“சொந்த ஊரு வேறயா இருக்கலாம்.. ஆனா உசுரு சென்னைதான்!”.. 387வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் வந்தாரை வாழவைக்கும் சென்னை!!
Chennai City Celebrates Its 387th Birthday: தமிழ்நாட்டின் தலைநகரமும் வந்தாரை வாழவைக்கும் தாயுமான சென்னை மாநகரம் தனது 387-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறது. 386 ஆண்டுகளுக்கு முன் வெறும் 6,000 மக்கள் தொகையுடன் தொடங்கி, இன்று 1.25 கோடி மக்களுடன் உலகின் 26-வது பெரிய நகரமாக உருவெடுத்துள்ள சென்னையின் வரலாற்றுச் சிறப்புமிக்க பயணத்தின் தொகுப்பு.
சென்னை, ஆகஸ்ட் 22: தமிழ்நாட்டின் தலைநகரமாகவும், கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதார மையமாகவும் விளங்கும் சென்னை மாநகரம் தனது 387-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறது. “வந்தாரை வாழவைக்கும் சென்னை” என்று அன்போடு அழைக்கப்படும் இந்நகரம், நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் தேடி வரும் மனிதர்களுக்கு வேலைவாய்ப்பு, கல்வி, தொழில் மற்றும் சிறந்த எதிர்காலத்தை வழங்கித் தாயாக அரவணைத்து வருகிறது. தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்துடனும் ஏதோ ஒரு வகையில் பிணைப்பைக் கொண்டுள்ள சென்னை மாநகரம், உலகளவில் தவிர்க்க முடியாத முக்கிய நகரங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.
மேலும் படிக்க: வாரவிடுமுறைக்கு சொந்த ஊர் செல்ல திட்டமா?அரசு சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு.. முழு விவரம் உள்ளே!
1.25 கோடி மக்கள் வாழும் பெரும் நகரம்:
சுமார் 386 ஆண்டுகளுக்கு முன்பு கிழக்கிந்திய கம்பெனியரால் சிறிய நிலப்பரப்பாக வாங்கப்பட்ட காலத்தில், மெட்ராஸ் பட்டணத்தின் மக்கள் தொகை வெறும் 6,000 ஆக மட்டுமே இருந்தது. ஆனால், இன்று 1.25 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகையுடன் உலகின் 26-வது பெரிய நகரமாக சென்னை உருவெடுத்துள்ளது. மக்கள் தொகை அடிப்படையில் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவிற்கு அடுத்த இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ள சென்னை, கல்வி, மருத்துவம், ஆட்டோமொபைல், தகவல் தொழில்நுட்பம் என அனைத்துத் துறைகளிலும் ஆசியாவின் முன்னணி மையங்களில் ஒன்றாக மிளிர்கிறது.
சென்னை என்றும் தளர்ந்ததில்லை:
வரலாற்றுப் பயணத்தில் முதல் உலகப்போரின் போது எம்டன் கப்பல் வீசிய குண்டுவீச்சு, எல்லைப் போர்கள், பிளேக் நோய், சுனாமி பேரலை, கடும் தண்ணீர் பஞ்சம், வரலாற்றுப் பெருவெள்ளங்கள் மற்றும் கொரோனா பெருந்தொற்று எனப் பல்வேறு இயற்கை மற்றும் வரலாற்றுச் சவால்களைச் சந்தித்த போதிலும், சென்னை என்றும் தளர்ந்ததில்லை. எத்தனை பெரிய துயரங்கள் வந்தாலும் ‘பயப்படாமல் கம்முனு நில்லு’ என்று தன் மக்களுக்கு நம்பிக்கையும் ஆறுதலும் அளித்து, ஒவ்வொரு முறையும் பேரழிவுகளில் இருந்து மீண்டு எழும் அசாதாரண மனஉறுதியை இந்நகரம் உலகிற்குத் தொடர்ந்து பறைசாற்றி வருகிறது.
பேணி பாதுகாத்த சென்னை:
தான் பேணி பாதுகாத்து வளர்த்த பிள்ளைகளில் பலர், சென்னை வழங்கிய தரமான கல்வி மற்றும் செல்வ வளம் முழுவதையும் பெற்றுக்கொண்டு ‘ஏன் ஒரு தெக்கல்ல இருக்கு’ என்று கிளம்பிச் சென்றாலும், அதைப்பற்றிக் கிஞ்சித்தும் கவலைப்படாதவள் தான் இந்த அன்னை சென்னை. தன்னைத் தேடி வரும் ஒவ்வொரு புதிய மனிதனுக்கும் பாகுபாடின்றித் தனது கதவுகளைத் திறந்து வைத்து வாழவைக்கும் உன்னதமான குணமே இந்நகரத்தின் தனிச்சிறப்பாகும்.
மேலும் படிக்க: எம்எல்ஏக்களுக்கு கார்கள் தேர்வு செய்யும் பணி… தலைமைச் செயலகத்தில் அணிவகுத்த 5 மாடல் கார்கள்!
பிறர் முன் தலைகுனிய விடக்கூடாது:
நமக்கு வாழ்வளித்த சென்னை அன்னைக்கு நாம் நன்றி காட்டாவிட்டாலும் பரவாயில்லை, ஆனால் அவளைக் குப்பை மேடாக்கி பிறர் முன் தலைகுனிய விடக்கூடாது என்பதே இந்தச் சிறப்பு நாளில் நாம் எடுக்க வேண்டிய மிக முக்கிய உறுதியாகும். சென்னை தினமான இந்நாளில், மாநகரைச் சுத்தமாகவும் எழிலாகவும் பேணிப் பாதுகாத்து, உலகளவில் அதன் பெருமையை மேலும் உயர்த்த நாம் அனைவரும் ஒன்றிணைந்து சபதம் ஏற்போம்.