முதல் தேர்தலிலேயே 108 இடங்களை பிடித்த தவெக.. 73 இடங்களுடன் எதிர்க்கட்சியான திமுக..
Tamilnadu election result: இறுதியாக தவெக 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. திமுக கூட்டணி 74 இடங்களை பெற்று எதிர்கட்சியாக உருவெடுத்துள்ளது. அதிமுக கூட்டணி 53 இடங்களை பெற்றது. இதன் மூலம் அதிக இடங்களை பெற்ற தனிப்பெரும் கட்சியாக தவெக உருவெடுத்தது.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக கடந்த ஏப்.23ம் தேதி நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. இதில், தமிழகமே எதிர்பாராத பல திருப்பங்கள் நிறைந்ததாக அமைந்தது. இந்த தேர்தலை புதிதாக தொடங்கப்பட்ட விஜய்யின் தவெக தனித்து களம் கண்டது. திமுக காங்கிரஸ், தேமுதிக, கம்யூனிஸ்டு, விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகளுடனும், அதிமுக, பாஜக, பாமக, அமமுக உள்ளிட்ட கட்சிகளுடனும் களம் இறங்கின. நாம் தமிழர் கட்சி வழக்கம்போல் தனித்து போட்டியிட்டது. இப்படியாக நான்கு முனைப் போட்டியாக தேர்தல் களம் இருந்தது. மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 4,034 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர்.
இதையும் படிக்க: இலட்சியமும் கொள்கையும்தான் முக்கியமே தவிர, வெற்றி தோல்விகள் மட்டுமல்ல – திமுக தலைவர் ஸ்டாலின்..
திமுகவைவ பின்னுக்கு தள்ளிய தவெக:
தமிழகத்தில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 5.73 கோடியாகும். இதில் 4 கோடியே 87 லட்சத்து 919 பேர் வாக்களித்தனர். இதுவரை தமிழக வரலாற்றில் இல்லாத அளவுக்கு 85.10 சதவீதம் வாக்குகள் பதிவானது. தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணுவதற்காக 62 மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. வாக்குகள் எண்ணும் பணி நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதன் முடிவுகள் வரத்தொடங்கியதும், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் அதிக வாக்குகளை பெற்று முன்னிலை என்ற அறிவிப்பு வெளிவந்தது. பொதுவாக தபால் ஓட்டுகளில் எப்போதும் திமுக தான் முன்னிலை பெறும். ஆனால், இந்த முறை திமுகவை பின்னுக்குத் தள்ளி தவெக முந்தியதால், இந்த தேர்தலில் வரலாறு மாற போகிறது என்ற நிலை உருவானது.
முன்னிலை பெற்ற தவெக:
காலை 8.30 மணியளவில் மின்னணு வாக்கு எந்திரத்தில் உள்ள வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. முதல் சுற்று முடிவிலே தவெக 90 இடத்திற்கு மேல் முன்னிலை வகித்தது. 2-வது இடத்தில் அதிமுகவும், மூன்றாவது இடத்துக்கு திமுகவும் சென்றது. முதல் சுற்றின் முடிவிலேயே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் பின்னடைவை சந்தித்தார். அதே நேரம் தான் போட்டியிட்ட பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளிலும் விஜய் முன்னிலை வகித்தார். அதேபோல் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எடப்பாடி தொகுதியில் முன்னிலை பெற்றார்.
தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தவெக:
இறுதியாக தவெக 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. திமுக கூட்டணி 74 இடங்களை பெற்று எதிர்கட்சியாக உருவெடுத்துள்ளது. அதிமுக கூட்டணி 53 இடங்களை பெற்றது. இதன் மூலம் அதிக இடங்களை பெற்ற தனிப்பெரும் கட்சியாக தவெக உருவெடுத்தது. தமிழகத்தில் 1952 முதல் 1967-ம் ஆண்டு வரை காங்கிரஸ் ஆட்சி செய்தது. அதன்பின் தற்போது வரை, அதாவது 59 ஆண்டுகளாக திமுகவும், அதிமுகவும் மாறி, மாறி ஆட்சி செய்தன. அவர்கள் இருவரும் வேறு யாருக்கும் வாய்ப்புத் தரவில்லை. ஆனால் முதல் முறையாக திராவிட கட்சிகளுக்கு மாற்றாக, போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே தவெக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்து இருக்கிறது.
எதிர்க்கட்சி அந்தஸ்தில் திமுக:
திமுக தனித்து 59 இடங்களில் வெற்றி பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றாலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தோல்வி அடைந்து விட்டார். அதே நேரம் அமைச்சரவையில் இடம் பெற்று இருந்த உதயநிதி ஸ்டாலின், ஐ.பெரியசாமி, எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், அனிதா ராதாகிருஷ்ணன், சேகர்பாபு, கே.என்.நேரு, ராஜகண்ணப்பன், சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, மெய்யநாதன், ரகுபதி உள்ளிட்ட அமைச்சர்கள் வெற்றி பெற்று இருந்தனர். துரைமுருகன், மா.சுப்பிரமணியன், மூர்த்தி, பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன், தா.மோ.அன்பரசன், நாசர் உள்ளிட்ட பல அமைச்சர்கள் தோல்வி அடைந்துள்ளனர். புதிய சட்டமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவராக உதயநிதி ஸ்டாலின் வருவார் என்று தெரிகிறது.
இதையும் படிக்க: சென்னை மற்றும் வட மாவட்டங்களில் எடுபட்ட தவெக ஃபார்முலா.. டெல்டா மாவட்டங்களிலும் கைகொடுத்ததா?
ஆட்சி அமைக்க உரிமை:
மொத்தமுள்ள 234 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவை. ஆனால் தவெகவுக்கு, அந்த அளவுக்கு பெரும்பான்மை இல்லை. இருந்தாலும் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள விஜய் ஆட்சியை அமைக்க ஆளுநரிடம் உரிமை கோருவார் என்று தெரிகிறது. ஆளுநரும் அதற்கு அனுமதி அளிப்பார். அதனால் விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்றபின் சட்டமன்றத்தை குறிப்பிட்ட தினங்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்.