“விழுப்புரம் போலீசுக்கு தனி அதிகாரமா?”.. கம்யூனிஸ்ட் தலைவர் சண்முகம் கொந்தளிப்பு! நீட் போராட்டக் கைதால் பரபரப்பு!
CPM Shanmugam Warns TN Police: நீட் போராட்டம் சிபிஎம் சண்முகம் விழுப்புரம் காவல்துறையினரின் அராஜகத்தைக் கண்டித்துக் கொந்தளித்துப் பேசியதால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்து, மீண்டும் போராட்டம் நடைபெறும் மைதானத்திற்கு அழைத்து வர வேண்டும் என்றும், இரவு 10 மணி வரை திட்டமிட்டபடி போராட்டம் தொடரும் என்றும் அவர் அறுதியிட்டுக் கூறினார்.
விழுப்புரம், ஜூலை 24: நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும், மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வலியுறுத்தியும் நடைபெற்ற இரவு நேரப் போராட்டத்தின் போது, விழுப்புரத்தில் தோழர்களைக் கைது செய்த மாவட்ட காவல்துறையினருக்கு சிபிஎம் மாநிலச் செயற்குழு உறுப்பினர் சண்முகம் கடும் எச்சரிக்கையும் கண்டனமும் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: வார இறுதி நாட்களில் சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு – எந்தெந்த இடங்களுக்கு தெரியுமா?
போராட்டமும் நீட் கோரிக்கைகளும்:
மத்திய பிஜேபி அரசு நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும், வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளால் நாடு முழுவதும் 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் உயிரிழந்ததற்குப் பொறுப்பேற்று மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். டெல்லியில் அமைதியான முறையில் போராடிய மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மீது காவல்துறை கொடூரத் தாக்குதல் நடத்தியதைக் கண்டித்தும், காயமடைந்தவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வலியுறுத்தியும் இந்திய மாணவர் சங்கம் (SFI) மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (DYFI) சார்பில் நாடு தழுவிய “நாடே விழித்தெழு” தொடர் இரவுப் போராட்டம் அறிவிக்கப்பட்டது.
விழுப்புரத்தில் மட்டும் அராஜகமா?”
தமிழகம் முழுவதும் காவல்துறை உயர் அதிகாரிகளின் அனுமதியுடன் இரவு 10 மணி வரை போராட்டங்களை அமைதியான முறையில் நடத்தத் திட்டமிடப்பட்டு, 25-க்கும் மேற்பட்ட இடங்களில் இப்போராட்டம் நடைபெற்றது.
மாநிலத்தின் பிற பகுதிகளில் எந்தவொரு அசம்பாவிதமும் இல்லாத நிலையில், விழுப்புரம் நகரத்தில் மட்டும் அமைதியாகக் கூடிய தலைவர்களையும் ஊழியர்களையும் காவல்துறையினர் அராஜகமான முறையில் தாக்கி, பலவந்தமாகக் கைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளதாகக் குற்றம்சாட்டினார். “விழுப்புரம் மாவட்ட காவல்துறை தமிழ்நாடு காவல்துறைக்கு அப்பாற்பட்டு தனித்து செயல்படுகிறதா? அவர்களுக்குத் தனி அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதா?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.
மேலும் படிக்க: 200-க்கும் மேற்பட்ட காவலர் குடும்பங்களிடம் ரூ.20 கோடி மோசடி.. பெண் இன்ஸ்பெக்டர் உள்பட 3 பேருக்கு சிறை!!
தமிழக அரசுக்குக் கோரிக்கை:
விழுப்புரத்தில் அராஜகத்தில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் மீது தமிழக அரசு உடனடியாகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் சண்முகம் வலியுறுத்தினார். மேலும், கைது செய்யப்பட்டு மண்டபத்தில் அடைக்கப்பட்டுள்ள அனைத்துத் தோழர்களையும் உடனடியாக விடுதலை செய்து, மீண்டும் போராட்டம் நடைபெறும் மைதானத்திற்கு அழைத்து வர வேண்டும் என்றும், இரவு 10 மணி வரை திட்டமிட்டபடி போராட்டம் தொடரும் என்றும் அவர் அறுதியிட்டுக் கூறினார். மீறினால் காவல்துறையினருக்கு எதிரான நகர்வுகள் வேறு மாதிரியாக இருக்கும் என்றும் அவர் எச்சரித்தார்.