நாமக்கல்: கோட்டாட்சியராக நடித்து இளம்பெண் செய்த செயல்… பின்னர் கைது!
Namakkal Bank Officer Duped: நாமக்கல் மாவட்ட வங்கி அதிகாரி நவீன் குமார், தன்வார்த்தினி என்ற பெண்ணை IAS அதிகாரி என நம்பி திருமணம் செய்தார். பின்னர் அவர் போலி ஆவணங்களைப் பயன்படுத்தியது தெரியவந்தது. தன்வார்த்தினி TNPSC சான்றிதழ்கள், அடையாள அட்டைகள் போலியானவை என கண்டுபிடிக்கப்பட்டது.

நாமக்கல் ஜூன் 27: நாமக்கல் (Namakkal) மாவட்டத்தைச் சேர்ந்த வங்கி அதிகாரி நவீன்குமார் (Bank Officer Naveen Kumar) , 2022-ல் திருமண தகவல் மையத்தில் பதிவு செய்திருந்தார். அதில், தன்வார்த்தினி (Thanvarthini) என்ற பெண், “கோட்டாட்சியர்” என கூறி திருமணம் செய்தார். பின்னர், அவர் அரசு அதிகாரி அல்ல என்பதை நவீன்குமாரின் நண்பரின் தந்தை கண்டறிந்தார். விசாரணையில், தன்வார்த்தினி காட்டிய TNPSC சான்றிதழ்கள், அடையாள அட்டைகள் அனைத்தும் போலியானவை என உறுதி செய்யப்பட்டது. இது தொடர்பாக கொடுத்த புகாரின் பேரில், போலீசார் தன்வார்த்தினியை கைது செய்து சிறையில் அடைத்தனர். சம்பவம் தொடர்பாக ஆவணங்களை வழங்கிய நபரையும் போலீசார் விசாரிக்க உள்ளனர்.
கோட்டாட்சியராக நடித்து இளம்பெண் திருமணம்
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டம் பெரியமணலி குளத்துக்காடு பகுதியைச் சேர்ந்த நவீன்குமார் (29) என்பவர், கனரா வங்கியில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். 2022-ல் திருமண தகவல் மையத்தில் அவரது பெற்றோர் திருமண பதிவு செய்தனர். அதே மையத்தில் நாமக்கல் இராமாபுரம்புதூரைச் சேர்ந்த ரவீந்திரன் என்பவர் தனது மகள் தன்வார்த்தினிக்கு (29) பாவனையை பதிவு செய்திருந்தார். பதிவு செய்த விவரங்களில், தன்வார்த்தினி ஒரு கோட்டாட்சியர் என கூறப்பட்டிருந்ததால், ஜாதகப் பொருத்தம் பார்த்து இருவருக்கும் 2024 ஜூன் 12-ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.
ஏமாற்றி வங்கி அதிகாரியை திருமணம் செய்த பெண்
திருமண அழைப்பிதழிலும், திருமண பதிவிதழிலும் தன்வார்த்தினி, “பொள்ளாச்சி கோட்டாட்சியர்” என குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் பின்னர், நவீன்குமாரின் நண்பரின் தந்தை பொள்ளாச்சி கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு சென்றபோது, அங்கு தன்வார்த்தினி வேலை செய்யவில்லை என்பதும், அந்தப் பெயரில் யாரும் இல்லை என்பதும் தெரியவந்தது. இந்த தகவலை நவீன்குமாருக்கு தெரிவித்ததும், அவர் அவரது மனைவியிடமும், மாமனாரிடமும் விசாரணை மேற்கொண்டார்.




போலி சான்றிதழ்கள் வழங்கல்: விசாரணை
தன்வார்த்தினி, Group 1 தேர்வில் தேர்ச்சி பெற்றதாகவும், தேர்வாணைய செயலாளர் மற்றும் தலைமைச் செயலாளர் கையொப்பமிட்ட சான்றிதழ்கள் மற்றும் அடையாள அட்டைகளை காண்பித்தார். ஆனால், நவீன்குமார் தொடர்ந்து சந்தேகப்பட்டு, 2025 ஏப்ரல் 29-ஆம் தேதி சிபிசிஐடி அலுவலகத்தில் புகார் அளித்தார். பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், தன்வார்த்தினி வழங்கிய அனைத்து ஆவணங்களும் போலியானவை என கண்டறியப்பட்டது.
ஏமாற்றிய தன்வார்த்தினி கைது
இந்த விவகாரத்தில் தன்வார்த்தினி, அரசு அதிகாரியாக ஏமாற்றி திருமணம் செய்துள்ளார் என நவீன்குமார் புகார் கொடுத்த நிலையில், நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவு ஆய்வாளர் சவீதா, தன்வார்த்தினிக்கு எதிராக மோசடி வழக்கு பதிவு செய்து கைது செய்தார். பின்னர், அவரை நாமக்கல் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சேலம் பெண்கள் சிறையில் அடைத்தனர்.
போலீஸ் தரப்பில் தெரிவிக்கையில், தன்வார்த்தினி Group 1 தேர்வில் நேர்முகத் தேர்வு வரை சென்றிருந்தாலும், ஒருவர் தன்னிடம் போலி சான்றிதழ்களைக் கொடுத்ததாக கூறியுள்ளார். அதனை விசாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.