மதுராந்தகம் மாநாட்டில் தேஜ கூட்டணியின் ஒற்றுமை…சட்டமன்ற தேர்தல் வெற்றிக்கு முன்னுதாரணமா?
NDA Alliance Conference: மதுராந்தகத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி மாநாட்டில் பங்கேற்ற கூட்டணி கட்சிகளிம் ஒருமித்த கருத்து மற்றும் ஒற்றுமை காணப்பட்டது. இந்த ஒற்றுமை வருகிற சட்டமன்ற தேர்தலில் தேஜ கூட்டணி வெற்றி பெருவதற்கு முன்னுதாரணமாக என்ற கேள்வி எழுந்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் கடந்த மாதம் தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரம்மாண்ட மாநாடு நடைபெற்றிருந்தது. இந்த மாநாட்டில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றி இருந்தார். இந்த மாநாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், ஐஜேகே தலைவர் டி. ஆர். பாரிவேந்தர், தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியன், புதிய நீதி கட்சி தலைவர் ஏ. சி. சண்முகம் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றிருந்தனர். இந்த மாநாட்டில் பல ஆண்டுகளாக மோதல் போக்குடன் இருந்து வந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியும், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனும் ஒரே மேடையில் அமர்ந்திருந்ததும், சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தியதும் முக்கிய சிறப்பம்சமாக பார்க்கப்பட்டது.
திமுகவை வீழ்த்தும் ஒற்றை நேர்கோட்டில்…
இந்த ஒற்றுமையானது தமிழகத்தில் ஆளும் கட்சியாக உள்ள திமுகவை வீழ்த்த வேண்டும் என்ற ஒருமித்த கருத்தில் இந்த கட்சிகளின் தலைவர்கள் இருப்பதை அடிக்கோடிட்டு காண்பித்தது. இதே போல, தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள பல பிராந்திய கட்சிகளின் தலைவர்கள், பல்வேறு சமுதாயங்களிடம் தேஜ கூட்டணிக்கான ஆதரவை சேகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டதும் கவனத்தை ஈர்ப்பதாக அமைந்திருந்தது. கடந்த 2017- ஆம் ஆண்டு அதிமுகவில் இருந்து தினகரன் வெளியேற்றப்பட்ட பிறகு, எடப்பாடி பழனிசாமியும், தினகரனும் எதிர் மனப்பான்மையுடன் இருந்து வந்தனர். ஆனால், இந்த மாநாட்டில் அவர்கள் இருவரும் ஒன்றாக இருந்தது முக்கிய காரணமாக அமைந்திருந்தது.
மேலும் படிக்க: கரூர் கொடூர சம்பவம்…2 காவலர்களிடம் சிபிஐ அதிகாரிகள் கிடுக்கிப்பிடி விசாரணை!




அதிமுகவின் வாக்குகள் பிரிவதை தடுப்பதற்காக…
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆதரவாளர்களை மீண்டும் ஒன்று சேர வைக்கவும், அதிமுகவின் வாக்குகள் பிரிவதை தடுக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவர்கள் தெரிவித்திருந்தனர். இது ஒரு புறம் இருக்க, மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, மு.க. ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக அரசாங்கத்தை கடுமையாக தாக்கியும், ஊழல் மற்றும் நிர்வாக தோல்வியை கடுமையாக குற்றம் சாட்டி பேசியிருந்தார்.
திமுக அரசை விமர்சித்து பேசிய பிரதமர் மோடி
மேலும், திமுக அரசை சிஎம்சி அரசு என்று பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்திருந்தார். அதாவது, ஊழல் அரசு, மாபியா மற்றும் குற்றத்துக்காக துணை போகிறது என்று குறிப்பிட்டிருந்தார். மேலும், தமிழக இளைஞர்களின் கவலைகளை நிவர்த்தி செய்வதற்கு திமுக அரசு தவறிவிட்டதாகவும், போதைப் பொருள் தொடர்பான பிரச்சனைகள் மாநிலத்தில் ஒரு பெரிய கவலையாக உருவெடுத்துள்ளதாகவும் கூறியிருந்தார். 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் உள்ள வாக்காளர்கள் இந்த பிரச்சனைக்கு எதிராக பதிலளிப்பார்கள் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டு பேசியிருந்தார்.
மேலும் படிக்க: “இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்” திருப்பூர் ஜவுளி வணிகம் 5 ஆண்டுகளில் மிகப்பெரிய வளர்ச்சி அடையும்!