India vs England Test Series 2025: 2-2 என சமனான தொடர்..! கடைசி நாளில் மாஸ் செய்த சிராஜ்.. இந்திய அணி த்ரில் வெற்றி!
India Wins Oval Test: ஓவல் டெஸ்டில் இந்தியா 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்தியா - இங்கிலாந்து இடையிலான 5வது டெஸ்டின் 5வது நாளில், இங்கிலாந்து அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதன் மூலம், ஆண்டர்சன் டெண்டுல்கர் டிராபி 2-2 என சமநிலையில் முடிந்தது.

ஓவலில் நடந்த இந்தியா – இங்கிலாந்து இடையிலான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் (India – England Test Series) இந்திய அணி (Indian Cricket Team) த்ரில் வெற்றிபெற்று, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-2 என சமன் செய்தது. 374 என்ற கடினமான இலக்கை காக்க இந்திய பந்து வீச்சாளர்கள் கடுமையாக முயற்சி செய்து, 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்தனர். ஓவல் ஸ்டேடியத்தில் இந்திய அணி டெஸ்ட் போட்டியில் வென்ற மூன்றாவது டெஸ்ட் போட்டி இதுவாகும். அஜித் வடேகர் மற்றும் விராட் கோலிக்குப் பிறகு , ஓவல் மைதானத்தில் இந்திய அணி டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற மூன்றாவது இந்திய கேப்டன் என்ற பெருமையை சுப்மன் கில் பெற்றுள்ளார்.
போட்டியில் நடந்தது என்ன..?
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் சுப்மன் கில் டாஸை இழந்தார். இதன் காரணமாக, டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஓலி போப் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். ஓவல் டெஸ்டின் முதல் நாளில் மழை குறுக்கே வந்து அடுத்தடுத்து தொல்லை கொடுத்தது. அதேநேரத்தில், இங்கிலாந்து அணியின் பந்துவீச்சாளர்கள் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு தொல்லை கொடுக்க, இந்திய அணி முதல் இன்னிங்ஸில் வெறும் 224 ரன்களுக்குள் சுருண்டது. பதிலுக்கு, முதல் இன்னிங்ஸை ஆட வந்த இங்கிலாந்து அணியின் தொடக்க ஜோடி 92 ரன்கள் எடுத்து சிறப்பான தொடக்கத்தை கொடுத்தது. ஆனால் அடுத்த 155 ரன்களுக்குள், இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் காரணமாக, இங்கிலாந்தின் முதல் இன்னிங்ஸில் 247 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனது. இதன்மூலம், முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி, இந்திய அணியை விட 23 ரன்கள் என்ற முன்னிலையில் இருந்தது.
கலக்கிய இந்திய அணி:
A thrilling end to a captivating series 🙌#TeamIndia win the 5th and Final Test by 6 runs
Scorecard ▶️ https://t.co/Tc2xpWNayE
#ENGvIND pic.twitter.com/9ybTxGd61A
— BCCI (@BCCI) August 4, 2025
இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்ய வந்தபோது, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கே.எல். ராகுல் மற்றும் சாய் சுதர்ஷன் பெரிய இன்னிங்ஸ் விளையாட முடியாமல் தங்களது விக்கெட்டை விட்டுகொடுத்தனர். ஆனால், தொடக்க வீரராக களமிறங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் 118 ரன்கள் சதம் இந்தியா பெரிய ஸ்கோரை நோக்கி முன்னேற உதவியது. ஜெய்ஸ்வாலுடன் நைட் வாட்ச்மேனாக களமிறங்கிய ஆகாஷ்தீப் 107 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை அமைத்தது மட்டுமின்றி, 66 ரன்கள் எடுத்தார். இதனால், இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸ் 396 ரன்கள் குவித்தது. இதன் காரணமாக, இங்கிலாந்து அணிக்கு 374 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
இந்திய அணிக்கு பயம்காட்டிய ரூட் – புரூக்:
374 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி, 106 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இருப்பினும், ஹாரி புரூக் (111) மற்றும் ஜோ ரூட் (105) ஆகியோர் சதமடித்தது மட்டுமின்றி, 195 ரன்கள் என்ற பார்ட்னஷிப்பை அமைத்தது. ஆகாஷ் தீப் பந்துவீச்சில் ஹாரி புரூக்கும், பிரசித் கிருஷ்ணா பந்தில் ஜோ ரூட்டும் ஆட்டமிழந்தனர். தொடர்ந்து, 5வது நாளில் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு வெறும் 35 ரன்கள் மட்டுமே தேவையாக இருந்தது. இதனுடன் 4 விக்கெட்டுகள் கையில் இருந்தது. முகமது சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணா சிறப்பாக செயல்பட்டு ஆட்டத்தை மாற்ற இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.