நெல்லையில் பரபரப்பு.. பெண் அளித்த ஒற்றை புகார்.. தூக்கப்பட்ட இன்ஸ்பெக்டர்.. அதிரடி காட்டிய DIG!
Veeravanallur Inspector Suspended : நெல்லை மாவட்டத்தில் பெண்ணை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றியதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், வீரவநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் அருண் குமாரை சஸ்பெண்ட் செய்து சரக டி. ஐ. ஜி. திருநாவுக்கரசு உத்தரவிட்டார்.
திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூரில் பாபநாசம்- நெல்லை பைபாஸ் சாலையில் காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த காவல் நிலையத்தில் ஆய்வாளர், உதவி ஆய்வாளர்கள் மற்றும் போலீசார் என சுமார் 15- க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். இதில், காவல் ஆய்வாளராக அருண்குமார் ( 40 வயது) என்பவர் பணிபுரிந்து வருகின்றார். இவருக்கும் மதுரையை சேர்ந்த இளம் பெண் ஒருவருக்கும் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால், இருவரும் செல்போனில் அடிக்கடி பேசி வந்ததுடன், நேரில் சந்தித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், அந்தப் பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாக காவல் ஆய்வாளர் அருண்குமார் கூறியதாக தெரிகிறது. இதனால், இருவரும் ஒரு கட்டத்தை மீறி பழகியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அந்த பெண்ணிடம், காவல் ஆய்வாளர் அருண்குமார் திடீரென பேசுவதை நிறுத்தியதாகவும், அவரை தவிர்த்ததாகவும் கூறப்படுகிறது.
காவல் நிலையத்தில் ஆய்வாளரிடம் பெண் வாக்குவாதம்
இதனால், அதிர்ச்சி அடைந்த அந்த பெண் இது தொடர்பாக காவல் ஆய்வாளர் அருண்குமாரிடம் கேட்டுள்ளார். இதற்கு, காவல் ஆய்வாளர் அருண்குமார் சரியான பதில் அளிக்கவில்லை என்று தெரிகிறது. பின்னர், வீரவநல்லூர் காவல் நிலையத்துக்கு நேரில் சென்று ஆய்வாளர் அருண்குமாரிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். தொடர்ந்து, இந்தச் சம்பவம் தொடர்பாக நெல்லை ஊரக உட்கோட்ட அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த சம்பவம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஸ்வேஸ் பாலசுப்ரமணியன் கவனத்துக்கு சென்றது.
மேலும் படிக்க: பரமக்குடியில் பரபரப்பு.. காவல் துணை கண்காணிப்பாளர் சஸ்பெண்ட்… காவல்துறையில் பெரும் ஷாக்!




ஓழுங்கு நடவடிக்கை எடுக்குமாறு எஸ்பி பரிந்துரை
அவர், இது தொடர்பாக உரிய விசாரணை நடத்துமாறு கீழ்மட்ட காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் வீரவநல்லூர் காவல் ஆய்வாளர் அருண்குமாரிடம் உயர் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில், மதுரையைச் சேர்ந்த அந்த பெண்ணிடம் ஆய்வாளர் அருண்குமார் எல்லை மீறி பழகியது தெரிய வந்ததாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில், ஒழுங்கீன நடவடிக்கையில் ஈடுபட்ட காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்குமாறு நெல்லை சரக டி. ஐ. ஜி. திருநாவுக்கரசுக்கு பரிந்துரை செய்தார். மேலும், இது தொடர்பான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
5 பிரிவுகளின் கீழ் வழக்கு- ஆய்வாளர் சஸ்பெண்ட்
அதன் அடிப்படையில், வீரவநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் அருண்குமார் மீது இளம்பெண்ணை ஏமாற்றுதல், அச்சுறுத்துதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து, துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கையின் காரணமாக காவல் ஆய்வாளர் அருண்குமாரை பணியிடை நீக்கம் செய்து நெல்லை சரக டி. ஐ. ஜி. திருநாவுக்கரசு அதிரடியாக உத்தரவிட்டார். இந்தச் சம்பவம் நெல்லை மாவட்ட காவல்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க: பூனையை கண்டுபிடித்தால் ரூ.50 ஆயிரம் சன்மானம்.. ஈரோடு உரிமையாளரின் அட்ராசிட்டி பாசம்.. சோஷியல் மீடியாவில் வைரல் விளம்பரம்!