சென்னை மாநகராட்சியில் நிதி நெருக்கடி.. முடிக்கப்பட்ட பணிகளுக்கு ரூ.2,000 கோடி நிலுவை.. சொத்து வரி வசூலைத் தீவிரப்படுத்த முடிவு!
Chennai Corporation Facing Serious Financial Crisis | சென்னை மாநகராட்சி மிக கடுமையான பொருளாதார சிக்கலை எதிர்க்கொண்டுள்ளது. இந்த நிதிச் சுமையைச் சமாளிக்கும் முயற்சியாக, மாநகராட்சி செலவுகளைக் குறைத்து, சொத்து வரி வசூலைத் தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
சென்னை, ஜூலை 06 : சென்னை மாநகராட்சியில் பல்வேறு முடிக்கப்பட்ட பணிகளுக்காக ஒப்பந்ததாரர்களுக்கு வழங்க வேண்டிய சுமார் ரூ.2,000 கோடி நிலுவைத் தொகையை இன்னும் வழங்காப்படாமல் உள்ளது. இந்த நிதிச் சுமையைச் சமாளிக்கும் முயற்சியாக, மாநகராட்சி தனது செலவுகளைக் குறைத்து, சொத்து வரி வசூலைத் தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
பெரிய அளவிலான திட்டங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன
நிதி நெருக்கடியின் காரணமாக, புதிய திட்டங்களுக்கான செலவுகளைக் குறைக்கவும், பணிகளைச் சரியான கால இடைவெளியில் மேற்கொள்ளவும் மாநகராட்சி முடிவெடுத்துள்ளது. இதன் விளைவாக, பல பெரிய அளவிலான திட்டங்கள் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஒப்பந்ததாரர்கள் தங்கள் நிலுவைத் தொகையைப் பெற ‘டிரேட் ரிசீவபிள்ஸ் டிஸ்கவுண்டிங் சிஸ்டம்’ மூலம் பணம் பெறலாம் அல்லது ‘ரிசீவபிள்ஸ் எக்ஸ்சேஞ்ச் ஆஃப் இந்தியா லிமிடெட்’ மூலம் முன்பணத்தைப் பெறலாம் என்று அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : “சொன்னதைச் செய்துகாட்டிய முதல்வர் விஜய்”.. உதயநிதி ஸ்டாலின் அதிரடி விமர்சனம்!!




ரூ.10 கோடியாக உயர்த்தப்பட்டுள்ள சொத்து வரி வசூல் இலக்கு
சொத்து வரி வருவாயை அதிகரிக்கும் நோக்கில், தினசரி சொத்து வரி வசூல் இலக்கை ரூ.5 கோடியிலிருந்து ரூ.10 கோடியாக மாநகராட்சி இரட்டிப்பாக்கியுள்ளது. நடப்பு அரையாண்டிற்கான ரூ.980 கோடி மதிப்பிலான சொத்து வரி இலக்கில், ஜூலை 1 நிலவரப்படி சுமார் ரூ.500 கோடி மட்டுமே வசூலிக்கப்பட்டுள்ளது. இதற்காகக் கூடுதலாகப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர், கூடுதல் ‘பாயிண்ட்-ஆஃப்-சேல்’ (POS) கருவிகள் வழங்கப்பட்டுள்ளன, மேலும் வரி வசூல் நேரமும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
தூய்மைப் பணியாளர்கள் ஊதியம் பாதிக்கப்படாது
பெரிய வணிக வளாகங்கள் மற்றும் 2,000 சதுர அடிக்கும் மேலான சொத்துகளைத் தரவு அடிப்படையில் மதிப்பீடு செய்து வரி வசூலிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. நிதி நெருக்கடி இருந்தாலும், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் NULM பணியாளர்களின் ஊதியம் பாதிக்கப்படாது என்பதை உறுதி செய்ய மாநகராட்சி முன்னுரிமை அளிக்கிறது. நிலுவைத் தொகையில் சுமார் ரூ. 450 கோடி கழிவு மேலாண்மை செய்யும் தனியார் நிறுவனமான ‘உர்பேசர்’ (Urbaser Sumeet) நிறுவனத்திற்கு வழங்க வேண்டியுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க : போலி ஆவணங்கள் மூலம் தனியார் வங்கியில் ரூ.80 லட்சம் மோசடி.. மேலாளர் உள்ளிட்ட 7 பேர் கைது!
இந்த நிதிச்சுமையை குறைக்க, சிறப்பு நிதியின் கீழ் ஒதுக்கீடுகளை விடுவிக்க அரசிடம் கோருமாறு மாநகராட்சி ஆணையரிடம் கோரப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மாநகராட்சிக்கு மாதம் ரூ.80 முதல் ரூ.82 கோடி மாநில நிதி ஆணைய ஒதுக்கீடு மூலம் கிடைக்கிறது, மேலும் முத்திரை வரி மற்றும் கூடுதல் கட்டணம் வகையில் சுமார் ரூ. 360 கோடி நிலுவையில் உள்ளதாகவும், அதை விடுவிக்க அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வரும் செப்டம்பர் மாதத்திற்குள் மாநகராட்சியின் நிதி நிலைமை சீரடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறப்படுகிறது குறிப்பிடத்தக்கது.