விராட் கோலிக்கு காயம்… இங்கிலாந்து தொடரையும் தவறவிடுவாரா? வெளியான அதிர்ச்சி தகவல்!
ஐபிஎல் இறுதிப்போட்டியின் போது இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியின் காலின் தொடைப் பகுதியில் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஓய்வில் இருக்கும் அவர், ஆப்கானிஸ்தானை தொடர்ந்து இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியிலும் அவர் பங்கேற்க மாட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
ரசிகர்களால் கிங் கோலி என அழைக்கப்படும் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி, இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாட முடியாத சூழல் உருவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐபிஎல் ஃபைனலின் போது ஏற்பட்ட காயம் காரணமாக அவர் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து விலகியிருந்தார். இந்தநிலையில், தற்போது இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் அவர் பங்கேற்பது சந்தேகம் என கூறப்படுகிறது.
ஐபிஎல் இறுதிப்போட்டியில் ஏற்பட்ட காயம்
கடந்த மே 31, 2026 அன்று நடைபெற்ற ஐபிஎல் ஃபைனலில் பெங்களூரு மற்றும் குஜராத் அணிகள் மோதின. இந்த போட்டியில் விராட் கோலி கடைசி வரை ஆட்டமிழக்காமல் 75 ரன்கள் குவித்து அணிக்கு அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றார். ஆனால் போட்டியின் போது அவருக்கு காலின் தொடைப் பகுதியில் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதையும் படிக்க : Team India: காயத்தால் சிக்கலில் சிக்கிய கோலி.. ஆப்கானிஸ்தான் ODI தொடரில் இருந்து விலகல்?




பின்னர் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில் தசை பகுதியில் காயம் இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இந்த காயத்திற்கு அறுவை சிகிச்சை தேவையில்லை என்றாலும் காயம் குணமாக முழுமையாக 6 வாரங்கள் ஆகும் என்றும் அதுவரை அவர் ஓய்வில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதற்காக பெங்களூருவில் உள்ள பிசிசிஐ சென்டரில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.
மேலும் அவருக்கு மும்பையில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் பிரபல எலும்பியல் மருத்துவர் தின்ஷா பர்திவாலா அவரது எம்ஆர்ஐ ஸ்கேன் ரிப்போர்ட்டை பார்த்து அவருக்கு மருத்துவ ஆலோசனை வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் வருகிற ஜூலை 14, 2026 அன்று நடைபெறவுள்ள இங்கிலாந்துக்கு எதிரான 3 ஒருநாள் தொடரில் இந்தியா விளையாடவுள்ளது. இந்த நிலையில் விராட் கோலிக்கு 6 வாரங்கள் ஓய்வு தேவைப்படும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளதன் காரணமாக அவர் இந்த தொடரில் விளையாட முடியாது என கூறப்படுகிறது. இது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க : IPL 2026: முழு சம்பளத்தை மும்பை அணி தரவில்லை.. குற்றச்சாட்டுகளை அடுக்கிய சாண்ட்னர்!
மற்றொருபுறம் பிரபல வீரர் ரோகித் சர்மாவும் ஐபிஎல் தொடரின் போது காயத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறார். இதனால் மும்பை இந்தியன்ஸ் அணியின் சார்பில் சில போட்டிகளில் அவர் விளையாடவில்லை. இதனையடுத்து வருகிற ஜூன் 8, 2026 அன்று அவருக்கு பெங்களுரூவில் உள்ள பிசிசிஐ மையத்தில் உடற்தகுதி சோதனை நடைபெறவுல்ளதாக கூறப்படுகிறது. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ரோகித் சர்மா இடம் பெற்றிருந்தாலும், அவரது உடற்தகுதி பரிசோதனையின் முடிவின் அடிப்படையிலேயே அவர் பங்கேற்பாரா மாட்டாரா என்பது தெரிய வரும்.
விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவின் காயம் இந்திய அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக இங்கிலாந்து போன்ற வலுவான அணிக்கு எதிரான தொடருக்கு முன் முக்கிய வீரர்கள் பங்கேற்காதது பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என ரசிகர்கள் கருதுகின்றனர்.