குதிரை பேரம் நடத்தும் தவெக – தமிழக ஆளுநரிடம் திமுக பரபரப்பு புகார்
தமிழக வெற்றிக் கழக அரசு குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை நேரில் சந்தித்து திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, திமுக சட்டத் துறை இணைச் செயலாளர் பரந்தாமன் புகார் மனுவை அளித்தனர். இது தமிழக அரசியலில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
சென்னை, ஜூலை 4 : தமிழக வெற்றிக் கழக அரசு குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை நேரில் சந்தித்து திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, திமுக சட்டத் துறை இணைச் செயலாளர் பரந்தாமன் புகார் மனுவை அளித்தனர். அப்போது திமுக எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணனை காவல்துறை மூலம் மிரட்டியது குறித்தும் விசாரித்து நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழக ஆளுநரிடம் திமுக பரபரப்பு புகார்
இதுதொடர்பாக ஆளுநரிடம் புகார் மனு அளித்து விட்டு செய்தியாளர்களை சந்தித்த ஆர்.எஸ்.பாரதி, வேப்பனஹள்ளி மற்றும் நாகர்கோவில் திமுக எம்எல்ஏக்களிடம் ரூ.50 கோடி வரை கொடுப்பதாகக் கூறி தவெக குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். மேலும், நாகர்கோவில் எம்.எல்.ஏ. ஆஸ்டினிடம் ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தால் அமைச்சரவை தருவதாகவும் கூறியதாக புகார் தெரிவித்துள்ளார். இந்த தகவல் அரசியல் அரங்கில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இதையும் படிக்க : “தவெக அரசுடன் இணைந்து செயல்படுவோம்”.. மக்கள் பிரச்னைகளுக்குத் தீர்வு காண முதல்வரிடம் பேசுவேன்.. ஆளுநர் ஆர்லேகர் உறுதி!!




முன்னதாக திமுக சட்டத்துறை இணைச் செயலாளர் வழக்கறிஞர் இ.பரந்தாமன் அளித்த பேட்டியில், திமுக மீது குதிரைபேர குற்றச்சாட்டை சுமத்தி மக்கள் மத்தியிலே திமுக மீது அவதூறு பரப்ப வேண்டும் என்ற தவெக அரசின் முயற்சி முறியடிக்கபட்டுள்ளது. எங்களுடைய சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் வழக்கின் மூலமாக நீதிமன்றத்தால் விஜய் அரசினுடைய மூக்கு அறுக்கப்பட்டிருக்கிறது. இது பொய்யான வழக்கு இந்த வழக்கில இவரை கைது செய்து சிறைக்கு அனுப்ப வேண்டிய முகாந்தரம் இல்லை என்ற அடிப்படையில் ஜூலை 3, 2026 நேற்று அனிதா ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததன் மூலம், முதல் முறையாக இந்த குதிரைபேர சர்க்கார் மூக்கறுக்கப்பட்டுள்ளது.
ஆட்சிக்கு வந்து 55 நாட்களைக் கடந்தும் நிர்வாகத்தைப் பற்றி கவலைப்படாத தவெக அரசு தினந்தோறும் திமுக மீது எந்த குற்றங்களை சுமத்தலாம் என்று சிந்தித்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கதையை அரங்கேற்றி வருகிறார்கள். அந்த வகையிலதான் அனிதா ராதாகிருஷ்ணன் மீது ஒரு அவதூறு வழக்கு. அவதூறு வழக்கு போடுவதில் கைது செய்ய வேண்டிய அவசியம் கிடையவே கிடையாது.
இதையும் படிக்க : “பேரம் பேசிய தவெக மீது அதிரடிப் புகார்?”.. பழிவாங்கும் நடவடிக்கை.. அனிதா ராதாகிருஷ்ணன் பரபரப்பு குற்றச்சாட்டு!
முன்ஜாமீன் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்ட ஒரே காரணத்திற்காக அவசர அவசரமாக ஓடி வந்து அனிதா ராதாகிருஷ்ணனை காவல்துறை கைது செய்வதனுடைய பின்னணி என்ன.? எதற்கு ஒரு அவதூறு வழக்கில் கைது செய்தவரை 6 மணி நேரம் 7 மணி நேரம் காவல்துறை விசாரணை செய்தது.? அது என்ன மர்மம்.? என கேள்வி எழுப்பியிருந்தார்.