காங்கிரஸ் பிரமுகர் அடித்து கொலை… கஞ்சா போதையில் இளைஞர் செய்த கொடூரம்.. திருத்தணியில் அதிர்ச்சி!
Tiruttani Congress Functionary Murder : திருத்தணியில் காங்கிரஸ் பிரமுகர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கஞ்சா விற்பனையை தட்டிக் கேட்டதால், இளைஞர் ஒருவர் அவரை அடித்தே கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனை அடுத்து, ஹரிகிருஷ்ணன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர், ஜூன் 11 : திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் காங்கிரஸ் பிரமுகர் கொலை செய்யப்பட்டது (Tiruttani Congress Functionary Murder) பரபரப்பை கிளப்பியுள்ளது. உயிரிழந்த காங்கிரஸ் பிரமுகர் ராஜேந்திரன் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர் தலையில் பலத்த காயங்களுடன் வீட்டின் பின்பகுதியில் இறந்து கிடந்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் காங்கிரஸ் நகர துணைத் தலைவராக இருந்தார். இந்த நிலையில், அவர் 2025 ஜூன் 10ஆம் தேதி இரவு வீட்டின் பின்புறம் சடலமாக கிடந்துள்ளார். நள்ளிரவு 12 மணியளவில் ராஜேந்திரனை காணவில்லை என அவரது மனைவி பல்வேறு இடங்களில் தேடி பார்த்துள்ளனர். அப்போது, அவர் வீட்டின் பின்புறம் தலையில் பலத்த காயங்களுடன் கிடந்துள்ளார். இதனை அறிந்து அதிர்ச்சி அடைந்த மனைவி, உடனே ஆர்.கே.பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
காங்கிரஸ் பிரமுகர் அடித்து கொலை
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ராஜேந்திரன் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். அப்போது, காங்கிரஸ் பிரமுகர் ராஜேந்திரன் மர்ம நபர்களால் அடித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.
அதாவது, திருத்தணியில் பள்ளிக்கு அருகே சிலர் போதைப் பொருட்களை விற்பனை செய்வதை ராஜேந்திரன் தட்டிக் கேட்டதாக கூறப்படுகிறது. மேலும், இரவில் மர்ம நபர்கள் அவரது வீட்டிற்கு அருகே இருந்த இரும்பு கம்பிகளையும் திருட முயன்றபோது அதனை பார்த்த அவர் தட்டிக் கேட்டுள்ளார். இந்த சூழலில், ராஜேந்திரன் 2025 ஜூன் 10ஆம் தேதி அடித்து கொலை செய்யப்பட்டு இருக்கிறார்.
காரணம் என்ன?
ஹரிகிருஷ்ணன் என்பவர் கஞ்சா விற்பனை செய்து வந்தபோது, அவரை ராஜேந்திரன் தட்டிக் கேட்டு இருக்கிறார். தட்டிக் கேட்ட போது, கஞ்சா போதையில் இருந்த ஹரிகிருஷ்ணன் ராஜேந்திரன் தலையில் கற்களை தூக்கிப் போட்டு தாக்கி இருக்கிறார். இதில் ராஜேந்திரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து ஹரிகிருஷ்ணனை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் நடத்திய விசாரணையில் ராஜேந்திரனை கொலை செய்ததை ஒப்புக் கொண்டு வாக்குமூலமாக அளித்துள்ளதாக போலீசார் கூறியுள்ளனர். கஞ்சா விற்பனையை தட்டிக் கேட்ட காங்கிரஸ் பிரமுகர் கொலை செய்யப்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கொலை சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. இதனை தடுக்க மாநில அரசு கடும் நடவடிக்கை எடுத்து வந்தாலும் தொடர்ந்து கொலை சம்பவங்கள் பல்வேறு மாவட்டங்கள் அரங்கேறி வருகிறது. இதனால், தமிழக்ததில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டி வருகின்றன. அண்மையில் கூட, நாமக்கல் மாவட்டத்தில் மூதாட்டி கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். 65 வயதான மூதாட்டியை கொலை செய்ததாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.