சாக்லேட் கொடுத்து வாக்காளர்களை வரவேற்ற ‘டீனா’ ரோபோ.. 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி கோவையில் புதுமை!!
Tamilnadu Assembly Election: வாக்குச்சாவடியில் ரோபோ இருப்பதைக் கண்ட வாக்காளர்கள், குறிப்பாக இளைஞர்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்கள் மிகுந்த ஆச்சரியமடைந்தனர். பலர் இந்த ரோபோவுடன் ஆர்வமாக செல்பி எடுத்து மகிழ்ந்தனர். இது போன்ற புதுமையான முயற்சிகள் வாக்குப்பதிவு சதவீதத்தை அதிகரிக்க உதவும் எனத் தேர்தல் அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
Tamilnadu Polls 2026: தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, வாக்காளர்களைக் கவரும் வகையிலும், 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தியும் கோவை தேர்தல் ஆணையம் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, கோவையில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் ரோபோவை வைத்து வாக்காளர்களை வரவேற்றது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
வாக்காளர்களை வரவேற்ற ‘டீனா’:
கோவை அரசு கலைக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள மாதிரி வாக்குச்சாவடியில், வாக்காளர்களை வரவேற்க ‘டீனா’ (Tina) என்று பெயரிடப்பட்ட பிரத்யேக ரோபோ பணி அமர்த்தப்பட்டுள்ளது. இந்த ரோபோ, வாக்குச்சாவடிக்கு வரும் வாக்காளர்களுக்குத் தட்டில் வைத்து சாக்லேட் மற்றும் பூக்களை வழங்கி இன்முகத்துடன் வரவேற்கிறது.
வழிகாட்டியாகவும் செயல்படும் ரோபோ:
Coimbatore, Tamil Nadu: A robot named ‘Tina,’ dressed in traditional attire, welcomed voters at a polling station in Coimbatore pic.twitter.com/zCe45lHxSI
— IANS (@ians_india) April 23, 2026
வெறும் வரவேற்பு அளிக்காமல், வாக்காளர்களுக்குத் தேவையான வழிகாட்டுதல்களையும் இந்த ரோபோ வழங்குகிறது. இதிலுள்ள ஸ்பீக்கர் மூலமாக வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட என்னென்ன ஆவணங்களைக் கொண்டு வர வேண்டும். வாக்குச்சாவடி மையத்தில் செய்யப்பட்டுள்ள வசதிகள் என்னென்ன. 100 சதவீத வாக்குப்பதிவின் அவசியம் போன்ற தகவல்களைத் தெளிவாகக் கூறுகிறது.
மாணவர்களின் படைப்பு:
இந்த ரோபோவை கோவை அரசு கலைக் கல்லூரியின் முன்னாள் மாணவர்களும், தற்போது பயிலும் மாணவர்களும் இணைந்து உருவாக்கியுள்ளனர். வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, வாக்களிப்பதில் ஒரு புதிய உத்வேகத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
பொதுமக்கள் ஆர்வம்:
வாக்குச்சாவடியில் ரோபோ இருப்பதைக் கண்ட வாக்காளர்கள், குறிப்பாக இளைஞர்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்கள் மிகுந்த ஆச்சரியமடைந்தனர். பலர் இந்த ரோபோவுடன் ஆர்வமாக செல்பி எடுத்து மகிழ்ந்தனர். இது போன்ற புதுமையான முயற்சிகள் வாக்குப்பதிவு சதவீதத்தை அதிகரிக்க உதவும் எனத் தேர்தல் அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
கோவையில் ஒரு பக்கம் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், இந்த ‘ரோபோ’ வரவேற்பு தேர்தல் களத்தில் ஒரு சுவாரசியமான அங்கமாக மாறியுள்ளது.
புதுமையான அனுபவம்:
வாக்களிக்க வந்த முதியவர் ஒருவர் கூறுகையில், “ரோபோ சாக்லேட் கொடுத்து வரவேற்றது புதுமையாக இருந்தது. இதைப் பார்ப்பதற்காகவே எனது பேரப் பிள்ளைகளையும் அழைத்து வந்தேன்” என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். மாணவர்கள் குழுவின் இந்த முயற்சியைத் தேர்தல் அதிகாரிகள் பாராட்டியதோடு, எதிர்காலத்தில் மற்ற முக்கிய வாக்குச்சாவடிகளிலும் இதுபோன்ற வசதிகளைச் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.
மேலும் படிக்க: Tamil Nadu Election 2026 LIVE: தமிழ்நாட்டின் தேர்தல் திருவிழா.. வாக்குப்பதிவு விறுவிறுப்பு