தேமுதிக-திமுக கூட்டணி பேச்சுவார்த்தை…அமைச்சர் எ.வ.வேலு அளித்த புதிய விளக்கம்!
DMDK Alliance: தேசிய முற்போக்கு திராவிட கழகத்துடன் திராவிட முன்னேற்றக் கழகம் கூட்டணி பேச்சு வார்த்தை நடத்தி வருவது தொடர்பான கருத்துக்கு அமைச்சர் எ. வ. வேலு புதிய விளக்கத்தை அளித்துள்ளார். கூட்டணி குறித்த அறிவிப்பை திமுக தலைமை வெளியிடும் என்று குறிப்பிட்டார்.
தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் திராவிட முன்னேற்ற கழக கூட்டணியில் கிட்டத்தட்ட கூட்டணி இறுதியாகி விட்டதாகவே தெரிகிறது. ஆனால், தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்து வந்த தேசிய முற்போக்கு திராவிட கழகம் மற்றும் ராமதாஸ் தலைமையிலான பாட்டாளி மக்கள் கட்சி தனது கூட்டணி முடிவை அறிவிக்காமல் உள்ளது. இந்த நிலையில், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்திடம் தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் திமுக கூட்டணி தலைமை கூட்டணி பேச்சு வார்த்தை நடத்திய வருவதாக பரவலாக பேசப்பட்டு வருகிறது. அதன்படி, தேசிய ஜனநாயக கூட்டணியில் ஒரு வாரத்தில் தேமுதிக இணையும் என்றும், அதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் அந்த கூட்டணியை சேர்ந்த பாரதீய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் கருத்து தெரிவித்திருந்தனர்.
பிரேமலதாவுடன் திமுக நிர்வாகிகள் பேச்சுவார்த்தை
இதே போல, கேரள மாநிலம், திருவனந்தபுரத்துக்கு சென்றிருந்த தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்தை திராவிட முன்னேற்றக் கழகத்தை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் சந்தித்து கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி இருந்ததாக தகவல் வெளியாகி இருந்தது. இது தொடர்பான கூட்டணி பேச்சு வார்த்தையை, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ. வ. வேலு மேற்கொண்டு வந்ததாக பேசப்பட்டு வந்தது.
மேலும் படிக்க: சேலத்துக்கு உங்க விஜய் நான் வரேன்…திட்டமிட்டபடி மக்கள் சந்திப்பு..நிபந்தனைகளுடன் காவல்துறை அனுமதி!




தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தை-எ. வ. வேலு விளக்கம்
இந்த நிலையில், தேமுதிகவுடன் கூட்டணி பேச்சு வார்த்தை தொடர்பாக எ.வ. வேலு கூறுகையில், திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் இணைக்க கோரி தேசிய முற்போக்கு திராவிட கழக தலைமையிடம் நான் எந்த பேச்சுவார்த்தையையும் நடத்தவில்லை. கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை மற்றும் கூட்டணி குறித்த அறிவிப்பு ஆகியவற்றை திராவிட முன்னேற்றக் கழக தலைமை தான் முடிவு எடுக்கும். அதன் அடிப்படையில் தான் திமுக கூட்டணி குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என்று தெரிவித்தார்.
தேமுதிகவின் நிலைப்பாடு என்ன
இதனிடையே, தேமுதிக கூட்டணி குறித்த அறிவிப்பை முறையாக வெளியிடாத பட்சத்தில், 234 தொகுதிகளிலும் கட்சியினரிடம் இருந்து விருப்ப மனுக்களை பெறும் பணியை அந்தக் கட்சி தொடங்கி உள்ளது. இதனால், அந்த கட்சி தேசிய ஜனநாயக கூட்டணியில் தொடரப் போவதாக அறிவிக்குமா அல்லது திராவிட முன்னேற்ற கழக கூட்டணியில் ஐக்கியம் ஆகுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதனிடையே, தேமுதிக வருகிற பிப்ரவரி 17-ஆம் தேதிக்குள் தனது கூட்டணி முடிவை வெளியிட உள்ளதாக அந்த கட்சிகளின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: சேப்பாக்கம் மைதானத்தில் விசிலுக்கு போலீஸ் தடை – தவெகவினர் கண்டனம் – என்ன நடந்தது?