இரவு நேரத்தில் அத்துமீறிய மாமனார்.. அலறிய மருமகள்.. செங்கல்பட்டை உலுக்கிய தற்காப்பு கொலை!
Chengalpattu Murder : செங்கல்பட்டு மாவட்டத்தில் பாலியல் தொல்லை அளித்த மாமனாரை மருமகள் கத்தியால் குத்தி கொலை செய்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் அருகே உள்ள அனகாபுத்தூர் கஸ்தூரிபாய் நகரை சேர்ந்தவர் பெருமாள். இவரது மகன் மணிகண்டன். இவருக்கு மீனா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில், மணிகண்டன் உடல் நல குறைவால் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு உயிர் இழந்தார். இதன் காரணமாக மீனா தனது இரு குழந்தைகளுடன் மாமனார் மற்றும் மாமியாருடன் ஒன்றாக வசித்து வருகிறார். இந்த நிலையில், சம்பவத்தன்று பெருமாளின் மனைவி காஞ்சிபுரத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனால், வீட்டில் பெருமாள், மீனா மற்றும் அவரது குழந்தைகள் மட்டுமே இருந்தனர். இந்த நிலையில், மீனா நேற்று இரவு தனது குழந்தைகளுடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது, பெருமாள் திடீரென மீனாவுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. மேலும், அவரிடம் தவறாக நடக்க முயன்றதாக தெரிகிறது.
மாமனாரின் கழுத்தில் கத்தியால் குத்திய மருமகள்
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த மீனா பெருமாளை கண்டித்துள்ளார். ஆனாலும், அவர் தொடர்ந்து அத்து மீறியதாக தெரிகிறது. இதனால், கோபத்தின் உச்சிக்கு சென்ற மீனா வீட்டில் இருந்த கத்தியால் பெருமாளின் கழுத்தில் பலமாக குத்தினார். இதில், பெருமாள் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே விழுந்து துடிதுடித்து உயிரிழந்தார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அவரது வீட்டுக்கு சென்று பார்த்தனர். அப்போது, பெருமாள் ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்தார். உடனே, இது தொடர்பாக அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
மேலும் படிக்க: தவெக எம்எல்ஏக்கள் 15 பேருக்கு குறி? ரூ.35 கோடி பேரம்.. திமுக மீது நிர்மல் குமார் பெரும் குற்றச்சாட்டு!




மருத்துவமனை செல்லும் வழியில் மாமனார் உயிரிழப்பு
அதன் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், செல்லும் வழியிலேயே பெருமாள் பரிதாபமாக உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து, அவரது சடலம் பிரேத பரிசோதனை செய்வதற்காக கொண்டு செல்லப்பட்டது. இதை தொடர்ந்து, பெருமாள் உறவினர்கள் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து மீனாவை கைது செய்தனர்.
மருமகளை கைது – சிறையில் அடைப்பு
அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் பாலியல் ரீதியாக மாமனார் அத்துமீறிய சம்பவத்தை தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பல்லாவரம் பகுதியில் மருமகளிடம், மாமனார் பாலியல் ரீதியாக அத்துமீறிய சம்பவமும், அவரை மருமகள் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவமும் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க: மதுரையில் நடுரோட்டில் பயங்கரம்.. திமுக பிரமுகர் வெட்டி சாய்ப்பு.. அலறிய நண்பர்.. தப்பியோடிய கும்பலைத் தேடும் போலீஸ்!