WTC Final 2025: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வெற்றியாளருக்கு பரிசுத்தொகை இவ்வளவா..? டிரா என்றால் யார் சாம்பியன்..?
South Africa vs Australia: 2025 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இடையே லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. மழையால் போட்டி பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. டிராவாக முடிந்தால், இரு அணிகளும் கூட்டு வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டு, பரிசுத்தொகை சமமாகப் பிரிக்கப்படும். வெற்றி பெறும் அணி ரூ.30.79 கோடி பெறும், இரண்டாம் இடம் பிடிக்கும் அணி ரூ.18.47 கோடி பெறும்.

2025 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் (World Test Championship 2025) இறுதிப் போட்டி இன்று அதாவது 2025 ஜூன் 11ம் தேதி முதல் தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா (South Africa vs Australia) இடையே லார்ட்ஸ் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் தொடங்குகிறது. இந்த போட்டிக்கு நடுவே 3வது நாள் முதல் மழை பெய்ய அதிக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, இந்த போட்டி டிராவில் முடிந்தால், யார் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்கள்..? வெற்றியாளர்களுக்கு எவ்வளவு பரிசுத்தொகை வழங்கப்படும் உள்ளிட்ட விவரங்களை இங்கே தெரிந்து கொள்வோம். டெம்பா பவுமாவின் (Temba Bavuma) தலைமையிலான தென்னாப்பிரிக்க அணி தனது முதல் சாம்பியன் பட்டத்திற்காக களமிறங்குகிறது. அதேநேரத்தில், பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி, தொடர்ந்து 2வது முறை சாம்பியன் பட்டத்தை வெல்ல களமிறங்குகிறது. கடந்த பதிப்பில், ஆஸ்திரேலியா இந்தியாவை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை வென்றது குறிப்பிடத்தக்கது.
லார்ட்ஸ் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் வானிலை எப்படி இருக்கும்?
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்கா – ஆஸ்திரேலியா இடையிலான போட்டியில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. முதல் நாளில் மழை பெய்ய வாய்ப்பு குறைவு என்றாலும், 3வது மற்றும் 5வது நாள் அதாவது போட்டியின் கடைசி நாளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இருப்பினும், இங்கிலாந்தில் வானிலை திடீரென மாறும் என்பதால், போட்டி அடிக்கடி மழையால் பாதிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இன்றைய முதல் நாள் ஆட்டமும் மழையால் பாதிக்கப்பட்டாலும் பெரிய அளவிலான பாதிப்பு இருக்காது.




ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ரிசர்வ் நாளின் விதி என்ன?
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டியானது இன்று முதல் அதாவது 2025 ஜூன் 11 முதல் 2025 ஜூன் 15 வரை தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா இடையே நடைபெறுகிறது. இருப்பினும், 2025 ஜூன் 16ம் தேதி ரிசர்வ் நாளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த நாளில் போட்டி நடைபெற வேண்டுமென்றால், இதற்கும் ஒரு விதி இருக்கிறது. மழை அல்லது மோசமான வெளிச்சம் அல்லது வேறு ஏதேனும் காரணத்தால் நிர்ணயிக்கப்பட்ட 5 நாட்களில் போட்டியை முன்கூட்டியே முடிக்க வேண்டியிருந்தால் அல்லது முழு ஓவர்களுக்கும் போட்டியை விளையாட முடியாவிட்டால் மட்டுமே போட்டி ரிசர்வ் நாளில் நடத்தப்படும். 5 நாட்களிலும் நிர்ணயிக்கப்பட்ட ஓவர்களின்படி போட்டி நடத்தப்பட்டால், ரிசர்வ் நாளில் போட்டி நடத்தப்படாது.
தென்னாப்பிரிக்கா vs ஆஸ்திரேலியா WTC இறுதிப் போட்டி டிராவில் முடிந்தால் என்ன நடக்கும்?
The #WTC25 Final starts today 🏆
Who’s taking home the mace?
How to watch 📺 https://t.co/oas2Rsdptj pic.twitter.com/hfSjX8HeJE
— ICC (@ICC) June 11, 2025
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டி டிராவில் முடிந்தால், யார் பட்டத்தை வெல்வார்கள்? வெற்றிக்கான பரிசுத் தொகை யாருக்குக் கிடைக்கும்? என்ற கேள்விகளை ரசிகர்கள் கேள்வி எழுப்பினர். அதன்படி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025 இறுதிப் போட்டி டிராவில் முடிந்தால், இரு அணிகளும் கூட்டு வெற்றியாளர்களாக அறிவிக்கப்படும். தொடர்ந்து, இரு அணிகளும் கோப்பையை பகிர்ந்து கொள்ளும். இதையடுத்து, நிர்ணயிக்கப்பட்ட பரிசுத் தொகையையும் சரி பாதியாக பிரித்து இரு அணிகளுக்கும் வழங்கப்படும்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025 சாம்பியனுக்கு எவ்வளவு பரிசுத் தொகை கிடைக்கும்?
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு இந்திய மதிப்பில் சுமார் ரூ.30.79 கோடி பரிசுத்தொகையாக வழங்கப்படும். அதேநேரத்தில், 2வது இடத்தைப் பிடிக்கும் அணிக்கு, அதாவது இறுதிப் போட்டியில் தோற்கும் அணிக்கு இந்திய மதிப்பில் சுமார் ரூ.18.47 கோடியை ஐசிசி வழங்கும்.