மேலும் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது.. மக்களே அலர்ட்!
Rain alert: தமிழகத்தில் கடந்த 4 நாட்களாக பரவலாக மழை பெய்து வரும் நிலையில், வரும் நாட்களில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக இருக்கும் என்று வானிலை மையம் முன்னறிவித்துள்ளது. அதோடு, இந்த மாத இறுதியில் புயல் உருவாக வாய்ப்புள்ளது என்றும் கணித்துள்ளது.
சென்னை, நவம்பர் 17: தென்கிழக்கு வங்கக்கடலில் நவ.22ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது உருவாகி அடுத்த 48 மணி நேரத்தில் மேலும் வலுவடைந்து மேற்கு வடமேற்கு திசையில் நகரக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், இந்த புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக உள்ளது. ஏற்கெனவே, தமிழகத்தில் இன்று சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய 7 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: நவ. 24 ஆம் தேதி வங்கக்கடலில் உருவாகும் புயல்.. வெதர்மேன் பிரதீப் ஜான் சொன்ன முக்கிய அப்டேட்..
தமிழகத்தில் கனமழை நீடிக்கும்:
இந்நிலையில், இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் நவ.21, 22ஆம் தேதிகளில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது நவ.23 மற்றும் 24ஆம் தேதிகளில் மேலும் தீவிரமடைய வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளது. ஏற்கெனவே, வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழ்நாடு முழுவதும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்த புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால், தமிழ்நாடு, புதுச்சேரி பகுதிகளில் வடகிழக்கு பருவமழை மேலும் தீவிரமடைய வாய்ப்புள்ளது.




அதி கனமழைக்கு வாய்ப்பு:
தொடர்ந்து, இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து நவ.23ஆம் தேதிக்கு பிறகு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறக்கூடும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்ள் மற்றும் தென் மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், ஒரு சில இடங்களில் அதி கனமழையும் எதிர்பார்க்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும் படிக்க: மிக கனமழை; பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு!
தீவிரமடையும் வடகிழக்கு பருவமழை:
கடந்த அக்டோபர் மாதத்தில் தொடங்கிய வடகிழக்கு பருவமழையானது, தமிழகத்தில் அம்மாதம் முழுவதும் தீவிர மழைப்பொழிவை வழங்கியது. இதன் எதிரொலியாக வங்கக்கடலில் மோன்தா புயல் உருவானது. தொடர்ந்து, அக்டோபர் இறுதியில் அந்த புயலானது ஆந்திர கடலோர பகுதிகளில் கரையை கடந்தது. இதனைத்தொடர்ந்து, தமிழகத்தில் நவம்பர் மாதத்தில் கடந்த 2 வாரங்களாக வடகிழக்கு பருவமழை சற்று தொய்வடைந்து காணப்பட்டது. இந்நிலையில், நவ.15ம் தேதி முதல் மீண்டும் வடகிழக்கு பருவமழை தீவிரத்தை காட்ட தொடங்கியுள்ளது.