அதிமுகவில் இருந்து விலகும் மற்றொரு எம்எல்ஏ.. தவெகவில் இணைய முடிவு?
Ambasamudram AIADMK MLA Esakki Subaya: அதிமுகவில் எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.வி.சண்முகம் தலைமையிலான அணியில் இருந்து வரும் அம்பாசமுத்திரம் தொகுதி எம்எல்ஏ-வான இசக்கி சுப்பையா அந்தக் கட்சியில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
தமிழக சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு தமிழக அரசியல் களத்தில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. இதே போல, அதிமுகவிலும் பல்வேறு அதிரடி மாற்றங்கள் நிகழ்கின்றன. இதில், தமிழக வெற்றிக் கழக அரசுக்கு ஆதரவு தெரிவிக்க வலியுறுத்தி எஸ். பி. வேலுமணி மற்றும் சி. வி. சண்முகம் தரப்பு ஒரு குழுவாக பிரிந்து செயல்பட தொடங்கியது. அதன்படி, தமிழக வெற்றிக் கழக அரசுக்கும் ஆதரவு தெரிவித்தது. மேலும், சட்டமன்ற குழு தலைவர் பதவியே எஸ். பி. வேலுமணிக்கு வழங்க கோரி போர்க்கொடி தூக்கியது. இவை அனைத்திற்கும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையிலான குழு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவை தலைவர் ஜே. சி. டி. பிரபாகரிடம் கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு அளித்திருந்தது. இதே போல, எஸ்.பி.வேலுமணி தரப்பும் புகார் மனு அளித்திருந்தது.
சி.வி.சண்முகம் அணியில் இருந்து 3 எம்எல்ஏக்கள் விலகல்
இந்த நிலையில், சி.வி. சண்முகம் தலைமையிலான குழுவை சேர்ந்த மதுராந்தகம் எம். எல். ஏ. மரகதம், குமரவேல் பெருந்துறை எம். எல். ஏ. ஜெயக்குமார் தாராபுரம் எம். எல். ஏ. சத்தியபாமா ஆகிய 3 எம். எல். ஏ.க்கள் நேற்று அதிரடியாக தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர். அத்துடன் தங்களது ராஜினாமா கடிதத்தை சட்டப்பேரவை தலைவர் ஜே. சி. டி. பிரபாகரிடம் அளித்தனர். அதனை, சட்டப்பேரவை தலைவர் ஏற்றுக்கொண்ட நிலையில், அவர்கள் மூன்று பேரும் தமிழக வெற்றி கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
மேலும் படிக்க: மேகதாது அணை விவகாரம்.. சட்ட நடவடிக்கைகள் விரைந்து எடுக்க முதல்வர் விஜய் அறிவுறுத்தல்..




அதிமுகவில் இருந்து விலகும் மற்றொரு எம்எல்ஏ விலகல்?
இந்த நிலையில், அதிமுகவின் அம்பாசமுத்திரம் தொகுதி எம். எல். ஏ. வாக இருந்து வரும் இசக்கி சுப்பையா என்பவரும் அதிமுகவில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இவர், தற்போது எஸ். பி. வேலுமணி மற்றும் சி. வி. தலைமையிலான குழுவில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, தமிழக வெற்றிக் கழகத்தில் அமைச்சர் பதவியை எதிர்பார்த்து ஆதரவு தெரிவித்திருந்த எஸ். பி. வேலுமணி தலைமையிலான எம்எல்ஏக்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.
எடப்பாடியுடன் சமரச பேச்சுவார்த்தை
இதன் காரணமாக, மீண்டும் அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இணைந்து செயல்பட வேண்டும் என்பதற்காக நேற்று சென்னை பசுமை வழி சாலையில் உள்ள எடப்பாடி வீட்டில் எஸ்.பி. வேலுமணி தலைமையிலான எம்எல்ஏக்கள் திடீரென சந்தித்து அமைதிப் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகி வந்தன. இந்த நிலையில், 3 எம்எல்ஏக்கள் அக்கட்சியில் இருந்து விலகி உள்ளனர். மேலும் ஒரு எம்எல்ஏ விலக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் படிக்க: தமிழகத்தை ஆள விஜய்க்கு என்ன தகுதி இருக்கு? பொம்மை முதல்வர் என கடுமையாக சாடிய நயினார் நாகேந்திரன்!