துரிதமாக செயல்பட்டு குழந்தையின் உயிரைக் காப்பாற்றிய காவலர் – முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு
CM appreciates police who saved a child’s life: கடலூர் மாவட்டம் விருதாச்சலத்தில் கடை ஒன்றில் குழந்தை சுவாசமில்லாமல் மயங்கிய குழந்தையை துரிதமாக செயல்பட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்ற தலைமை காவலரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ வைரலான நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
சென்னை, ஜனவரி 13 : கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில், ஒரு சிறு குழந்தையின் உயிரைக் காப்பாற்றிய தலைமைக் காவலரின் (Police) மனிதநேய செயல் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது. இந்த துணிச்சலான நடவடிக்கைக்கு அன்பின் வழியது உயிர்நிலை என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரடியாக பாராட்டு தெரிவித்துள்ளார். கடந்த ஜனவரி 6, 2026 அன்று விருத்தாசலம் பெரியார் நகரில் உள்ள ஒரு கடையில், இளம்பெண் ஒருவர் தனது ஒன்றரை வயது குழந்தையை கையில் வைத்துக் கொண்டு உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக குழந்தை தாயின் கையிலிருந்து தவறி கீழே விழுந்தது. உடனே குழந்தையை தூக்கிய போது குழந்தை மூச்சு பேச்சில்லாமல் இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த இளம்பெண் என்ன செய்வதென்று தெரியாமல் பதற்றமடைந்தார்.
குழந்தையின் உயிரைக் காப்பாற்றிய காவலர்
அந்த நேரத்தில் கடைக்கு வெளியே பணியில் இருந்த தலைமைக் காவலர் சரவணன், உள்ளே இருந்து வந்து சத்தத்தைக் கவனித்து விசாரிக்கச் சென்றார். குழந்தையை கையில் வாங்கிய அவர், அது அசைவின்றி சுவாசமில்லாமல் இருப்பதை கண்டார். ஒரு நொடியும் தாமதிக்காமல், குழந்தையை தனது மார்போடு இறுக்கமாக அணைத்துக் கொண்டு, மின்னல் வேகத்தில் கடையிலிருந்து வெளியே ஓடி வந்த தலைமைக் காவலர் சரவணன், சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் ஓடி அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு சென்றார்.




இதையும் படிக்க : திமுக-காவல்துறை தொடர்பாக சிபிஐ-யிடம் ஆதாரத்துடன் புகார்…பரபரப்பை கிளப்பிய சி.டி.ஆர். நிர்மல் குமார்!
முதல்வரின் எக்ஸ் பதிவு
அன்பின் வழியது உயிர்நிலை
சில நாட்களுக்கு முன்னர் காவல்துறையில் பணிநியமன ஆணைகள் வழங்கும் விழாவில் கலந்துகொண்டபோது, “காவலர் பணி மனிதநேயத்தோடு இணைந்ததாக இருக்க வேண்டும். வீரத்தின் அடித்தளம் அன்புதான்” என அறிவுறுத்தி இருந்தேன்.
அதனை மெய்ப்பிக்கும் வகையில் குழந்தையின் உயிரைக்… https://t.co/zl6PPsw8bj
— M.K.Stalin – தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) January 13, 2026
நிலைமையை உடனடியாக புரிந்த மருத்துவர்கள், அவசர முதலுதவி அளித்ததையடுத்து குழந்தை மீண்டும் சுயநினைவு பெற்று நலமடைந்தது. இந்த சம்பவத்தின் போது, குழந்தை தாயின் கையிலிருந்து கீழே விழும் காட்சிகளும், தலைமைக் காவலர் சரவணன் குழந்தையை தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு ஓடும் காட்சிகளும் அந்தக் கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் தெளிவாக பதிவாகியுள்ளன.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதைத் தொடர்ந்து, தலைமைக் காவலர் சரவணனுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்தன. இதனைத் தொடர்ந்து, கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், தலைமைக் காவலர் சரவணனை நேரில் சந்தித்து, அவருக்கு சால்வை அணிவித்து பாராட்டினார். இந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், தலைமைக் காவலர் சரவணனின் செயலுக்கு பாராட்டு தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதையும் படிக்க : கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் ரவுடி கொல்லப்பட்ட சம்பவம்…4 போலீசார் மீது பாய்ந்த நடவடிக்கை!
‘அன்பின் வழியது உயர்நிலை’
முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது பதிவில், அன்பின் வழியது உயிர்நிலை. சில நாட்களுக்கு முன்னர் காவல்துறையில் பணிநியமன ஆணைகள் வழங்கும் விழாவில் கலந்துகொண்டபோது, “காவலர் பணி மனிதநேயத்தோடு இணைந்ததாக இருக்க வேண்டும். வீரத்தின் அடித்தளம் அன்புதான்” என அறிவுறுத்தி இருந்தேன். அதனை மெய்ப்பிக்கும் வகையில் குழந்தையின் உயிரைக் காப்பாற்றியுள்ள தலைமைக் காவலர் சரவணன் அவர்களுக்குப் பாராட்டுகள்! என்று தெரிவித்துள்ளார்.