Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Madurai: சொத்து வரியில் முறைகேடு.. ரூ.200 கோடி இழப்பு.. சிக்கிய மதுரை மாநகராட்சி ஊழியர்கள்!

மதுரை மாநகராட்சியில் ரூ.200 கோடி வரை அரசுக்கு இழப்பு ஏற்படுத்திய சொத்துவரி மோசடி வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 2024 ஆம் ஆண்டில், ஆயிரக்கணக்கான கட்டிடங்களுக்கு வரி குறைவாக நிர்ணயிக்கப்பட்டது கண்டறியப்பட்டது. இந்த முறைகேட்டில் கவுன்சிலர்கள், மண்டல தலைவர்கள் மற்றும் வரிவிதிப்பு குழு தலைவர்களின் தொடர்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Madurai: சொத்து வரியில் முறைகேடு.. ரூ.200 கோடி இழப்பு.. சிக்கிய மதுரை மாநகராட்சி ஊழியர்கள்!
மதுரை மாநகராட்சி
petchi-avudaiappan
Petchi Avudaiappan | Updated On: 27 Jun 2025 15:48 PM

மதுரை, ஜூன் 27: மதுரை மாநகராட்சியில் விதிகளை மீறி நூதனமான முறையில் லஞ்சம் பெற்றுக் கொண்டு அரசுக்கு ரூ.200 கோடி வரை இழப்பு ஏற்படுத்திய சம்பவத்தில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக ஒரு மாவட்டத்தை எடுத்துக் கொண்டால் மக்கள் பயன்படுத்தும் இடத்துக்கான சொத்து வரி, குடிநீர் வரி உள்ளிட்ட அனைத்தையும் உள்ளாட்சி நிர்வாகத்தில் செலுத்துவது வழக்கம். இதில் சில நேரங்களில் முறைகேடு சம்பவங்கள் நடைபெறுவதாக குற்றச்சாட்டுகளும் எழும். இப்படியான நிலையில் தமிழ்நாட்டின் மூன்றவது பெரிய மாநகராட்சியாக உள்ள மதுரையில் நடைபெற்ற மோசடி சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2024ல் வெளிவந்த முறைகேடு

அதாவது மதுரை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் மட்டும் சுமார் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட தனியார் கட்டடங்கள் இயங்கி வருகிறது. இந்தக் கட்டடங்கள் அவற்றின் அளவுகளுக்கு ஏற்றார் போல் வரி நிர்ணயம் செய்யப்பட்டு வசூலிக்கப்பட்டு வருகிறது. கட்டட வரி விதிப்பு மற்றும் அதற்கான வசூல் பணிகள் ஆகியவை இணையத்தின் வழியே நடைபெற்று வந்த நிலையில் வரி குறைப்பு தொடர்பான நடவடிக்கைகள் ஆகியவை நீதிமன்ற உத்தரவு அல்லது மாநகராட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானம் அடிப்படையில் தான் மேற்கொள்ளப்பட்டு வந்தது.

கடந்த மூன்று ஆண்டுகளாக 2 முதல் 5வது மண்டலம் வரை ஆயிரக்கணக்கான கட்டடங்களுக்கு வரி குறைவாக நிர்ணயிக்கப்பட்டது கண்டறியப்பட்டது. அதுவும் 2024 ஆம் ஆண்டு மதுரை மாநகராட்சி ஆணையராக தினேஷ் குமார் பதவியேற்ற பிறகு தான் இந்த மோசடி விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது. அவர்  வாரந்தோறும் சொத்து வரி வசூல் நிலவரம் மற்றும் புதிதாக சொத்து வரி நிர்ணயம் செய்த கட்டிடங்கள் குறித்து ஆய்வுக் கூட்டங்களை நடத்தி வந்தார். இதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அனைவரும் கலந்து கொண்ட நிலையில் மோசடி கண்டறியப்பட்டது . இதில் 5 பேர் பிடிபட்ட நிலையில் ரூபாய் 1.50 கோடி இழப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

சம்பந்தப்பட்ட ஐந்து பேரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதனையடுத்து தினேஷ்குமார் அளித்த புகாரின் அடிப்படையில் மத்திய பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் மற்றும் சைபர் கிரைம் போலீசார் இந்த வழக்கை விசாரணை செய்து வந்தனர். இதற்கிடையில் தினேஷ்குமார் பணியிட மாற்றம் பெற்றதும் இந்த வழக்கில் தொய்வு ஏற்பட்டது.

அரசுக்கு ரூ.200 கோடி இழப்பீடு

இதன் பின்னர் மாநகராட்சி ஆணையராக சித்ரா பொறுப்பேற்ற பின் மீண்டும் விசாரணை தொடங்கப்பட்டது. இதில் மாநகராட்சி ஒப்பந்த பணியாளர்களாக மூன்றாவது மண்டலத்தில் நேர்முக உதவியாளராக இருந்த தனசேகரன், கம்ப்யூட்டர் ஆபரேட்டர் சதீஸ் கைது செய்யப்பட்டனர்.  தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் உதவி ஆணையரின் உதவியாளராக பணியாற்றிய கார்த்திகேயன் மற்றும் இடைத்தரகரர்களாக செயல்பட்ட உசேன் மற்றும் ராஜேஷ் ஆகியவரையும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

இவர்களிடம் நடத்திய விசாரணையில், தாங்கள் கவுன்சிலர்கள், மண்டல தலைவர்கள், வரிவிதிப்பு குழு தலைவர் ஆகியோர் வற்புறுத்தியதன் பெயரில் முறைகேட்டில் ஈடுபட்டதாக தெரிவித்ததாக சொல்லப்படுகிறது. மேலும் இவர்கள் கட்டட உரிமையாளர்களிடம் குறிப்பிட்ட பணத்தைப் பெற்றுக் கொண்டு சொத்து வரியை குறைத்து நிர்ணயித்ததால் அரசுக்கு ரூ.200 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கைதான ஐந்து பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  இந்த சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது