Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

IND vs BAN: ரன் அவுட் மூலம் முடிந்த அபிஷேக் சர்மா அதிரடி.. வங்கதேச அணிக்கு 169 ரன்கள் இலக்கு!

India vs Bangladesh, Super 4: அபிஷேக் சர்மா மற்றும் சுப்மன் கில் அவுட்டான பிறகு, இந்திய அணியின் ரன் ரேட் மெல்ல மெல்ல சரிய தொடங்கியது. அடுத்தடுத்து, உள்ளே வந்த சூர்யகுமார் யாதவ், ஷிவம் துபே, திலக் வர்மா ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தது.

IND vs BAN: ரன் அவுட் மூலம் முடிந்த அபிஷேக் சர்மா அதிரடி.. வங்கதேச அணிக்கு 169 ரன்கள் இலக்கு!
இந்தியா - வங்கதேசம்Image Source: BCCI/ Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Updated On: 24 Sep 2025 21:48 PM IST

ஆசிய கோப்பை 2025 (2025 Asia Cup) சூப்பர்-4 சுற்றின் 4வது போட்டியில் இந்திய அணியும், வங்கதேச அணியும் (IND vs BAN) இன்று அதாவது 2025 செப்டம்பர் 24ம் தேதி துபாயில் உள்ள துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் விளையாடி வருகிறது. லிட்டன் தாஸுக்கு காயம் ஏற்பட்டுள்ள நிலையில் வங்கதேச கிரிக்கெட் அணியின் கேப்டன் ஜாகர் அலி பொறுப்பேற்று டாஸ் வென்று பந்து வீச முடிவு செய்தார். இதையடுத்து, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய வந்தது. இந்திய அணியின் தொடக்க வீரர்களாக உள்ளே வந்த அபிஷேக் சர்மா (Abhishek Sharma) மற்றும் சுப்மன் கில் ஜோடி வழக்கம்போல் எதிரணி பந்து வீச்சாளர்களின் பந்துகளை வெளுத்து வாங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 6.2 ஓவர்களில் 77 ரன்கள் குவித்தனர். அதிரடியாக தொடங்கிய சுப்மன் கில் 19 பந்துகளில் 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

ALSO READ: ஆஸ்திரேலிய ஒருநாள் தொடர்! அழைக்கும் பிசிசிஐ.. மௌனம் காக்கும் விராட் கோலி?

அதிரடி காட்டிய அபிஷேக் சர்மா:


அபிஷேக் சர்மா ஆரம்பத்தில் 8 பந்துகளில் 7 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். இதற்கு பின்னர் விஸ்வரூபம் எடுத்த அபிஷேக் சர்மா அடுத்த 11 பந்துகளில் சிக்ஸர் மற்றும் பவுண்டரிகளுடன் 39 ரன்கள் எடுத்தார். அதாவது, வெறும் 25 பந்துகளில் தனது 4வது டி20 அரைசதத்தை எட்டினார். மேலும், இந்த ஆசிய ஆசிய கோப்பையில் இது அவரது இரண்டாவது தொடர்ச்சியான அரைசதமாகும். முன்னதாக, பாகிஸ்தானுக்கு எதிராக 39 பந்துகளில் 74 ரன்கள் எடுத்திருந்தார்.

ரன் அவுட் ஆகி ஏமாற்றம்:

தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டபோது அபிஷேக் சர்மாவின் பேட்டிங் ஸ்டைல் அட்டகாசமாக இருந்தது. இதனால் ஆசிய கோப்பையில் தனது முதல் சதத்தை அடிப்பார் என்று நினைத்தபோது, துரதிர்ஷ்டவசமாக அபிஷேக் சர்மா 75 ரன்களில் ரன் அவுட் ஆனார். வெறும் 37 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் உதவியுடன்  75 ரன்கள் எடுத்து, 202.70 என்ற அற்புதமான ஸ்ட்ரைக் ரேட்டில் ரன் அவுட்டானார்.

ALSO READ: இலங்கையை தோற்கடித்தும் பாகிஸ்தான் சந்தேகம்.. இறுதிப் போட்டியை இன்னும் உறுதி செய்யாத நிலை..!

மிடில் ஆர்டரில் இந்திய அணி மீண்டும் சொதப்பல்:

அபிஷேக் சர்மா மற்றும் சுப்மன் கில் அவுட்டான பிறகு, இந்திய அணியின் ரன் ரேட் மெல்ல மெல்ல சரிய தொடங்கியது. அடுத்தடுத்து, உள்ளே வந்த சூர்யகுமார் யாதவ், ஷிவம் துபே, திலக் வர்மா ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தது. இறுதியில், ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா சற்று அதிரடியாக விளையாட, இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் வங்கதேச அணிக்கு 169 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.