திட்டமிட்டபடி தனிக்கட்சி தொடங்குவதில் அண்ணாமலை உறுதி.. நாளை முக்கிய அறிவிப்பு?
அண்ணாமலை ஏற்கனவே தனது பதவியை ராஜினாமா செய்வதற்கான கடிதத்தை பாஜக தலைமையிடம் வழங்கிவிட்டார். அந்த ராஜினாமா கடிதத்தில், தமிழகத்தில் பாஜக ஏன் தோல்வியடைந்தது என்பது குறித்தும், தான் கட்சியை விட்டு ஏன் விலகுகிறேன் என்பது குறித்தும் பல நிர்வாகக் காரணங்களை அவர் அடுக்கடுக்காகக் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை, ஜுன் 4: தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை, பாஜகவில் இருந்து விலகி திட்டமிட்டபடி தனியாக ஒரு அரசியல் கட்சியைத் தொடங்குவதில் நூறு சதவீதம் உறுதியாக இருப்பதாக அவரது நெருங்கிய வட்டாரங்களில் இருந்து அதிரடி தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த மூன்று நாட்களுக்கும் மேலாக அண்ணாமலையின் அடுத்தகட்ட அரசியல் நகர்வு என்னவாக இருக்கும் என்ற கேள்வி, குறிப்பாக அவருடைய ஆதரவாளர்கள் மத்தியில் பலத்த விவாதத்தை ஏற்படுத்தியிருந்தது.
இதையும் படிக்க: “பழி போடுவதால் மாற்றம் வராது.. தேர்தல் மனநிலையிலிருந்து வெளியே வாங்க”.. தவெக அரசை விமர்சித்த கனிமொழி எம்.பி!
டெல்லியில் முகாமிட்ட அண்ணாமலை:
இந்தச் சூழலில், கடந்த இரண்டு நாட்களாக டெல்லியில் முகாமிட்டிருந்த அண்ணாமலை, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா மற்றும் தனது அரசியல் குருவாகக் கருதப்படும் பி.எல். சந்தோஷ் உள்ளிட்ட பாஜகவின் மிக முக்கியமான மூத்த தலைவர்களை நேரில் சந்தித்துப் பேசியுள்ளார். இந்த ஆலோசனைகளுக்குப் பிறகு, தான் எடுத்த முடிவில் அண்ணாமலை எவ்வித மாற்றமும் இன்றி உறுதியாக இருப்பதாகத் தெரியவந்துள்ளது. அதாவது, ஏற்கனவே திட்டமிட்டபடி அவர் தனிக்கட்சி தொடங்குகிறார் என்பதை அவரோடு நெருக்கமாக இருக்கும் நபர்கள் தற்போது உறுதிப்படுத்தியுள்ளனர்.
ராஜினாமா கடிதத்தின் பின்னணி:
அண்ணாமலை ஏற்கனவே தனது பதவியை ராஜினாமா செய்வதற்கான கடிதத்தை பாஜக தலைமையிடம் வழங்கிவிட்டார். அந்த ராஜினாமா கடிதத்தில், தமிழகத்தில் பாஜக ஏன் தோல்வியடைந்தது என்பது குறித்தும், தான் கட்சியை விட்டு ஏன் விலகுகிறேன் என்பது குறித்தும் பல நிர்வாகக் காரணங்களை அவர் அடுக்கடுக்காகக் குறிப்பிட்டுள்ளார். எனினும், தனக்கு எதிராகச் செயல்பட்டவர்கள் யார் என்பது குறித்தோ அல்லது தனிப்பட்ட நபர்கள் குறித்தோ எந்தவொரு விமர்சனத்தையும் அவர் அந்தக் கடிதத்தில் பதிவு செய்யவில்லை என்ற தகவலும் தற்போது கசிந்துள்ளது. அவரது ராஜினாமா கடிதத்தை கட்சித் தலைமை ஏற்றுக்கொண்டதா இல்லையா என்ற அதிகாரப்பூர்வத் தகவல் இன்னும் வெளியாகவில்லை.
இதையும் படிக்க : இனி ஜெட் வேகத்தில் அரசு திட்டங்கள்.. மாவட்ட வாரியாக பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!
நாளை வெளியாகும் முக்கிய அறிவிப்பு?
இன்றைய தினம் அண்ணாமலையின் பிறந்தநாள் என்பதால், அவரது ஆதரவாளர்கள் பல்வேறு கொண்டாட்டங்களுக்குத் திட்டமிட்டிருந்தனர். ஆனால், அவர் எந்தப் பகுதியில் இருக்கிறார், இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறாரா என்பது போன்ற விபரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே, ஜூன் 5-ஆம் தேதியான நாளை அண்ணாமலை தனது அடுத்தகட்ட அரசியல் பயணம் குறித்தும், தனிக்கட்சி தொடங்குவதற்கான திட்டமிடல் மற்றும் அதற்கான கால அவகாசம் குறித்தும், அதுவரை தனது செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்பது போன்ற அனைத்து அரசியல் கேள்விகளுக்கும் அவரே நேரடியாகப் பதிலளித்து முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என்று அவருடைய ஆதரவாளர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு தெரிவித்துள்ளனர்.