கூட்டணியை முடிக்காத தேமுதிக…அமைதிகாக்கும் தலைமை..குழப்பத்தில் தொண்டர்கள்.. என்னதான் திட்டம்?
DMDK Alliance Decision: தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேசிய முற்போக்கு திராவிட கழகம் கூட்டணி நிலைப்பாட்டை எடுக்காத காரணத்தினால் விருப்ப மனுக்களை பெறுவதில் கட்சியினர் ஆர்வம் காட்டவில்லை என்று கூறப்படுகிறது. மேலும்,தேமுதிகவின் தேர்தல் நிலைப்பாடு என்ன என்பது புரியாத புதிராகவே உள்ளதாக கட்சியினர் புலம்புகின்றனர்.
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பல்வேறு தொகுதிகளில் “உள்ளம் தேடி இல்லம் நாடி” என்ற பெயரில் மக்கள் சந்திப்பு பயணத்தை மேற்கொண்டு வந்தார். மேலும், கோயம்பேட்டில் உள்ள கட்சியின் அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் கூட்டத்தை நடத்தி அதில், எந்த கட்சியுடன் கூட்டணி அமைக்கலாம் என்ற கருத்துக்களை கேட்டறிந்தார். அதன் அடிப்படையில், கடந்த ஜனவரி 9-ஆம் தேதி கடலூரில் நடைபெற்ற தேமுதிக மாநில மாநாட்டில் கூட்டணி அறிவிக்கப்படும் என்று அதிகாரப்பூர்வமாக பிரேமலதா தெரிவித்து வந்தார். இதனை உண்மை என நம்பிய கட்சியினர் மற்றும் பொதுமக்கள் அந்த மாநாட்டுக்கு சென்றிருந்த நிலையில், பெரிய பெரிய கட்சிகளே தற்போது வரை கூட்டணி அறிவிக்காத நிலையில், நாம் எதற்காக முந்திக்கொண்டு கூட்டணியை அறிவிக்க வேண்டும் என்று கூறி எதிர்பார்ப்பு என்ற தீயை வாயால் ஊதி அணைத்திருந்தார்.
விருப்ப மனுக்களை பெற வராத தேமுதிகவினர்
இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும் தேமுதிக சார்பில் போட்டியிட விரும்பும் கட்சியினர் கடந்த பிப்ரவரி 6- ஆம் தேதி முதல் வருகிற பிப்ரவரி 12- ஆம் தேதி வரை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் விருப்ப மனுக்களை பெற்றுக் கொள்ளலாம் என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்திருந்தார். அதன்படி, ஆரம்பத்தில் தேமுதிகவினர் குறிப்பிட்ட அளவில் விருப்ப மனுக்களை பெற்று வந்தனர். ஆனால், நேற்று திங்கள் கிழமை ( பிப்ரவரி 9) கட்சி அலுவலகத்தில் விருப்ப மனுக்களை பெறுவதற்கு கட்சியினர் யாரும் வரவில்லை.
மேலும் படிக்க: அன்புமணிக்கு தான் பாமக தலைவர் – தேர்தல் ஆணையம் மீண்டும் உறுதி




வெறிச்சோடி காணப்பட்ட தேமுதிக அலுவலகம்
இதனால், தேமுதிக அலுவலகம் ஆள்கள் நடமாற்றம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. அந்த அலுவலகத்தில் விருப்ப மனுக்களை வழங்குவதற்காக அமைக்கப்பட்டிருந்த மேஜைகளில் அமர்ந்திருந்த கட்சியினர் வெறும் கையால் ஈ ஓட்டிக் கொண்டிருந்தனர். தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்களே உள்ள நிலையில் கூட்டணி குறித்த முடிவை எடுக்காமலும், அது குறித்து தெளிவான பதில்களை கட்சியினர் மத்தியில் தெரிவிக்காமல் தேமுதிக தலைமை இருந்து வருவதால் விருப்ப மனுக்களை பெறுவதற்கு கட்சியினர் ஆர்வம் காட்டவில்லை என்று கூறப்படுகிறது.
கட்சியினர் மத்தியில் ஊற்சாகம் இன்றி…
இது, தேமுதிகவினர் மத்தியில் ஒரு விதமான தொய்வை ஏற்படுத்துவதாகவும், கட்சியினர் உற்சாகமின்றி காணப்படுவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று திங்கள் கிழமை அஷ்டமி என்பதாலும், நல்ல நாள் கிடையாது என்பதாலும் கட்சியினர் விருப்ப மனுக்களை பெற வரவில்லை என்று தேமுதிக சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது. இதனால், தேமுதிக எந்த மாதிரியான கூட்டணி நிலைப்பாட்டை எடுக்கப் போகிறது. தேர்தல் திட்டம் என்ன என்பது புரியாத புதிராகவே உள்ளது.
மேலும் படிக்க: ரயில் திட்டங்கள் தாமதத்திற்கு தமிழக அரசே காரணம்: முதல்வர் ஸ்டாலினுக்கு மத்திய அமைச்சர் பதில்