Mouth Cancer: வாய் புற்றுநோய் என்றால் என்ன? சிகிச்சை முறை என்ன? விளக்கும் மருத்துவர் ராஜசுந்தரம்!
Mouth Cancer Symptoms: சிகரெட் பாக்கெட்டுகளில் "புகைப்பிடித்தல் உயிரைக் கொல்லும்" என்ற எச்சரிக்கையை நாம் அடிக்கடி பார்க்கிறோம். புகைப்பிடிப்பதால் மட்டும் வாய் புற்றுநோய் ஏற்படுவது கிடையாது, மாறாக குட்கா, சைனி கைனி, மாவா மற்றும் ஜர்தா போன்ற "புகையற்ற" பொருட்கள் மூலமாகவும் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
இந்தியாவில் வாய் புற்றுநோய் (Mouth Cancer) ஒரு தேசிய சுகாதார நெருக்கடியாக உருவெடுத்து உள்ளது. ஆண்டுதோறும் 1 லட்சத்து 30 ஆயிரத்துக்கும் அதிகமான புதிய நோயாளிகளுடன் உலக அளவில் நாம் முதலிடத்தில் இருக்கிறோம். இதில் சோகம் என்னவென்றால், 90 சதவீத பாதிப்புகள் தடுக்கக்கூடியவையாக உள்ளன. வாய்ப் புற்றுநோய்கள் பொதுவாக உதடுகள், நாக்கு மற்றும் வாயின் அடிப்பகுதியில் ஏற்படும். இருப்பினும், சிலருக்கு, கன்னங்கள், ஈறுகள், அண்ணம், டான்சில்ஸ் மற்றும் உமிழ்நீர் சுரப்பிகளிலும் வாய்ப் புற்றுநோய் உருவாகலாம். முக்கிய காரணங்கள் புகையிலை, பாக்கு மற்றும் மது அருந்துதல் (Drinking) ஆகும். வாய்ப் புற்றுநோய்களில் 80% க்கும் அதிகமானவர்களுக்கு கதிரியக்க சிகிச்சை தேவைப்படுகிறது. அறுவை சிகிச்சை அல்லது கீமோதெரபி மூலமும் இதற்கு சிகிச்சையளிக்க முடியும். இருப்பினும், சில நேரங்களில் தாமதமாகக் கண்டறிவது ஆபத்தானது. இந்தநிலையில், புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் எஸ். ராஜசுந்தரம் வாய் புற்றுநோய் என்றால் என்ன, அதன் எச்சரிக்கை அறிகுறிகள் மற்றும் சிகிச்சை முறை குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
ALSO READ: பெண்களுக்கு தைராய்டு புற்றுநோய் வருவதற்கான ஆபத்து.. இதன் அறிகுறிகள் என்ன?




புகைப்பிடித்தல் மட்டுமல்ல:
சிகரெட் பாக்கெட்டுகளில் “புகைப்பிடித்தல் உயிரைக் கொல்லும்” என்ற எச்சரிக்கையை நாம் அடிக்கடி பார்க்கிறோம். புகைப்பிடிப்பதால் மட்டும் வாய் புற்றுநோய் ஏற்படுவது கிடையாது, மாறாக குட்கா, சைனி கைனி, மாவா மற்றும் ஜர்தா போன்ற “புகையற்ற” பொருட்கள் மூலமாகவும் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். அதாவது, நீங்கள் புகையிலையைக் வாயில் ஒதுக்கி வைக்கும்போது, வெறும் நிக்கோடினை மட்டுமல்ல, புற்றுநோயை உண்டாக்கும் 70-க்கும் மேற்பட்ட நச்சுகளையும் உங்கள் உடல் உறிஞ்சுகிறது. “சாதா” பாக்கு கூட ஒரு வகை-1 புற்றுநோய் காரணியாகும். இது “ஓரல் சப்மியூகோஸ் பைப்ரோஸிஸ்” என்ற நிலையை ஏற்படுத்துகிறது. இதனால் வாயின் தசைநார்கள் இறுகி, வாய் திறக்க முடியாத நிலை ஏற்பட்டு, நாளடைவில் புற்றுநோய்க்கும் வழிவகுக்கிறது.
எச்சரிக்கை அறிகுறிகள்:
View this post on Instagram
“வலி இல்லையென்றால் அது புற்றுநோய் இல்லை” என்பதே முற்றிலும் தவறான நம்பிக்கையாகும். உண்மை என்னவென்றால், ஆரம்பக்கட்ட வாய் புற்றுநோய் பெரும்பாலும் வலி இல்லாமலேயே இருக்கும்.
- 14 நாட்களுக்குள் ஆறாத எந்தவொரு வாய் புண்ணும்.
- வாயின் உட்புறத்தில் தொடர்ந்து இருக்கும் வெண்மையான திட்டுகள் அல்லது சிவப்பு நிறத் திட்டுகள்.
- விழுங்குவதில் சிரமம் அல்லது வாயை முழுமையாகத் திறக்க முடியாத நிலை ஆகிய 3-ம் முக்கிய எச்சரிக்கை அறிகுறிகள் ஆகும்.
வாய் புற்றுநோய்க்கான அறிகுறிகளை எப்படி கண்டறிவது..?
நாக்கு:
நாக்கின் பக்கவாட்டிலும் அடிப்பகுதியிலும் பார்க்கவும்
கன்னங்கள்:
கன்னங்களைத் தடவிப் பார்த்து, கட்டிகள் அல்லது “தோல் போன்ற கடினமான” உணர்வு உள்ளதா எனக் கண்டறியவும்.
ஈறுகள்:
காரணமில்லாத ரத்தப்போக்கு அல்லது சதை வளர்ச்சியைப் பார்க்கவும்.
கழுத்து:
தாடை ஓரத்தில் வலியற்ற, கடினமான கட்டிகள் உள்ளனவா எனத் தடவிப் பார்த்து தெரிந்து கொள்ளவும்.
வரும் முன் காப்பது
ஆரம்பக்கட்ட நோய் கண்டறிதல் உயிரைக் காக்கும். இந்தியாவில் 50 சதவீத நோயாளிகள் நோய் பாதிப்பின் மூன்றாம் நிலையில்தான் மருத்துவமனைக்கு வருகிறார்கள். இந்த நிலையில் சிகிச்சை மிகவும் தீவிர சிகிச்சை வழங்க வேண்டிய சூழல்நிலைக்கு தள்ளி விடுகிறது. இதற்கு பிறகு பெரிய அறுவை சிகிச்சை, முகச் சீரமைப்பு மற்றும் கீமோ-கதிர்வீச்சு சிகிச்சைகள் அதற்கு தேவைப்படும். இது சாத்தியம் என்றாலும், இதற்கு அதிக நிபுணத்துவமும் செலவும் தேவைப்படும். ஆனால், முதல் நிலையில் அதாவது ஆரம்ப நிலையில் கண்டறிந்தால் 90 சதவீதம் குணப்படுத்த முடியும். ஆரம்பத்திலேயே கண்டறிவது, உயிருக்கே ஆபத்தான நோயை ஒரு சிறிய அறுவை சிகிச்சை மூலம் சரிசெய்யக்கூடியதாக மாற்றுகிறது.
ALSO READ: பெண்களுக்கு கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் பயமா? மருத்துவர் அஸ்மி சவுந்தர்யா விளக்கம்!
வேண்டுகோள்
தற்போது 20 வயதுடையவர்களுக்கு இந்த நோயின் பாதிப்பு அதிக அளவில் இருப்பதை புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர்கள் கண்டறிந்தனர். உங்கள் வாய் என்பது உங்கள் ஆரோக்கியத்தின் நுழைவாயில் ஆகும். புகையிலை போன்ற நச்சுத்தன்மை நிறைந்த பொருட்களைக் கொண்டு அதை நோயின் நுழைவாயிலாக மாற்றாதீர்கள். உங்கள் கன்னத்தில் அல்லது வாயின் உட்புறம் ஏதேனும் சந்தேகப்படும் வகையில் இருந்தால், உடனே புற்றுநோய் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது முக்கியம்.