AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கீழ்தளத்தில் ராஜினாமா, மேல் தளத்தில் கட்சியில் இணைப்பா? கீழ்த்தரமான அரசியல் – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்..

மேலும், “ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை என்பதுபோல், அடுத்தவர்களின் முதுகில் ஏறி பயணம் செய்வதில்தான் தங்களது அரசியல் வாழ்வு இருக்கிறது என்று செயல்படும் புதிய கரகாட்டக் குழுவிற்கு தமிழக மக்கள் விரைவில் தக்க பாடம் புகட்டுவார்கள்” என்றும் எடப்பாடி பழனிசாமி தனது அறிக்கையில் கடுமையாக விமர்சித்துள்ளார்.

கீழ்தளத்தில் ராஜினாமா, மேல் தளத்தில் கட்சியில் இணைப்பா? கீழ்த்தரமான அரசியல் – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 25 May 2026 18:47 PM IST

மே 25, 2026: அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் ராஜினாமா செய்து தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்துள்ள சம்பவத்திற்கு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசியலில் “குதிரை பேர அரசியல்” அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.  அவரது அறிக்கையில், “கீழ்தளத்தில் ராஜினாமா, மேல்தளத்தில் கட்சியில் இணைப்பு என்ற வகையில் தமிழ்நாட்டில் கீழ்த்தரமான அரசியல் நடத்தப்படுகிறது. குதிரை பேர கலாச்சாரத்தை அறிமுகப்படுத்திய தமிழக வெற்றிக்கழகத்திற்கு கடும் கண்டனம்” என தெரிவித்துள்ளார்.

குதிரை பேர அரசியல் – எடப்பாடி பழனிசாமி கண்டனம்:

மேலும், “சுத்த சுயம்பிரகாச தூய சக்தி என்று தன்னைத் தானே அறிமுகப்படுத்திக்கொண்டு அரசியலில் குதித்த திரையுலகப் பிரபலம், மக்களின் முழுமையான ஆதரவு கிடைக்காத நிலையில், தான் அமைத்த மைனாரிட்டி ஆட்சியை காப்பாற்ற பல்வேறு தகிடுதத்த அரசியலில் ஈடுபட்டு வருவது வெட்கக்கேடான ஒன்றாகும்” என விமர்சித்துள்ளார்.

தமிழக அரசியல் வரலாற்றிலேயே இல்லாத வகையில் மோசமான குதிரை பேர அரசியல் நடைபெறுவதாகவும், தனது ஆட்சியை காப்பாற்றிக்கொள்ளும் முயற்சியில் தமிழக வெற்றிக்கழகம் ஈடுபட்டு வருவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். “தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் 126 தொகுதி மக்கள் எதிராக வாக்களித்துள்ளார்கள் என்பதை உணராமல் செயல்படுகின்றனர்” என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், “தான் தீய சக்தி என்று கூறிய கட்சிகளின் ஆதரவை நாடியதோடு, அதிமுக சார்பில் வெற்றி பெற்ற சில சட்டமன்ற உறுப்பினர்களை ‘புஷ்பா’ பட பாணியில் ஆதரவு பெற முயன்றது நேர்மையான அரசியல் அல்ல” என்றும் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

அதிமுகவை அசைத்துப் பார்க்கலாம் – அது வெறும் பகல் கனவே:

அதிமுக தொண்டர்களின் கடுமையான உழைப்பாலும், தியாகத்தாலும் வெற்றி பெற்ற மூன்று சட்டமன்ற உறுப்பினர்களிடமிருந்து சபாநாயகர் அறையில் ராஜினாமா கடிதம் பெறப்பட்டதாகவும், அதனைத் தொடர்ந்து சில நிமிடங்களிலேயே தமிழக வெற்றிக்கழக அமைச்சரின் அறையில் அவர்களுக்கு கட்சி உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது முன்கூட்டியே திட்டமிடப்பட்ட அரசியல் நாடகம் எனவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேலும் படிக்க: மேகதாது அணை விவகாரம்.. சட்ட நடவடிக்கைகள் விரைந்து எடுக்க முதல்வர் விஜய் அறிவுறுத்தல்..

தொடர்ந்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்பது பல துரோகங்களையும், முதுகில் குத்திய சம்பவங்களையும் தாங்கி மக்கள் பணியாற்றி வரும் மாபெரும் இயக்கம். தற்போது ராஜினாமா செய்துள்ளவர்கள் கூட திரைப் பிரபலத்தின் சின்னத்திற்கு எதிராக மக்கள் வாக்களித்துதான் வெற்றி பெற்றுள்ளனர் என்பதை மறந்துவிடக்கூடாது” என தெரிவித்துள்ளார்.

“இதுபோன்ற துரோகச் செயல்களால் அதிமுகவை அசைத்துப் பார்க்கலாம், வீழ்த்திவிடலாம் என்று யாராவது நினைத்தால் அது பகல் கனவாகவே முடியும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், “ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை என்பதுபோல், அடுத்தவர்களின் முதுகில் ஏறி பயணம் செய்வதில்தான் தங்களது அரசியல் வாழ்வு இருக்கிறது என்று செயல்படும் புதிய கரகாட்டக் குழுவிற்கு தமிழக மக்கள் விரைவில் தக்க பாடம் புகட்டுவார்கள்” என்றும் எடப்பாடி பழனிசாமி தனது அறிக்கையில் கடுமையாக விமர்சித்துள்ளார்.

Follow Us