“59 திமுக உறுப்பினர்களுக்கும் அரசு வழங்கும் கார் வேண்டாம்!”.. உதயநிதி ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு!!
DMK MLAs Refuse Govt Car: தமிழ்நாடு அரசு கடும் நிதி நெருக்கடியில் இருப்பதால், அரசு அறிவித்துள்ள புதிய வாகனங்களை திமுகவின் 59 சட்டமன்ற உறுப்பினர்களும் பெறமாட்டார்கள் என உதயநிதி ஸ்டாலின் சட்டமன்றத்தில் அறிவித்தார். மேலும், பொருளாதாரத்தில் நலிவடைந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மட்டுமே கார்களை வழங்க வேண்டும் என்றும் அவர் அரசை வலியுறுத்தினார்.
சென்னை, ஆகஸ்ட் 21: தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் சட்டமன்ற உறுப்பினர்களுக்குப் புதிய வாகனங்கள் வழங்கப்படும் என அரசு தரப்பில் அறிவிப்பு வெளியானது. மக்கள் வரிப்பணத்தில் அரசு சார்பில் மேற்கொள்ளப்படும் இந்தத் திட்டங்கள் குறித்துப் பல்வேறு விவாதங்கள் எழுந்து வந்த நிலையில், சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக உள்ள உதயநிதி ஸ்டாலின் திமுக சார்பில் மிக முக்கியமான மற்றும் அதிரடியான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு பேரவையின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
இதையும் படிக்க: TN Assembly: ஜோசியர் சொன்னால்தான் கோப்புகளை வெளியிடுவீர்களா?” – பேரவையில் உதயநிதி சரமாரி கேள்வி
59 திமுக MLAக்களும் கார் வேண்டாம்:
சட்டமன்றத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின், மாநில அரசு கடுமையான நிதி நெருக்கடியில் இருப்பதாக முதலமைச்சரே பல சந்தர்ப்பங்களில் தெரிவித்து வருவதைச் சுட்டிக்காட்டினார். எனவே, அரசின் தேவையற்ற செலவுகளைக் குறைக்கும் நோக்கில், திமுக தலைவர் மற்றும் முன்னாள் முதலமைச்சரான மு.க.ஸ்டாலினின் அறிவுறுத்தலின்படி, திமுகவைச் சேர்ந்த 59 சட்டமன்ற உறுப்பினர்களும் அரசு வழங்கும் புதிய வாகனங்களைப் பெற்றுக்கொள்ளப்போவதில்லை எனத் திட்டவட்டமாக அறிவித்தார்.
நலிவடைந்த MLAக்களுக்கு மட்டும் கொடுங்க:
மேலும், சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒரே சீரான பொருளாதார பின்னணியைக் கொண்டவர்கள் அல்ல என்பதைக் குறிப்பிட்ட அவர், உறுப்பினர்கள் தங்களது வேட்புமனுவில் தாக்கல் செய்துள்ள பொருளாதார நிலையைக் கவனத்தில் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். நிதி வசதி குறைவாக உள்ள, பொருளாதாரத்தில் நலிவடைந்துள்ள சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மட்டுமே இந்தத் திட்டத்தின் கீழ் வாகனங்களை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்தார். இது தொடர்பான அதிகாரப்பூர்வக் கடிதத்தைச் சபாநாயகர் மூலமாக அரசுக்கு அளித்துள்ளதாகவும் அவர் பேரவையில் தெரிவித்தார்.
பரபரப்பை ஏற்படுத்திய திமுக அறிவிப்பு:
அரசுத் தரப்பில் எம்.எல்.ஏ-க்களுக்குக் கார் மட்டுமின்றி, எரிபொருள் மற்றும் பராமரிப்புப் படியாக மாதம் ரூ.75,000 மற்றும் உதவியாளர் படியாக ரூ.25,000 என மொத்தம் ரூ.1 லட்சம் வழங்கிடத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், திமுகவின் இந்தத் திடீர் முடிவு அரசியல் களத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. மக்களின் நிதிப் பயன்பாட்டில் பொறுப்புணர்வைக் காட்டும் வகையில் திமுக இந்த முடிவை எடுத்திருப்பதாக அக்கட்சியினர் தெரிவித்து வரும் நிலையில், எதிர்க்கட்சியின் இந்த நடவடிக்கைக்குப் பிறகு அரசின் அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
இதையும் படிக்க: காஞ்சிபுரத்தில் தனியார் கல்லூரி விடுதியில் ஆந்திர மாணவி சடலமாக மீட்பு.. மாணவர்கள் கொந்தளிப்பு.. போலீசார் குவிப்பு!!
திமுக அரிசயல் ஆக்க வேண்டாம்:
இதற்குப் பதிலளித்துப் பேசிய பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, முதலமைச்சரின் இந்த அறிவிப்பு ஒரு பொதுவான மரபுப் புரோட்டோகால் அடிப்படையில் வெளியிடப்பட்டது என்றும், ஏழை சட்டமன்ற உறுப்பினர்களும் மக்களுக்காக விரைவாகப் பணியாற்ற வேண்டும் என்ற நன்னோக்கிலேயே கொண்டுவரப்பட்டது என்றும் விளக்கமளித்தார். கார் என்பது ஆடம்பரம் அல்ல, அது மக்கள் பிரதிநிதிகள் தொகுதியைச் சுற்றி வந்து மக்களைச் சந்திப்பதற்கான அத்தியாவசியத் தேவை என்று குறிப்பிட்ட அவர், ஏற்கனவே வசதியுள்ள உறுப்பினர்கள் கார் வேண்டாம் எனக் கடிதம் தரலாம் என்றும், திமுக இதை அரசியல் ஆக்க முயல்வதாகவும் விமர்சித்தார்.