திமுகவின் நிலையால் மன வருத்தம்.. சென்னையில் நிர்வாகி தூக்கு போட்டு தற்கொலை.. பகீர் சம்பவம்!
Chennai Crime : தமிழக சட்டமன்ற தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகம் தோல்வி அடைந்த நிலைியல், தீராத மன வருத்தத்தில் இருந்து வந்த திமுக நிர்வாகி ஒருவர் சென்னையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சென்னை மாவட்டம், பழவந்தாங்கல் நேரு காலனி பகுதியை சேர்ந்தவர் ஏசுதாஸ் ( 56 வயது). இவர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் 164- ஆவது வட்ட செயலாளராக இருந்து வந்தார். இந்த பொறுப்பில் வெகு நாட்களாக ஏசுதாஸ் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது. இதே போல ஆலந்தூர் நகராட்சியாக இருந்த காலகட்டத்தில் அதன் உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார். இவருக்கு தேவி ஏசுதாஸ் என்ற மனைவி மற்றும் மகன்கள் உள்ளனர். தேவி ஏசுதாஸ், தற்போது சென்னை மாநகராட்சியின், ஆலந்தூர் மண்டலத்தின் 164- ஆவது வார்டு உறுப்பினராக பதவி வகித்து வருகிறார். இந்த நிலையில், சம்பவத்தன்று இரவு தூங்கி செல்வதாக கூறிவிட்டு ஏசுதாஸ் வீட்டின் படுக்கை அறைக்கு சென்று உள் பக்கமாக பூட்டி உள்ளார். வெகு நேரம் ஆகியும் அவர் வெளியே வராததால் அவரது மனைவி தேவி சந்தேகம் அடைந்தார். தொடர்ந்து, அறையின் கதவை தட்டி பார்த்தும் ஏசுதாஸ் கதவை திறக்கவில்லை.
தூக்கு போட்டு தொங்கிய ஏசுதாஸ்
இதனால், சந்தேகம் அடைந்த தேவி தனது மகன்களை அழைத்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அங்கு, மின்விசிறியில் ஏசுதாஸ் கயிறால் தூக்கு போட்டு தொங்கிய நிலையில் கிடந்தார். உடனே, அவரை தூக்கில் இருந்து மீட்டு பரிசோதித்த போது அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக, பழவந்தாங்கல் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனை செய்வதற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் படிக்க: கே.என்.நேரு மீது இறுகும் பிடி.. நகராட்சித்துறை ஊழல் வழக்கில் தவெக அரசின் அதிரடி மூவ்.. நீதிமன்றத்தில் சூடுபிடித்த வாதம்!




திமுக தேர்தல் தோல்வியால் தீராத வருத்தம்
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக ஏசுதாசின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இது தொடர்பாக நடத்தப்பட்ட முதல் கட்ட விசாரணையில், தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகம் தோல்வி அடைந்திருந்தது. இதனால், திமுக நிர்வாகி ஏசுதாஸ் கடும் மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. குடும்பத்தினரிடமும் திமுக தேர்தல் தோல்வி குறித்து மன வருத்தத்துடன் பேசி வந்ததாகவும் கூறப்படுகிறது.
குடும்பத்தினருடன் தகராறு செய்த விட்டு விபரீத முடிவு
இதற்கு, ஏசுதாஸ் அவரது மனைவி மற்றும் மகன் உள்ளிட்டோர் ஆறுதல் கூறி வந்தனர். ஆனால், இதனை ஏசுதாஸ் ஏற்றுக்கொள்ள முடியாத காரணத்தால் திமுக தேர்தல் தோல்வி மன வருத்தத்தில் இருந்து வெளிவரவில்லை என்று தெரிகிறது. இந்த நிலையில், சம்பவத்தன்று குடும்பத்தினருடன் ஏசுதாஸ் வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து, அவர் அறைக்குள் சென்று தற்கொலை செய்திருக்கலாம் என்று சந்தேகப்படுவதாக போலீசார் விசாரணையில் தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க: குன்னூர் விநாயகர் கோவிலில் ரூ.15 கோடி கார் பார்க்கிங் திட்டம் ரத்து.. இந்து சமய அறநிலையத்துறை உத்தரவு!