பாண்டிச்சேரி போறீங்களா? அப்போ இத மிஸ் பண்ணிடாதீங்க.. புதுப்பொலிவுடன் திறக்கப்பட்ட ஓல்ட் லைட் ஹவுஸ்!
Pondicherry Beach Road Lighthouse: புதுச்சேரி மாநிலத்தில் கடற்கரை சாலையில் அமைந்துள்ள 190 ஆண்டுகள் பழைமை வாய்ந்த கலங்கரை விளக்கம் புதுப்பிக்கப்பட்டு திறக்கப்பட்ட நிலையில், அந்த கலங்கரை விளக்கம் பொது மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதுகுறித்த முழு விவரத்தை பார்க்கலாம்.
புதுச்சேரி மாநிலத்தில் பிரஞ்சுக்காரர்கள் ஆட்சிக் காலத்தின் போது, கடந்த 1836- ஆம் ஆண்டு வங்காள விரிகுடா கடலில் பயணம் மேற்கொள்ளும் கப்பல்களுக்கு வழிகாட்டும் வகையில் புதுச்சேரி கடற்கரை சாலையில் கலங்கரை விளக்கம் கட்டப்பட்டது. சுமார் 190 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கலங்கரை விளக்கம் 29 மீட்டர் உயரம், 132 படிக்கட்டுகள் அமைந்துள்ளன. இந்த பாரம்பரிய கட்டிடம் சோழமண்டல கடற்கரையில் அமைக்கப்பட்ட முதல் கலங்கரை விளக்கம் ஆகும். கடந்த 1979- ஆம் ஆண்டு வரை பயன்பாட்டில் இருந்து வந்த இந்த கலங்கரை விளக்கம் காலப்போக்கில் முறையாக பேணாததன் காரணமாக சேதம் அடைந்து தற்காலிகமாக மூடப்பட்டிருந்தது. இந்த நிலையில், இந்த கலங்கரை விளக்கத்தை மீண்டும் சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்து வந்தனர்.
புதுச்சேரி கலங்கரை விளக்கம் பயன்பாட்டுக்கு வந்தது
அதன்படி, புதுச்சேரி கடற்கரை சாலையில் அமைந்துள்ள இந்த கலங்கரை விளக்கம் கடந்த சில மாதங்களாக சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தது. இந்த பணிகள் முடிவடைந்த நிலையில், கலங்கரை விளக்கத்தை கடந்த ஜூன் 25-ஆம் தேதி புதுச்சேரிக்கு வருகை தந்திருந்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் திறந்து வைத்திருந்தார். இந்த நிலையில், புதுச்சேரியில் சுற்றுலா மேம்பாடு மற்றும் வரலாற்று விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த கலங்கரை விளக்கம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டது.
மேலும் படிக்க: தவெக ஆட்சி கவிழ்ப்பு விவகாரம்.. கைதான 3 பேருக்கு 15 நாள்கள் நீதிமன்ற காவல்..!




கலங்கரை விளக்கத்தை எப்போது பார்வையிடலாம்
அதன்படி, இந்த கலங்கரை விளக்கமானது இன்று புதன்கிழமை ( ஜூலை 1) முதல் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டுள்ளது. இந்த கலங்கரை விளக்கத்தை தினந்தோறும் காலை 9:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை பொதுமக்கள் பார்வையிடலாம். சுற்றுலா பயணிகள் இந்த கலங்கரை விளக்கத்தின் மேல் பகுதிக்கு சென்று, புதுச்சேரி கடற்கரை சாலை மற்றும் ஒயிட் டவுன் உள்பட ஒட்டு மொத்த நகரத்தின் 360 டிகிரி அழகை ரசிப்பதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தின் முக்கிய கலாச்சார அடையாளமாக விளங்கி வரும் இந்த தளம் வரும் காலங்களில் சுற்றுலா பயணிகளை பெருமளவு ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சுற்றுலா பயணிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பு
புதுச்சேரி மாநிலத்தில் பல்வேறு சுற்றுலா தளங்கள் உள்ளன. இவற்றை சுற்றி பார்ப்பதற்காக வார இறுதி நாட்கள் மற்றும் அரசு விடுமுறை நாட்களில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் புதுச்சேரிக்கு வருகை தருகின்றனர். அவ்வாறு வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்கு மேலும் புத்துணர்ச்சி ஊட்டும் வகையில் பழைய கலங்கரை விளக்கம் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது வரவேற்பை பெற்றுள்ளது.
மேலும் படிக்க: நெருங்கும் வாரவிடுமுறை… சொந்த ஊர் செல்ல ரெடியா.. தயார் நிலையில் 1,475 சிறப்பு பேருந்துகள்!