நெருங்கும் வாரவிடுமுறை… சொந்த ஊர் செல்ல ரெடியா.. தயார் நிலையில் 1,475 சிறப்பு பேருந்துகள்!
Special Buses Operated: தமிழகத்தில் வாரவிடுமுறையையொட்டி தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சார்பில் 1,475 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக துறையின் பொது மேலாளர் ஜெரோலின் லிஸ்பன் சிங் தெரிவித்துள்ளார். இது குறித்த முழு விவரத்தை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
தமிழகத்தில் அரசு விடுமுறை நாட்கள், பண்டிகை நாட்கள், வார விடுமுறை நாட்கள் ஆகிய நாட்களில் தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டு இயக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, தற்போது வார விடுமுறையையொட்டி, தமிழகம் முழுவதும் சுமார் 1,475 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் பொது மேலாளர் ( இயக்கம்) ஜெரோலின் லிஸ்பன் சிங் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தில் வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையில் கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தில் இருந்து திருச்சிராப்பள்ளி, திருவண்ணாமலை, திருநெல்வேலி, கும்பகோணம், கன்னியாகுமரி, மதுரை, நாகர்கோவில், ஈரோடு, கோயம்புத்தூர், சேலம் மற்றும் திருப்பூர் ஆகிய ஊர்களுக்கு வருகிற ஜூலை 3- ஆம் தேதி ( வெள்ளிக்கிழமை) சுமார் 410 அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
ஜூலை 4, 5- ஆம் தேதிகளில் சிறப்பு பேருந்துகள்
இதே போல, ஜூலை 4- ஆம் தேதி ( சனிக்கிழமை) மேற்கண்ட இடங்களில் இருந்து சுமார் 290 அரசு சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டம் இடப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து, நாகப்பட்டினம், பெங்களூரு, வேளாங்கண்ணி, திருவண்ணாமலை மற்றும் ஓசூர் ஆகிய ஊர்களுக்கு ஜூலை 3- ஆம் தேதி 55 அரசு சிறப்பு பேருந்துகளும், ஜூலை 4- ஆம் தேதி 55 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. இதே போல, கர்நாடக மாநிலம் பெங்களூரு, ஈரோடு, திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் ஆகிய ஊர்களில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு செல்வதற்காக 200 அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: அதிகாரிகள் விதிகளுக்கு உள்பட்டு சுதந்திரமாக செயல்படலாம்… முதல்வர் ஜோசப் விஜய்!




மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்து…
இது மட்டும் இன்றி சென்னை, மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்து ஜூலை 3 மற்றும் 4- ஆம் தேதிகளில் 20 அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இந்த பேருந்துகள் மூலம் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்ற பொதுமக்கள் மீண்டும் ஊர் திரும்புவதற்கு வசதியாக ஞாயிற்றுக்கிழமை ( ஜூலை 5- ஆம் தேதி) அனைத்து இடங்களிலிருந்தும் பயணிகளின் தேவைக்கு ஏற்றவாறு 445 அரசு சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அரசு பேருந்துகளில் பயணிப்பதற்கான முன்பதிவு
இந்த பேருந்துகளில் பயணிப்பதற்கு ஏராளமான பயணிகள் முன்பதிவு செய்து வருகின்றனர். இதற்கான முன் பதிவு TNSTC.NIC.IN என்ற இணையதளத்தின் மூலமாகவோ அல்லது TNSTC செல்போன் ஆப் மூலமாகவும் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: தவெக கூட்டணி கட்சிகள் ஆலோசனை கூட்டம்… இடதுசாரிகள் ஷாக் அறிவிப்பு.. இருந்தாலும்…!