மத்திய அமைச்சர் பதவி கேட்கும் தேமுதிக?.. பேச்சுவார்த்தை நடத்தும் பாஜக.. திண்டுக்கல் சீனிவாசன் சொன்ன தகவல்!!
BJP holding talks with dmdk: தேமுதிகவுடன் பாஜக தலைமையும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகனும் பேசி வருகின்றனர். நேற்று நடந்த பாஜக கட்சி கூட்டத்திலும் இதுபற்றி பேசப்பட்டது. தேமுதிக எதிர்பார்ப்பு என்ன, அவர்களுக்கு என்ன பிரச்சினை என்பது குறித்து கேட்டறிந்து வருகின்றனர்.
திண்டுக்கல், பிப்ரவரி 11: தேமுதிகவுடன் அதிமுக நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் தற்போது தில்லியில் உள்ள பாஜக தலைமை, தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார். சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேமுதிக யாருடன் கூட்டணி வைக்கும் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தேமுதிகவிடம் திமுகவும், அதிமுகவும் மாறி மாறி பேசி வருகிறது. எப்படியாவது தேமுதிகவை தேசிய ஜனநாயக கூட்டணிக்கு கொண்டு வர வேண்டும் என பாஜக முயல்கிறது. அதேசமயம், கேட்கும் சீட்களை கொடுக்கும் கட்சிகளுடன் கூட்டணி என்பதில் தேமுதிக பிடிவாதமாக இருக்கிறது.
மேலும் படிக்க: தவெகவினர் மீது தாக்குதல்.. கர்ப்பிணி உட்பட 2 பேர் ஐசியூவில் சிகிச்சை.. விஜய் கடும் கண்டனம்!!
தேமுதிகவுடன் பாஜக பேச்சுவார்த்தை:
இந்தசூழலில் நேற்று தேமுதிக கூட்டணி தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறுகையில், தேமுதிகவுடன் பாஜக தலைமையும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகனும் பேசி வருகின்றனர். நேற்று நடந்த பாஜக கட்சி கூட்டத்திலும் இதுபற்றி பேசப்பட்டது. தேமுதிக எதிர்பார்ப்பு என்ன, அவர்களுக்கு என்ன பிரச்சினை என்பது குறித்து கேட்டறிந்து வருகின்றனர். மாநில அளவில் தேமுதிகவுடன் கூட்டணியை முடிக்க முடியாததால் டெல்லியில் இருந்து பேசுகிறார்கள். நல்லபடியாக முடியும். அதைத்தான் நாங்களும் எதிர்பார்க்கிறோம் என்றார்.
பாஜகவை நம்பி சிலர் வருவார்கள்:
அதிமுக பேச்சு வார்த்தை நடத்தாமல் பாஜக நடத்துகிறதே? என்ற கேள்விக்கு, பாஜக தானே எங்கள் கூட்டணி. சாப்பாட்டில் காய்கறி, கூட்டு வைப்பது போலத்தான் இது. எங்களிடம் அன்பாக இருப்பவர்களை நாங்கள் அழைத்திருப்போம். பாஜகவிடம் அன்பாக உள்ளவர்களிடம் அவர்கள் பேசுகிறார்கள். எங்களை நம்பி சிலர் வருவார்கள், அவர்களை நம்பி சிலர் வருவார்கள். யார் அழைத்தாலும் அதிமுக தலைமையில் இருக்கிற தேசிய ஜனநாயக கூட்டணிக்குதானே வருவார்கள் என பதிலளித்தார்.
மத்திய அமைச்சர் பதவி கேட்கும் சிலர்:
சில முரண்பட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள் இருப்பார்கள். அதாவது சிலர் மத்திய அரசாங்க பதவி கேட்பார்கள். அதனால் அங்கே பேசிக்கொள்ளுங்கள் என்று சொல்வோம். ஆனால் முடிவு இந்த கூட்டணிக்கு சாதகமாகத்தான் வரும். டெல்லி சென்று கூட்டணியை பேசி முடித்தது எடப்பாடி பழனிசாமி தான். அமித்ஷா வந்து இங்கு அறிவித்தார். எங்கள் கூட்டணிக்கு தலைவர் எடப்பாடி பழனிசாமிதான், தலைமை அதிமுகதான் என்று கூறினார்.
மேலும் படிக்க: படிப்பு தான் ஒரு பெண்ணுக்கு உண்மையான அணிகலன்.. மகளிர் கிறிஸ்தவ கல்லூரி விழாவில் பேசிய முதலமைச்சர்!
இதன் மூலம் விரைவில் இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டு, அதிமுக – பாஜகவுடன் தேமுதிக தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.