பிரபல மாடல் எடுத்த விபரீத முடிவு.. திருமணம் தள்ளிப்போனதால் சோகம்.. குஜராத்தில் ஷாக்!
Gujarat Model Suicide : குஜராத்தில் பிரபல மாடல் அழகி தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண்ணின் திருமணம் தள்ளிப்போனதால், அவர் மன உளைச்சலில் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து, அவர் இதுபோன்ற விபரீத முடிவை எடுத்திருக்கலாம் என போலீசார் சந்தேகித்துள்ளனர்.

குஜராத், ஜூன் 10 : குஜராத்தைச் சேர்ந்த பிரபல மாடல் ஒருவர் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில், அவரது திருமணம் நின்றதால், சில நாட்களாகவே மன உளைச்சலில் இருந்த அவர், தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் கூறியுள்ளனர். குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர் 23 வயதான அஞ்சலி அல்பேஷ் வர்மோரா. இவர் பல ஆண்டுகளாகவே மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார். இவர் பல்வேறு விளம்பரங்களிலும் நடித்துள்ளதாக தெரிகிறது. இவருக்கு அண்மையில் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. அவரது திருமணம் 2025ஆம் ஆண்டில் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், அவரது மணமகனின் தாய் உயிரிழந்ததால், திருமணம் 2026ஆம் ஆண்டுக்கு தள்ளிவைக்கப்பட்டது. இதனால், அவர் சில நாட்களாக மன உளைச்சலில் இருந்துள்ளதாக தெரிகிறது.
பிரபல மாடல் எடுத்த விபரீத முடிவு
இந்த நிலையில், 2025 ஜூன் 8ஆம் தேதி இரவு அஞ்சலி வீட்டில் மயக்க நிலையில் கிடந்துள்ளார். அப்போது, அவரது வீட்டில் பெற்றோர் யாரும் இல்லை. பெற்றோர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது அஞ்சலி மயக்க நிலையில் கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர், உடனே மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர். மேலும், அவர் தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதனை அடுத்து, மருத்துவமனைக்கு வந்த போலீசார் பெண் அஞ்சலியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.




இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது, தற்கொலை செய்து கொள்வதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, தனது வருங்கால மாப்பிள்ளைக்கு ஃபோன் செய்து இருந்தது தெரியவந்துள்ளது.
குஜராத்தில் ஷாக்
அதோடு, கடைசியாக சோகமான பதிவு ஒன்றையும் சமூக வலைதளங்களில் வெளியிட்டிருந்ததும் தெரியவந்துள்ளது. எனவே, திருமணம் தள்ளிப்போனதால் மன உளைச்சலில் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து, மாடல் அஞ்சலி தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.
முன்னதாக, ஹரியானா மாநிலத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர். காரில் இருந்தபடியே ஒவ்வொருவரும் விஷம் குடித்து உயிரிழந்துள்ளனர் கடன் நெருக்கடியால் இதுபோன்ற விபரீத முடிவை எடுத்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
(தற்கொலை எதற்கும் தீர்வல்ல.. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு வர கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசலாம். மாநில உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் – 044 -24640050)