மகனுக்கு பிறந்தநாள் பரிசு வழங்குவதில் வாக்குவாதம்.. மனைவி, மாமியாரை கத்தரிக்கோலால் குத்தி கொலை செய்த நபர்!
Gift Dispute Leads to Double Murder | டெல்லியில் தனது மகனின் பிறந்தநாள் விழாவில் பரிசு கொடுப்பதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த கணவன் தனது மணைவி மற்றும் மாமியாரை கத்தரிக்கோலால் குத்தி படுகொலை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுடெல்லி, செப்டம்பர் 01 : டெல்லியில் (Delhi) மகனின் பிறந்தநாளில் பரிசு வழங்குவதில் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக ஒருவர் மனைவி மற்றும் மாமியாரை கொலை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த நபர் தனது மனைவியை கத்தரிக்கோலால் குத்திய நிலையில், அதனை தடுக்க வந்த மாமியாரையும் சரமாரியாக குத்தி கொலை செய்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், அந்த நபரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விபரீதத்தில் முடிந்த பிறந்தநாள் பரிசு
புதுடெல்லியில் உள்ள ரோகிணி செக்டார் பகுதியில் வசித்து வருபவர் யோகேஷ். இவருக்கு 17 ஆண்டுகளுக்கு முன்னர் பிரியா சேகல் என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். இந்த நிலையில் தம்பதி தங்களது மகனின் பிறந்த நாளை கொண்டாடியுள்ளனர். அதற்காக பிரியாவின் தாய், குசும் சின்ஹா வீட்டிற்கு வந்துள்ளார்.
இதையும் படிங்க : வாட்ஸ்அப்பில் இரங்கல் செய்தி.. அடுத்த நாள் மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவர்.. அதிர்ச்சி சம்பவம்!




அவர்கள் அனைவரும் இணைந்து பிறந்தநாள் விழாவை கொண்டாடிய போது, பரிசு பொருட்கள் பரிமாறுவதில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மகளும், மருமகனும் சண்டையிட்டுக் கொண்ட நிலையில் குசும் சின்ஹா அவர்களை சமாதானப்படுத்தி உள்ளார். ஆனால் இருவருக்கும் இடையே சமாதானம் ஏற்படவில்லை, இதனால் குசும் சின்ஹா வீட்டுக்கு போன் செய்து தான் தனது மகளுடன் ஒரு நாள் அங்கேயே தங்கி விட்டு வருவதாக கூறியுள்ளார்.
மனைவி மற்றும் மாமியாரை கொலை செய்த யோகேஷ்
ஆனால் இரவு நேரத்திலும் அவர்கள் இருவருக்கும் இடையேயான சண்டை தொடர்ந்துள்ளது. கணவன், மனைவி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் ஒரு கட்டத்தில் கடும் ஆத்திரத்திற்கு உள்ளான யோகேஷ் கத்தரிக்கோலை வைத்து தனது மனைவியின் கழுத்தில் பலமுறை குத்தி உள்ளார். இதனால் பலத்த காயமடைந்த பிரியா, ரத்த வெள்ளத்தில் அங்கேயே சரிந்துள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த குசும் சின்ஹா தனது மருமகனை தாக்க முயன்றுள்ளார். அப்போது யோகேஷ் அவரையும் கத்தரிக்கோளால் குத்தி கொலை செய்துள்ளார்.
இதையும் படிங்க : மூட நம்பிக்கையின் உச்சம்.. பேரனை நரபலி கொடுத்த தாத்தா.. பகீர் வாக்குமூலம்!
இருவரும் சம்பவ இடத்தில் உயிர் இழந்துவிட்ட நிலையில் தனது மகனை அழைத்துக் கொண்டு வீட்டின் கதவை வெளிப்புறமாக பூட்டிவிட்டு யோகேஷ் தப்பி சென்றுள்ளார். அடுத்த நாள் வெகு நேரமாகியும் குசும் சின்ஹா வீடு திரும்பாததால் அவரது பிள்ளைகள் அவருக்கு போன் செய்துள்ளனர். குசும் மற்றும் பிரியாவை தொடர்பு கொள்ள முடியாததால் சந்தேகம் அடைந்த அவர்கள் வீட்டிற்கு சென்று பார்த்துள்ளனர்.
அப்போது வீடு வெளிப்புறமாக பூட்டப்பட்டிருந்த நிலையில் வாசலில் ரத்த கரையில் இருப்பதைக் கண்டு சந்தேகம் அடைந்த அவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த நிலையில், வழக்குப்பதிவு செய்து யோகேஷை கைது செய்தனர்.