AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

டெல்லி அக்ஷர்தாம் கோயிலில் 80-வது சுதந்திர தின விழா கோலாகலம்.. தேசியக் கொடிக்கு சுவாமிகள் மரியாதை!!

Delhi Akshardham Temple Celebrates Independence Day: டெல்லி சுவாமிநாராயணன் அக்ஷர்தாம் கோயிலில் இந்தியாவின் 80-வது சுதந்திர தின விழா தேசபக்தி மற்றும் ஆன்மீக எழுச்சியுடன் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. BAPS அமைப்பின் சுவாமிகள் தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்தியதுடன், நாட்டின் அமைதி, ஒற்றுமை மற்றும் வளர்ச்சிக்கும், தியாகிகளின் நினைவைப் போற்றும் வகையிலும் சிறப்புப் பிரார்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டன.

டெல்லி அக்ஷர்தாம் கோயிலில் 80-வது சுதந்திர தின விழா கோலாகலம்.. தேசியக் கொடிக்கு சுவாமிகள் மரியாதை!!
மகந்த் சுவாமி மகாராஜ்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 15 Aug 2026 12:57 PM IST

இந்திய திருநாட்டின் 80-வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வரும் சூழலில், புது தில்லியிலுள்ள உலகப் புகழ்பெற்ற சுவாமிநாராயணன் அக்ஷர்தாம் திருக்கோயிலில் சுதந்திர தின விழா தேசபக்தி, ஆன்மீக பக்தி மற்றும் தேசிய ஒற்றுமை உணர்வுடன் மிகக் கோலாகலமாக நடைபெற்றது. நாட்டின் விடுதலைக்காகத் தங்களின் இன்னுயிரைத் தியாகம் செய்த வீர தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும், இந்தியாவின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் தொடர் முன்னேற்றத்திற்காகவும் கோயில் வளாகத்தில் சிறப்பு நிகழ்ச்சிகளும் பிரார்த்தனைகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. விழாவுக்கு வந்திருந்த BAPS அமைப்பின் துறவிகளும் பக்தர்களும் தேசியக் கொடிக்குக் கம்பீரமாகச் சல்யூட் அடித்து மரியாதை செலுத்தினர்.

இதையும் படிக்க: சுவாமி பத்ரேஷ்தாஸ்க்கு சிறப்பான கெளரவம்.. ‘வேதாந்த வித்யா விஸ்வகுரு’ விருது

யோகிஜி மகாராஜின் ஆன்மீகப் பங்களிப்பு:

நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய BAPS சாரங்பூர் கோயிலின் தலைமைச் சுவாமியும், அமைப்பின் மூத்த சாதுவுமான பூஜ்ய ஞானேஷ்வர் சுவாமி, நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் பிரம்மஸ்வரூப் யோகிஜி மகாராஜ் செலுத்திய ஆன்மீகப் பங்களிப்பை நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்தார். தண்டி யாத்திரையின் போது மகாத்மா காந்தி முழு சுதந்திரத்திற்கான தனது உறுதியை சாஸ்திரிஜி மகாராஜிடம் வெளிப்படுத்தியபோது, சாஸ்திரிஜி மகாராஜின் அறிவுறுத்தலின்படி, இந்தியாவின் சுதந்திரத்திற்காக யோகிஜி மகாராஜ் தொடர்ச்சியாக 18 ஆண்டுகள் தினமும் 25 மாலைகள் ஜெபித்து வந்ததைச் சுட்டிக்காட்டினார். ஒரு நாட்டின் விடுதலை மற்றும் நலனுக்காக ஆன்மீகப் பயிற்சியும் தேசபக்தியும் எந்த அளவிற்கு ஆழமாக இணைந்திருக்க முடியும் என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்றும் அவர் குறிப்பிட்டார்.

அமிர்த காலத்தில் நாட்டின் ஒற்றுமை:

Baps 2

சுதந்திர தின கொண்டாட்டம்

நாட்டின் உண்மையான பலமே அதன் ஒற்றுமையில்தான் அமைந்திருக்கிறது என்று வலியுறுத்திய ஞானேஷ்வர் சுவாமி, சுதந்திரத்தின் இந்த ‘அமிர்த காலத்தில்’ நாட்டின் நலனை அனைத்திற்கும் மேலாகக் கருதி ஒவ்வொரு குடிமகனும் தங்களது கடமைகளைச் செவ்வனே ஆற்ற வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். அப்போதுதான் இந்தியாவை மேலும் வலிமையான, வளமான மற்றும் வளர்ந்த நாடாக மாற்ற முடியும் என்று கூறிய அவர், குறிப்பாக இளைய தலைமுறையினர் நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் கலாச்சார மதிப்பீடுகளை வலுப்படுத்த முன்வர வேண்டும் என அழைப்பு விடுத்தார்.

மகந்த் சுவாமி மகாராஜின் ஆசி:

இவ்விழாவை முன்னிட்டு BAPS அமைப்பின் தற்போதைய ஆன்மீகத் தலைவரான பரமபூஜ்ய மகந்த் சுவாமி மகாராஜ், நாட்டு மக்கள் அனைவரும் ஒற்றுமை, நல்லிணக்கம் மற்றும் தேச சேவையுடன் முன்னெடுத்துச் செல்லத் தமது தெய்வீக ஆசீர்வாதங்களை வழங்கினார். இந்தியாவின் தொடர் வளர்ச்சி, அமைதி, வளம் மற்றும் உலக நலனுக்காகப் பிரார்த்தித்த அவர், நாட்டின் விடுதலைக்காகத் தியாகம் செய்த வீரர்களை எப்போதும் நினைவில் வைத்திருக்க வேண்டும் என்ற செய்தியையும் அளித்தார். விழாவின் இறுதியில் பங்கேற்ற பக்தர்கள் மற்றும் சுவாமிகள் அனைவரும் தேசப்பணி, ஒற்றுமை மற்றும் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்படுவோம் எனத் தேசபக்தி மேலோங்க உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

Follow Us