80-வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்.. முதல்முறையாக செங்கோட்டையில் எதிரொலிக்கும் ‘வந்தே மாதரம்’!!
80th Independence Day: இந்தியாவின் 80-வது சுதந்திர தின விழா டெல்லி செங்கோட்டையில் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. வரலாற்றிலேயே முதன்முறையாகச் செங்கோட்டை கொத்தளத்தில் 'வந்தே மாதரம்' தேசிய பாடல் பாடப்பட்டு விழாத் தொடங்கும் புதிய மரபு உருவாக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் தேசியக் கொடியேற்றம், உரை மற்றும் பல அடுக்கு தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விரிவாகப் பார்ப்போம்.
டெல்லி, ஆகஸ்ட் 15: இந்திய திருநாடு தனது 80-வது சுதந்திர தின பெருவிழாவை ‘விக்சித் பாரத் 2047’ (வளர்ச்சியடைந்த இந்தியா 2047) எனும் தொலைநோக்கு இலக்குடன் மிகக் கோலாகலமாகக் கொண்டாடி வருகிறது. நாட்டின் தலைநகர் டெல்லியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோட்டையில் இந்த பிரம்மாண்ட விழா நடைபெறுகிறது. நாட்டின் விடுதலைக்காகப் பாடுபட்ட தியாகிகளை நினைவுகூரும் வகையில், வழக்கமான மரபுகளில் இருந்து சில முக்கிய மாற்றங்களுடன் இந்த ஆண்டின் விழா வடிவமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’ உருவாக்கப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவடைவதைக் கொண்டாடும் வகையிலும், நாட்டின் ‘யுவ சக்தி’ எனப்படும் இளைஞர் சக்தியின் பங்களிப்பை மையப்படுத்தியும் விழா நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இதையும் படிக்க: President Speech: சுதந்திர தினம் 2026.. நாட்டு மக்களுக்கு உரையாற்றும் குடியரசுத்தலைவர்.. நேரலை விவரம்
முதல்முறையாக செங்கோட்டையில் ‘வந்தே மாதரம்’ பாடல்:
சுதந்திர இந்தியாவின் வரலாற்றுப் பக்கங்களில் புதிய அத்தியாயமாக, இந்த 80-வது சுதந்திர தின விழாவில் பிரதமர் நரேந்திர மோடி செங்கோட்டைக்கு வருகை தந்தவுடனேயே தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’ முழுமையாகப் பாடப்படும் புதிய மரபு முறை பின்பற்றப்படுகிறது. பங்கிம் சந்திர சட்டோபாத்யாய இயற்றிய இப்பாடலின் 150-வது ஆண்டைக் குறிக்கும் வகையில், பிரதமரின் உரைக்கு முன்பாகவே அனைத்து தலைவர்களும், மக்களும் எழுந்து நின்று மரியாதையுடன் வந்தே மாதரம் பாடலைப் பாடுகின்றனர். அதன்பின்னர் பிரதமர் தேசியக் கொடியை ஏற்றி வைக்க, தேசிய கீதம் இசைக்கப்பட்டு, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 105 மி.மீ லைட் ஃபீல்ட் துப்பாக்கிகள் மூலம் 21 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்படுகிறது.
பிரதமர் மோடியின் உரை மற்றும் சிறப்பு அம்சங்கள்:
தேசியக் கொடியை ஏற்றிய பிறகு, பிரதமர் நரேந்திர மோடி செங்கோட்டை கொத்தளத்திலிருந்து நாட்டிற்குச் சிறப்பு உரையாற்றுகிறார். இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, தொழில்நுட்பப் புரட்சி, பாதுகாப்பு வலிமை மற்றும் 2047-க்குள் இந்தியாவை வல்லரசாக மாற்றுவதற்கான இளைஞர்களின் பங்கு குறித்து அவர் தனது உரையில் முக்கியக் கருத்துகளைப் பகிர்ந்து கொள்கிறார். இவ்விழாவில் நாடு முழுவதிலும் இருந்து சுமார் 5,000 சிறப்பு விருந்தினர்கள், கைவினைஞர்கள், விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் பல்வேறு நலத்திட்டப் பயனாளிகள் பங்கேற்றுள்ளனர். மேலும், இந்திய விமானப் படையின் எம்.ஐ-17 ஹெலிகாப்டர்கள் மூலம் செங்கோட்டை வளாகத்தில் மலர் தூவப்பட்டு விழாச் சிறப்பிக்கப்படுகிறது.
இதையும் படிக்க: தேசிய கொடி வண்ணத்தில் மாஸ்க்.. வித்யாசமாக கொண்டாடப்பட்ட சுதந்திர தினம்!
டெல்லியில் பல அடுக்கு தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள்:
சுதந்திர தின விழாவை முன்னிட்டு டெல்லி முழுவதும், குறிப்பாகச் செங்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பல அடுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. டெல்லி காவல் துறை, முப்படை வீரர்கள் மற்றும் மத்திய ஆயுதக் காவல் படையைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பாதுகாப்புப் பணியாளர்கள் ரோந்துப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்துடன் கூடிய முகத்தை அடையாளம் காணும் கேமராக்கள், ரேடார்கள், ட்ரோன் எதிர்ப்பு அமைப்புகள் மற்றும் வான்வெளி கண்காணிப்பு உபகரணங்கள் மூலம் செங்கோட்டை வளாகம் முழுமையாகக் கண்காணிக்கப்பட்டு, பலத்த பாதுகாப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.