கேஸ் தட்டுப்பாடு.. காஞ்சிபுரத்தில் 2 எல்பிஜி நிலையங்கள் மூடல்.. ஆட்டோ ஓட்டுநர் வேதனை!
LPG Stations Closed In Kanchipuram: காஞ்சிபுரத்தில் கேஸ் தட்டுப்பாடு காரணமாக 2 எல். பி. ஜி. நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால், அந்த மாவட்டத்தில் 1,500- க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இயங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஓட்டுநர்களினி நிலை கேள்விக்குறியாகி உள்ளது.
அமெரிக்கா- ஈரான் இடையே போர் பதற்றம் காரணமாக உலகம் முழுவதும் கேஸ் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் தாக்கம் இந்தியாவிலும் எதிரொலித்துள்ளது. இதன் காரணமாக, வணிக சிலிண்டர்கள் விநியோகம் பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது. வீட்டு சிலிண்டர்களும் சுமார் 40 முதல் 45 கழித்தே விநியோகம் செய்யப்படுகிறது. வீட்டு உபயோக சிலிண்டர்கள் புக் செய்வதிலும் புதிய நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது. இதனால், வணிக சிலிண்டர்கள் தட்டுப்பாடு காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வரும் உணவகங்கள் மூடப்பட்டுள்ளன. ஓரளவு கிடைத்து வரும் சிலிண்டர்கள் மூலம் செயல்பட்டு வரும் உணவகங்களில் குறிப்பிட்ட வகையிலான உணவுகள் மட்டுமே தயாரித்து விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளன. மேலும், அந்த உணவுகளுக்கான விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, டீ மற்றும் காபி விலையும் உயர்ந்துள்ளது.
காஞ்சிபுரத்தில் 2 எல்பிஜி நிலையங்கள் மூடல்
இந்த நிலையில், கேஸ் தட்டுப்பாடு காரணமாக காஞ்சிபுரத்தில் ஆட்டோகளுக்கு நிரப்பப்படும் எல்பிஜி நிலையங்கள் திடீரென மூடப்பட்டுள்ளன. இதனால், ஆட்டோ ஓட்டுநர்கள் தங்களது வாகனங்களுக்கு கேஸ் நிரப்ப முடியாமல் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதனால், வருமானம் இன்றி அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் பிரதான பகுதியில் செயல்பட்டு வரும் எல்பிஜி நிலையங்கள் கடந்த 3 நாட்களுக்கு முன்பு மூடப்பட்டது. தற்போது வரை இந்த நிலையங்களுக்கு எரிவாயு லோடுகள் வந்தடையவில்லை.
மேலும் படிக்க: 5 கிலோ மினி சிலிண்டர்களின் விலை உயர்வு – எவ்வளவு தெரியுமா?




திகைத்து வரும் ஆட்டோ ஓட்டுநர்கள்
இதன் காரணமாக அந்த எல்பிஜி நிலையம் மூடப்பட்டதுடன், அதன் வாயிலில் நிர்வாகம் சார்பில் அறிவிப்பு பலகை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. இதே போல, காஞ்சிபுரத்தின் மற்றொரு பகுதியில் செயல்பட்டு வரும் மற்றொரு எல்பிஜி நிலையமும் கேஸ் தட்டுப்பாடு காரணமாக மூடப்பட்டுள்ளது. இதனால், ஆட்டோ ஓட்டுநர்கள் செய்வதறியாது திகைத்து வருகின்றனர். இந்த நிலையில், இது தொடர்பாக ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் கூறியதாவது: காஞ்சிபுரத்தில் 2 எல்பிஜி நிலையங்கள் மட்டுமே செயல்பட்டு வந்தன.
1,500 ஆட்டோகள் இயங்க முடியாத நிலை
இதில், ஒரு எல்பிஜி நிலையம் போர் தொடங்கியது முதலே அவ்வப்போது மட்டுமே திறக்கப்பட்டு வந்தது. மற்றொரு நிலையம் மட்டும் முறையாக செயல்பட்டு வந்தது. தற்போது, அந்த எல்பிஜி நிலையமும் மூடப்பட்டுள்ளது. இதனால், காஞ்சிபுரத்தில் இயக்கப்பட்டு வருகிற 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆட்டோக்களில் சுமார் 1,500 ஆட்டோக்கள் எல்பிஜி கேஸை நம்பியே இயக்கப்பட்டு வருகிறது. தற்போது, எல்பிஜி மற்றும் சி என் ஜி ஆகியவை ஒரே விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையிலும் கேஸ் தட்டுபாடு அதிகரிப்பு
இதனால், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஆட்டோக்காரர்கள் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ளனர். சென்னையில் நேற்று கிண்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கேஸ் தட்டுப்பாடு காரணமாக எல்பிஜி நிலையங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆட்டோக்கள் கேஸை நிரப்பி சென்றிருந்தன. இந்த நிலையில், காஞ்சிபுரத்தில் முழுமையான தட்டுப்பாடு காரணமாக எல்பிஜி நிலையங்கள் மூடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: ஹேப்பி நியூஸ் சொன்ன மத்திய அரசு.. 5கிலோ சிலிண்டர் இரட்டிப்பு.. யாருக்கு தெரியுமா?