தவெக தலைவர் விஜய்க்கு பாஜக நெருக்கடி கொடுக்க அவசியமில்லை…நயினார் நாகேந்திரன்!
Nainar Nagendran Pressmeet: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு நெருக்கடி கொடுக்க அவசியம் இல்லை என்று தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். மேலும், தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியை அகற்ற வேண்டும் என்று தெரிவித்தார்.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கும் அழுத்தம் கொடுக்க பாஜகவுக்கு அவசியம் இல்லை என்று அந்தக் கட்சியின் தமிழ் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார். இது தொடர்பாக மதுரையில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் வருகிற 23- ஆம் தேதி ( வெள்ளிக்கிழமை) பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில், பிரதமர் நரேந்திர மோடி உரையாற்ற உள்ளார். இந்த நிகழ்வில் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சியின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். இந்த நிகழ்ச்சியை சென்னை, திருச்சி, மதுரை ஆகிய பகுதிகளில் எங்கு நடத்தலாம் என்பது தொடர்பான ஆலோசனை மேற்கொண்டு வருகிறோம். தற்போது அதற்கான இடங்களை தேர்வு செய்து ஆய்வு செய்து வருகிறோம். 23- ஆம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியானது தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கும் அரசியல் மாநாடு ஆகும்.
தேஜ கூட்டணியை இறுதி செய்யும் பணி
பிரதமர் மோடி வருகைக்கு முன்பாக கூட்டணியை இறுதி செய்யும் பணிகளை தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தலைவராக இருக்கும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, தமிழக பா. ஜ. க. வின் தேர்தல் பொறுப்பாளர் பியூஸ் கோயல், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் முடிவு செய்வார்கள். தேசிய ஜனநாயக கூட்டணியுடன், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி கூட்டணி வைத்துள்ளார். இதில், கட்சியின் நிறுவனர் ராமதாசுக்கும், அன்புமணிக்கும் இடையிலான உள் கட்சி விவகாரத்தில் நாங்கள் தலையிட முடியாது.
மேலும் படிக்க: கொடைக்கானலில் இனி ஆன்லைன் மூலம் மட்டுமே நுழைவு கட்டணம்.. வனத்துறை புதிய அறிவிப்பு!




விஜய்க்கு நெருக்கடி கொடுக்க அவசியமில்லை
தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய்க்கு மத்திய பாஜக அரசு நெருக்கடி கொடுக்க அவசியமில்லை. மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பை ஒரு பிரிவு கிடையாது என்று அண்ணாமலை கூறியதில் எந்த உள் அர்த்தமும் கிடையாது. தேர்தல் பிரச்சாரத்தின் போது சில வார்த்தைகளை அவர் பயன்படுத்தி உள்ளார். இதில், மும்பை மக்களுக்கு எதிராகவோ, உத்தவ் தாக்கரேவுக்கு எதிராகவோ எந்த கருத்தையும் கூறவில்லை. திமுகவிடம் ஆட்சி அதிகாரத்தில் காங்கிரஸ் கட்சி பங்கு கேட்பதை போல, பாஜகவும் கேட்க வேண்டும் என்று அவசியம் இல்லை.
தமிழகத்தில் திமுக ஆட்சி அகற்றப்பட வேண்டும்
எங்களை பொறுத்தவரை தமிழகத்தில் திராவிட முன்னேற்ற கழக ஆட்சி நீக்கப்பட வேண்டும். எனவே, நாங்கள் கூட்டணி ஆட்சி வேண்டும் என்று கூறவில்லை. தமிழக மக்களிடம் திமுக ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்று தேசிய ஜனநாயக கூட்டணி கோரிக்கை வைக்கிறது. அதிமுகவிடம் 56 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் 3 அமைச்சர் பதவிகள் பாஜக சார்பில் கேட்கப்படுவதாக வெளியான தகவல் வெறும் வதந்தியாகும். பிரதமர் மோடியின் மதுரை வருகையின் போது, திருப்பரங்குன்றம் மலைக்கு செல்வதற்கு வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க: டெல்லி சிபிஐ அலுவலகத்தில் இன்று ஆஜராகிறார் விஜய்.. பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்..