“திமுகவில் அதிரடி மாற்றங்கள்!”.. மு.க.ஸ்டாலின் தலைமையில் கூடும் அவசரச் செயற்குழு கூட்டம்!!
DMK Executive Committee Meeting: சென்னை அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. 10-க்கும் மேற்பட்ட மாவட்டச் செயலாளர்கள் மாற்றம், இளைஞர்கள்-பெண்களுக்கு முன்னுரிமை, மாவட்டங்களின் எண்ணிக்கை 110 ஆக உயர்வு மற்றும் ஓபிஎஸ் உள்ளிட்டோருக்கு முக்கியப் பொறுப்புகள் வழங்கப்படுவது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படவுள்ளன.
சென்னை, ஆகஸ்ட் 22: திராவிட முன்னேற்றக் கழகத்தில் அமைப்பு ரீதியாக பல்வேறு முக்கிய மாற்றங்களைக் கொண்டு வரும் நோக்கில், கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அவசரச் செயற்குழு கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கட்சியின் எதிர்காலத் திட்டமிடல், சட்டமன்றத் தேர்தல் வியூகங்கள் மற்றும் உட்கட்சி மறுசீரமைப்பு குறித்து விவாதிக்கக் கூட்டப்பட்டுள்ள இக்கூட்டத்தில், சுமார் 800-க்கும் மேற்பட்ட செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர். இக்கூட்டத்தில் மாநில அளவில் முக்கிய அரசியல் தீர்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ள நிலையில், கட்சி நிர்வாகத்தில் பெரும் மாற்றங்கள் செய்யப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதையும் படிக்க: “100 கேள்விகள்.. சுழன்றடித்த அதிகாரிகள்!”.. லஞ்ச ஒழிப்புத்துறை பிடியில் செந்தில் பாலாஜி!!
மாவட்ட செயலாளர்களை நீக்க முடிவு:
கட்சியில் சரியாகச் செயல்படாத சுமார் 10-க்கும் மேற்பட்ட மாவட்டச் செயலாளர்களைப் பதவியில் இருந்து நீக்கிவிட்டு, அவர்களுக்குப் பதிலாக இளைஞர்களுக்கும் பெண்களுக்கும் புதிய வாய்ப்புகளை வழங்க திமுக தலைமை திட்டமிட்டுள்ளது. தற்போது திமுகவில் உள்ள பல மாவட்டச் செயலாளர்கள் 70 வயதைக் கடந்தவர்களாக இருப்பதால், களப்பணிகளில் சுணக்கம் ஏற்படுவதாகக் கட்சி வட்டாரங்களில் அதிருப்தி நிலவி வருகிறது. இதைக் கருத்தில் கொண்டு, மாவட்டச் செயலாளர் பதவிக்கு வயது நிர்ணயம் செய்யும் நடைமுறையைக் கொண்டு வரவும், இளைஞர் அணி மற்றும் மகளிர் அணிக்கு அதிக பிரதிநிதித்துவம் அளிக்கவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
மாவட்டங்களின் எண்ணிக்கையை உயர்த்த முடிவு:
மேலும், கட்சி அமைப்பில் நிர்வாகச் சீர்திருத்தம் செய்யும் வகையில் மாவட்டங்களின் எண்ணிக்கையை உயர்த்தவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது. தற்போது 5 முதல் 6 சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலாளர் என்ற வீதத்தில் மொத்தம் 78 மாவட்டக் கழகங்கள் உள்ளன. இதை மாற்றி, 2 அல்லது 3 சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலாளர் என மாவட்டங்களின் எண்ணிக்கையை 110 வரை உயர்த்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் கட்சிப் பணிகளை அடிமட்ட அளவில் தீவிரப்படுத்த முடியும் எனத் தலைமை கருதுகிறது.
இதையும் படிக்க: வாரவிடுமுறைக்கு சொந்த ஊர் செல்ல திட்டமா?அரசு சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு.. முழு விவரம் உள்ளே!
ஓபிஎஸ்-க்கு முக்கியப் பொறுப்பு:
அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம் மற்றும் மனோஜ் பாண்டியன் ஆகிய மூத்த தலைவர்களுக்குக் கட்சியில் ‘பெரிய’ அளவிலான முக்கியப் பொறுப்புகள் வழங்கப்படலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இந்தச் செயற்குழு கூட்டத்தில் விவாதிக்கப்படும் மாற்றங்கள் குறித்தும், புதிய பொறுப்பாளர்கள் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகளும் இன்றோ அல்லது ஓரிரு நாட்களிலோ கட்சியின் தலைவரால் முறைப்படி வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.