மீண்டும் கொல்கத்தாவில் கொடூரம்.. சட்டக் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை.. என்ன நடந்தது?
Kolkata Law Student Harassment : மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் சட்டக் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. கொல்கத்தா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட கொடூரம் நடந்து 10 மாதங்களே ஆன நிலையில், தற்போது கொல்கத்தாவில் மற்றொரு சம்பவம் நடந்துள்ளது.

கொல்கத்தா, ஜூன் 27 : மேற்கு வங்க மாநிலம் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் சட்டக் கல்லூர் மாணவி (Kolkata Law Student Harassment) கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக கல்லூரியின் முன்னாள் மாணவர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு நெருக்கடியாக மாறியுள்ளது. மேலும், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பதவி விலக வேண்டும் எனவும் கோரியுள்ளன. கொல்கத்தாவில் பல்வேறு இடங்களில் போராட்டங்களும் நடந்து வருகிறது. இந்த சம்பவம் 2025 ஜூன் 25ஆம் தேதி கொல்கத்தாவில் உள்ள சட்டக் கல்லூரி வளாகத்தில் இரவு 7.30 மணி முதல் 10.30 மணி வரை நடந்துள்ளது. மாணவியை தாக்கி மூன்று பேர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக புகாரில் கூறப்பட்டுள்ளது.
சட்டக் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை
குற்றம் சட்டப்பட்டவர்கள் தங்களுக்கு ஒத்துழைக்கவில்லை என்றால் வீடியோ எடுத்து வெளியிடுவோம் என மிரட்டியுள்ளதாக அந்த பெண் புகாரில் கூறியுள்ளார். மேலும், தான் தப்பிக்க முயன்றபோது, ஹாக்கி மட்டையால் அடிக்க முயன்றதாகவும் அந்த பெண் கூறியிருக்கிறார். பாதிக்கப்பட்ட பெண் டவுன் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குற்றம் சாட்டப்பட்டவர் மீது பிரிவு 127 (2) – தவறான அடைத்து வைத்தல், 70 (1) – கூட்டு பாலியல் வன்கொடுமை மற்றும் 3 (5) – பாரதிய நியாய சம்ஹிதாவின் பொதுவான நோக்கம் ஆகியவற்றின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த புகாரை அடுத்து, மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.




கைதானவர்கள் 31 வயதான மோனோஜித் மிஸ்ரா, 20 வயதான பிரமித் முகர்ஜி மற்றும் 19 வயதான ஜைப் அகமது ஆகியோர் என தெரியவந்துள்ளது. இந்து தகவலின்படி, குற்றம் சாட்டப்பட்டவர்களில் திரிணாமுல் காங்கிரஸின் மாணவர் பிரிவுடன் தொடர்புடைய மோனோஜித் மிஸ்ராவு ஆவார் என கூறப்பட்டுள்ளது.
3 பேர் கைது
ஆனால், இந்த கூற்றை அக்கட்சி மாணவர் அமைப்பு நிராகரித்துள்ளது. கைது செய்யப்பட்ட மூன்று பேரும் அலிப்பூரில் உள்ள கூடுதல் தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை நான்கு நாட்கள் போலீஸ் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த சம்பவம் குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்ட திரிணாமுல் காங்கிரஸ், “தெற்கு கொல்கத்தாவில் சட்டக் கல்லூரியில் நடந்த துயரமான பாலியல் வன்கொடுமை சம்பவத்தை நாங்கள் கண்டிக்கிறோம். கொல்கத்தா காவல்துறை குற்றம் சாட்டப்பட்ட 3 பேரையும் விரைவாக கைது செய்துள்ளது. மேலும் சட்டத்தை பயன்படுத்தி குற்றவாளிகள் கடுமையான தண்டனை விதிக்கப்படும்” என தெரிவித்துள்ளது.
மேற்கு வங்க பாஜக தலைவர் சுகந்தா மஜும்தார் கூறுகையில், கொல்கத்தாவில் ஒரு வருடத்திற்குள் கல்வி நிறுவனத்திற்குள் நடந்த இரண்டாவது பாலியல் வன்கொடுமை சம்பவம் இதுவாகும். முன்னர் மருத்துவக் கல்லூரியில் முதுகலை பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
இன்று ஒரு சட்டக் கல்லூரியில் பாலியல் வன்கொடுமை நடந்துள்ளது. இந்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் ஆளும் கட்சியுடன் தொடர்புடையவர்” என தெரிவித்திருக்கிறார். 2024ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கொல்கத்தா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் முதுகலை பயிற்சி பெற்று வந்த மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த கொடூர சம்பவம் நடந்த 10 மாதங்களுக்குள் மற்றொரு சம்பவம் அரங்கேறி உள்ளது குறிப்பிடத்தக்கது.