எதிராளிகளைச் சாடிய அவர், ஆளுங்கட்சியையும் தற்போதைய முதலமைச்சரையும் கடுமையாக விமர்சித்தார். “சட்டமன்றத்தைச் சினிமா செட் என நினைத்துப் பஞ்ச் டயலாக் பேசுவதிலும், பெயர்களை மாற்றுவதிலும், திமுகவின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டுவதிலும் மட்டுமே தற்போதைய முதல்வர் தீவிரமாக உள்ளார்” என்றும் குற்றம் சாட்டினார்.
இதையும் படிக்க: “அவைகுறிப்பில் நீக்கியதை ரீல்ஸாக வெளியிட்டால் கடும் நடவடிக்கை!”.. சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் எச்சரிக்கை!!
திமுகவில் இளைய ரத்தத்தைப் பாய்ச்சும் முயற்சி:
மாவட்டச் செயலாளர்களுக்கான வயது வரம்பு 70 ஆக நிர்ணயிக்கப்பட்டது மற்றும் மாவட்டங்களின் எண்ணிக்கை 110 ஆக உயர்த்தப்பட்டது குறித்து மூத்த பத்திரிகையாளர்கள் கருத்து தெரிவிக்கையில், இது திமுகவில் இளைய இரத்தத்தைப் பாய்ச்சும் முயற்சி என்று பாராட்டியுள்ளனர். 1970-களில் இருந்தே திமுக பல்வேறு வரலாற்றுப் பின்னடைவுகளுக்குப் பிறகு அமைப்பை மறுசீரமைத்து மீண்டும் ஆட்சியைப் பிடித்த வரலாற்றைச் சுட்டிக்காட்டிய அவர்கள், கிளைச் செயலாளர்களுக்கு 45 வயது என நிர்ணயித்திருப்பது புதிய தலைமுறையினரை திராவிட இயக்கத்தை நோக்கி ஈர்க்கும் என்று கணித்துள்ளனர். இனம், மொழி, நாடு இருக்கும் வரை கருப்புச் சிவப்பு கொடி கம்பீரமாகப் பறக்கும் என்ற நம்பிக்கையோடு இந்தச் செயற்குழு நிறைவடைந்துள்ளது.